சிறு வெளிச்சக்கீற்றும் நம்பிக்கை அளிப்பதே அல்லவா?
சிறு வெளிச்சக்கீற்றும் நம்பிக்கை அளிப்பதே அல்லவா?
சில ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவிலிருந்து வந்திருந்த இடதுசாரி இயக்கத் தலைவர் ஒருவரைப் பேட்டி கண்டேன். அங்குள்ள ஜனநாயகக் கட்சிக்கும் குடியரசுக் கட்சிக்குமான வேறுபாடு பற்றிக் கேட்டேன். அதற்கு அவர், ”அடிப்படையான வர்க்கக் கண்ணோட்டத்தில் மாறுபாடு இல்லை. ஆனால் ஜனநாயகக் கட்சியின் ஆட்சியில் உண்மையிலேயே ஜனநாயகம் மூக்சுவிட முடியும். எங்களைப் போன்றவர்கள் ஜனநாயகக் கட்சியின் ஆட்சியில் எங்கள் கருத்துகளைச் சுதந்திரமாகப் பேச முடியும்,” என்றார்.
தற்போது டிரம்ப் வீட்டுக்கு அனுப்பப்பட்டு, ஜோ பைடன் பொறுப்பில் ஆட்சி ஒப்படைக்கப்பட்டிருக்கிற மாற்றத்தை இந்தப் புரிதலோடுதான் அணுக வேண்டும் என்று கருதுகிறேன்.
ஒப்பீட்டளவில் மக்கள் நலன்கள், மனித உரிமைகள், எளியோருக்கான வாய்ப்புகள் இவற்றில் அக்கறையுள்ள இடதுசாரிச் சிந்தனையாளர்களும் முற்போக்காளர்களும் ஜனநாயகக் கட்சியில்தான் மிகுதியாக இருக்கிறார்கள். தனித்த கம்யூனிஸ்ட் கட்சி அங்கே ஏன் வலுவாக வளரவில்லை என்பதற்கான அதிகார ஒடுக்குமுறைகள் சார்ந்த வரலாறும், சமுதாயப் பொதுப்புத்தியில் கறையேற்றப்பட்ட உளவியலும் இருக்கின்றன. இந்தக் காரணத்தாலும் இடதுசாரிச் சிந்தனையாளர்கள் பலர் ஜனநாயகக் கட்சியில் இணைந்திருக்கிறார்கள்.
இப்போது ஜோ பைடன் அதிபராகப் பொறுப்பேற்றதும் உலக சுகாதார நிறுவனத்திலிருந்து அமெரிக்காவை விலகவைத்து நிதிப்பங்கீட்டை நிறுத்திய டிரம்ப் ஆணையைச் செல்லாததாக்கியிருக்கிறார். சுற்றுச்சூழல் சீர்கேடு என்ற பேரபாயத்தைத் தடுப்பதற்கான பாரிஸ் உடன்பாட்டிலிருந்து அமெரிக்காவை விலகவைத்த ஆணையை விலக்கிக்கொண்டிருக்கிறார். முஸ்லிம் நாடுகளிலிருந்து வருவோருக்கும் முஸ்லிம்களுக்கும் விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கியிருக்கிறார். இருக்கிற பொதுசுகாதாரக் கட்டமைப்பையும் சின்னாபின்னப்படுத்திய ஆணைகளை ஒழித்திருக்கிறார். வேலைகளுக்காக வந்த வெளிநாட்டவர்களுக்கான பச்சை அட்டை மறுபடி கிடைக்க வழி செய்திருக்கிறார். குழந்தைகள் குடியுரிமையின்றி வெளியேற வேண்டியிருக்கும் என்ற அவலத்திற்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். மெக்சிகோவிலிருந்து புகலிடம் தேடி வருகிற எளிய மக்களைத் தடுப்பதற்காகக் கட்டுப்பட்டு வந்த சுவருக்கான நிதியை நிறுத்தியிருக்கிறார். முந்தைய ஆட்சி புறக்கணித்த கொரோனா பரவல் தடுப்புக்கான முகக்கவசம், சமூக இடைவெளியைக் கட்டாயமாக்கியிருக்கிறார்.
இவ்வாறாக உலகம் வரவேற்கத்தக்க 15 ஆணைகளில் கையெழுத்திட்டிருக்கிறார். இந்த நிர்வாக ஆணைகள் இப்போதைக்கு முக்கியம், விரைவில் இவை சட்டமாக்கப்படும் என்று அறிவித்திருக்கிறார்.
டிரம்ப் ஆட்சியின்போது அவருடைய ஏற்புடன் பல நாடுகளில் மக்களுக்கு எதிரான சட்டங்கள் கொண்டுவரப்பட்டதுண்டு. இப்போது அப்படிப்பட்ட நடவடிக்கைகளுக்கு ஆதரவிருக்காது என்பதோடு எதிர்ப்பும் இருக்கும் என்று உலக அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.
இந்தியா உட்பட உலகெங்கும் ஆக்கப்பூர்வமான தாக்கங்களுக்கு வாய்ப்பிருக்கிறது என்றும் கூறுகிறார்கள்.
பெரும்புரட்சி நிகழ்ந்துவிடவில்லைதான். ஆனால் சிறு வெளிச்சக்கீற்றும் நம்பிக்கை அளிப்பதே அல்லவா?
-அ. குமரேசன், ஊடகவியலாளர்