கார்ல் மார்க்ஸ் 200
கார்ல் மார்க்ஸ் 200
அன்பின் சுடரில் தெறிக்கிறார் மார்க்ஸ் !
எஸ் வி வேணுகோபாலன்
மனித மனங்களுக்கு
இடையேயான குறுக்குச் சுவர்
நழுவிக் காணாது போகும்
ஒவ்வொரு சாத்தியத்திலும்
நெருக்கமாகிறார் மார்க்ஸ் !
சமூகத்தின் இடையேயும் குறுக்குச் சுவர்கள்
நாடுகள் இடையேயும்
பின்,
உள்ளோர்க்கும் இல்லார்க்கும் இடையேயும்
அப்புறம்,
அடக்குவோர்க்கும் அடிமைகளுக்கும்
ஆணாதிக்க மனத்துக்கும் பாலின சமத்துவத்திற்கும்
அராஜக சாதிய மேட்டிமைக்கும் மனிதர்களுக்கும்
இடையே
சுவர்கள் சுவர்கள் சுவர்கள் !
சுவர்களை இடிக்க வேண்டியதில்லை
சுவரொட்டிகளுக்கு வேலையில்லை
சுவர் மீது ஏதும் கிறுக்கவோ கூடத் தேவையில்லை
குறுக்குச் சுவர்கள் எத்தனை
அவமானகரமானவை என்பதை
இந்தப் பக்கத்தில் இருப்போர் உணர்வதைவிடவும்
பாதுகாப்பு அற்றவை என்பதை
அந்தப் பக்கம் இருப்போர் உணரச் செய்தாலே போதுமானது.
விரட்டப்படும் இருள் மறைவதில்லை
பதுங்க இடம் தேடுகிறது
வெளிச்சத்தோடு இணைக்கப் பாருங்கள் இருளை,
ஒளிமயமாகும் உலகம்!
சூழ்ச்சி, பொறாமை, பதட்டம், ஆத்திரம்
எல்லாம் இருளின் குழந்தைகள் –
அன்பின் ஒளி அவற்றை
ஆரத்தழுவி அமுதூட்டி
கண்கள் கசியச் செய்துவிடுகிறது
மறுப்போரின் கள்ள மௌனத்தின்முன்
கேட்போரின் குரல் கலகமாக ஒலிப்பது
தவிர்க்க இயலாதது –
அன்பின் பெருவெள்ளம் ஆர்ப்பரிக்கவே செய்யும் !
தீர்க்கமான கண்கள்
அகன்ற நெற்றி
வர்க்க போராட்டங்களின்
வரலாற்றுச் சுருக்கமாகவே
பற்றிப் படர்ந்திருக்கும் தாடி
காலங்களைக் கடந்த
நம்பிக்கை வெளிச்சமாகத்
துலங்கும் அன்பின் சுடரில்
தெறிக்கிறார் மார்க்ஸ்!
****************
தீக்கதிர்: 05 05 2018
Tags: கார்ல் மார்க்ஸ் 200