காத்திருக்கிறோம் அந்தக் காலத்திற்கு….
மார்ச் 8: உலக பெண்கள் தினம்
காத்திருக்கிறோம் அந்தக் காலத்திற்கு….
எஸ் வி வேணுகோபாலன்
தலைமை ஆசிரியராக இருந்த தாத்தா
வாங்க இயலாது மரித்துப்போன
ஓய்வூதியத்தைப்
போராடி வென்றெடுத்த பாட்டியின் நினைவில்
பகிர்கின்றோம் மகளிர் தின வாழ்த்துக்களை!
படிப்பில், விளையாட்டில், வேலையிடத்தில்
அசாத்திய சாதனைகளை
ஓசையின்றி நிகழ்த்திக் கொண்டிருக்கும்
பெண்களது பங்களிப்பின்
பெருமிதம் பொங்க உரைக்கிறோம்
மகளிர் தின வாழ்த்துக்களை!
சவால்கள் சூழ்ந்த களத்தில்
மிரட்சியின்றி வெளிப்பட்டு
மிக சாதாரணமாகக் கடந்துபோகும்
வீராங்கனைகளின் பெயரில் எதிரொலிக்கிறோம்
மகளிர் தின வாழ்த்துக்களை!
காத்திருக்கிறோம் –
குற்ற உணர்ச்சிகள் தவிர்த்த
கொண்டாட்ட பெருமிதமிக்க
பாலின சமத்துவம் நிலவும்
ஒரு காலத்திற்கு –
கம்பீரத்தோடு மகளிர் தின வாழ்த்துக்களை
கையளிப்பதற்கு!
**********
நன்றி: தீக்கதிர் (மார்ச் 8, 2018)
Tags: உலக பெண்கள் தினம்