குடியரசு தின வாழ்த்துக்கள்
குடியரசு தின வாழ்த்துக்கள்
முடியாட்சி முடிந்து குடியாட்சி மலர்ந்தது .
மன்னராட்சி மறைந்து மக்களாட்சி மலர்ந்தது.
எழுபத்திரண்டாம் ஆண்டு எழுச்சியுடன் மலரட்டும்.
இதற்காக உழைத்தவர்கள் இதயங்கள் மகிழட்டும்.
இன்று இந்தக் குடிமகனின் இதயத்தில் இருக்கின்ற
இனிய எண்ணங்களைஇங்கே எடுத்துரைப்பேன் .
குடியாட்சி என்பது குடிமக்களுக்காக ,
குடி மக்கள் தேர்ந்தெடுத்த குடிமகன்கள் ஆள்வது
குடிமக்களை அழிக்கும் குடியால் வரும் பணத்தில்
குடியாட்சி நடக்கும் நிலை முடிவுக்கு வரவேண்டும்.
குடிமக்கள் வரிப்பணத்தைக் கொள்ளையடித்து வாழும்
கூட்டத்தின் ஆட்டங்கள் முடிவுக்கு வரவேண்டும்.
இனம், மொழி, மதமெனவும் இன்னபிற வழிகளிலும்
குடிமக்களிடை பிரிவினைக் கொள்ளியைப் பற்றவைத்து
குளிர்காயும் குள்ளநரிக் கூட்டங்கள் ஒழியட்டும்.
குடிமக்களுக்கு இலவசங்கள் கொடுத்து வாக்கு வங்கி
அடிமைகளாய் நினைக்கின்ற கொடுமை மறையட்டும்.
பஞ்சம், லஞ்சம், வஞ்சமின்றி பணிசெய்யும் ஊழியரால்
நெஞ்சம் நிறையட்டும் நேர்மையிங்கு நிலை பெறட்டும்.
எதிரிநாட்டார் எறியும் எலும்புத்துண்டுகளுக்காக
தாய்நாட்டை விலைபேசும் தாழ்நிலை மாறட்டும்.
தேசபக்தி , தெய்வபக்தி , தொழில் பக்தி கொண்டோரால்
தேசத்தின் வளர்ச்சியில் தேக்கநிலை மாறட்டும்.
தொழிலும் , விவசாயமும் தொய்வின்றி முன்னேறி
பொருளாதார நிலை பொலிவோடு வளரட்டும்.
பார்ப்போரைக்கவரும் நம் பண்பாடும் , கலாச்சாரமும்
பார்போற்ற விளங்கட்டும் பாரதம் சிறக்கட்டும்.
ஊடகங்கள் பேதமின்றி உண்மை உரைக்கட்டும் .
வேடதாரிகளின் பொய்மை வேடங்களைக் கலைக்கட்டும்.
எல்லைக்காகும் பணியில் இன்னரும் தியாகம்செய்
வீரர்களின் புகழ் விண்ணளவு ஓங்கட்டும் .
நீதித்துறை தாமதமின்றி நீதி வழங்கட்டும்.
நீதி வழங்குதலில் தர்ம நியாயம் நிலவட்டும்.
இத்தனையும் நடந்து இத்தரணி போற்றுகின்ற
முத்தனைய நாடாக முன்னேற்றம் கண்டுவிட்டால்
எத்தனையோ மாந்தர்கள் ரத்தம் சிந்தி பெற்ற ,
சுதந்திரமும், குடியரசும் பொருள் நிறைந்ததாகுமன்றோ !
குடியரசு தினக் கனவுகளுடனும் , வாழ்த்துக்களுடனும்
சிலேடை சித்தர் சேது சுப்ரமணியம்
26.01.2021.