குடிகொண்டே இருக்கின்றார்
குடிகொண்டே இருக்கின்றார்
[ எம். ஜெயராமசர்மா .. மெல்பேண் ]
பார்வியக்கப் பாரதத்தை
பார்க்கவைத்த பேராக
பாரததத்தின் பிரதமராய்
நேருவந்து நின்றாரே
பார்நடுங்க வைத்தபெரும்
பேர்போன வெள்ளையரை
வேர்பிடுங்கி எடுத்தாரே
வித்தகராம் நேருமகான்
ஊர்விடுங்கி உலையிலிட்டு
ஊர்கோலம் போனஅந்த
பார்பிடுங்கும் வெள்ளையரின்
படைநடுங்க வைத்தாரே
சேர்போட்டு அழையென்று
சிரச்சேதம் செய்தவரை
ஊர்விட்டு விரட்டியதை
உலகமே வியந்ததுவே
பணம்படைத்த குடும்பமதில்
பண்டிதர் பிறந்தாலும்
பாரதத்தாய் விடுதலைக்காய்
பலவிதத்தில் உழைத்தாரே
ஏவலுக்கும் காவலுக்கும்
எத்தனைபேர் இருந்தாலும்
எங்கள்நேரு அதைவிடுத்து
ஏற்றனரே சிறைவாசம்
சிறைசென்ற போதுமவர்
பொறையிழந்து போகாது
குறியொன்றே மனங்கொண்டு
நெறியுடனே செயற்பட்டார்
சிறையிருந்து எழுதியவை
சிறப்புடைய நூலாச்சு
அனைவருமே படிப்பதற்கு
அறிவுநிறை கருத்தாச்சு
காந்திமகான் வழிநடந்து
காணநின்றார் பாரதத்தை
சாந்தி சமாதனம்காண
ஏங்கிநின்றார் நேருமகான்
வழித்தடங்கள் மாறிடினும்
மனதுமட்டும் மாறவில்லை
மாநினைப் போடுநின்று
மகான்நேரு செயற்பட்டார்
யாரெதிர்த்து நின்றாலும்
பாரதத்தின் விடிவுக்காய்
நேருவைத்த திட்டங்கள்
நீண்டநாள் நிலைத்தனவே
பதினேழு வருடங்கள்
பாரததத்தின் பிரதமராய்
பண்டிதர் நேருமகான்
பக்குவமாய் இருந்தாரே
குழந்தைகள் தினமதிலே
குதூகலமாய் இருப்பவர்தான்
குடும்பமாம் பாரததத்தின்
குலவிளக்காம் நேருமகான்
ரோஜாவாய் இருக்குமெங்கள்
ராஜாவாம் நேருமகான்
குழந்தைமனம் எல்லாமே
குடிகொண்டே இருக்கின்றார்
Tags: குடி