எங்கே தொலைந்து போனது மனிதம்?
எங்கே தொலைந்து போனது மனிதம்?
உலகில் மனிதராய் பிறந்து விட்ட ஒவ்வொருவரின் வளர்ச்சியை குறித்து சிறப்பு தினங்கள் அறிவித்துள்ள உலகத்திடம் தான் கேட்கிறேன் எங்கே தொலைந்து போனது மனிதம்?
குழந்தைகள் தினம் என்கிறீர்கள்..சிரியாவில் கொத்து கொத்தாய் குழந்தைகள் தான் மடிந்து கொண்டிருக்கிறார்கள் எங்கே தொலைந்து போனது மனிதம்?
காதலர் தினம் என்கிறீர்கள்..ஆணவ கொலை என்னும் பெயரில் இளவரசனும்,சுவாதியும் துடிதுடிக்க கொல்லப்பட்டார்கள்…எங்கே தொலைந்து போனது மனிதம்?
மாணவர் தினம் என்கிறீர்கள்..தாம் கண்ட கனவை நினைவாக்க முடியாமல் மாநிலத்தில் முதலிடம் பிடித்தும் அனிதாவை நீட் என்னும் கயிறால் இறுக்கி கொலை செய்தீர்கள்..எங்கே தொலைந்து போனது மனிதம்?
முதியோர் தினம் என்கிறீர்கள்..கருணையே இல்லாத முதியோர் இல்லத்தில் உங்கள் வீட்டு முதியோர்களை சேர்த்து விடுகிறீர்கள்..எங்கே தொலைந்து போனது மனிதம்?
மகளிர் தினம் என்கிறீர்கள்..ஹெல்மெட் போடாததால் விரட்டி பிடித்து உஷா என்ற கர்ப்பிணி பெண்ணை நடுரோட்டில் எட்டி மிதித்து கொன்றீர்கள்..எங்கே தொலைந்து போனது மனிதம்?
காவல்துறை உங்கள் நண்பன் என்றீர்கள்..கர்ப்பிணி பெண் உஷாவின் சாவுக்கு நீதி கேட்டு போராடிய மக்களின் மண்டையை உடைத்தீர்கள்..எங்கே தொலைந்து போனது மனிதம்?
காக்கிக்குள் கருணை இருக்காது என்றாலும் மனிதம் கூடவா இருக்காது?எங்கே தொலைந்து போனது மனிதம்?
-கீழை ஜஹாங்கீர் அரூஸி
Tags: மனிதம்