குருவுக்கு வணக்கம்
குருவுக்கு வணக்கம்
தடமறியா நிலையில் இருந்த என்னைத் – தணலில்
புடம் போட்ட தங்கமாய் ஜொலிக்க வைத்தாய்
குடத்திலிருந்த விளக்காய் இருந்த என்னை – உயர்
குன்றிலிட்ட விளக்காய் ஒளிரவைத்தாய் .
எஞ்ஞானமும் இன்றி இருந்த என்னை
விஞ்ஞானமும் , உலக விஷய ஞானமும் – புனித
மெய்ஞானமும் தந்து மனத்திருந்த
அஞ்ஞானமும்அகற்றி அறிவு தந்தாய் .
ஏணியாய் இருந்தென்னை ஏற்றிவிட்டாய்
தோணியாய் எனைக் கரை சேர்த்துவிட்டாய்
ஞாநியாய் எனை நீ ஆக்கி வைத்தாய் – இந்
நானிலம் தந்தாலும் ஈடாகுமா .
புவியெலாம் எனக்குப் புரிய வைத்தாய் – கற்றோர்
அவையெலாம் என்னை அறிய வைத்தாய்
சிவிகையில் என்னை அமர வைத்தாய் – கரம்
குவித்து உன்னை தினம் வணங்கிடுவேன்.
சிலேடை சித்தர் சேது சுப்ரமணியம்
30.01.2015