கவிதையும் கற்பனையும்

Vinkmag ad

கவிதையும் கற்பனையும்
( எம். ஜெயராமசர்மா …. மெல்பேண் )

கற்பனை என்னும் தேரில்
கவிதை வலம் நிகழுமாயின்
இப்புவி உள்ளார் எல்லாம்
இன்பமே எய்தி நிற்பார்

சொற்சுவை கொண்டு கம்பன்
சுந்தரத் தமிழில் செய்த
அற்புதக் கவிதை யாவும்
கற்பனை குவியல் அன்றோ

கம்ப நாடன் கற்பனையில்
கரு வண்ணன் ராமபிரான்
கவிதை எனும் தேரேறி
காலம் எலாம் வருகின்றான்

உம்பர் காதல் விஷயமெலாம்
உருப் பெற்றுக் கற்பனையாய்
உயர் கவிதையாகி நின்று
உலவுவதை நாம் அறிவோம்

வியாச பிரான் கற்பனையால்
விஸ்வரூபம் எடுத்த கதை
விலை மதிக்க முடியாத
வித்தகக் கவிதை ஆச்சே

காளி தாசன் கற்பனையில்
கவிதையெனும் மழை பொழிந்து
கற்பவரின் மனம் எல்லாம்
கற்கண்டாய் இனித்த தன்றோ

தேமதுரத் தமிழ் தந்த
திறல் மிக்க பாரதியும்
கற்பனையாம் தேர் ஏறி
கவிதைகையில் கொண்டு வந்தான்

பாரதியின் கற்பனையில்
பார்த்ததெல்லாம் கவிதையென
பாரததத்தில் வந்ததனால்
படித்தவரே மலைத்தனரே

ஆண்டாளின் கற்பனைகள்
அருட்கவிதை ஆகிநின்று
ஆண்டவனை அடைவதற்கு
அருந்துணையாய் இருந்ததன்றோ

நால்வரது கற்பனையால்
நற்றமிழில் கவிதைவெள்ளம்
நாடெங்கும் ஓடியதால்
நந்தமிழும் இனித்ததன்றோ

சேக்கிழார் கற்பனையால்
சிறப்பான கவிதைவந்து
சீரடியார் பெருமையெலாம்
செப்பியதை நாடறியும்

கச்சியப்பர் கற்பனையில்
வந்துதித்த கவிதையெலாம்
கந்தனது அருள்சொல்லும்
காவியமாய் ஆகிற்றே

கவிகண்ணதாசன் அவன்
கற்பனையைத் தேராக்கி
கவிதைவலம் வந்ததனை
காலம்தான் மறந்திடுமா

கண்ணதாசன் கற்பனையில்
கணக்கின்றி கவிதைத்தேன்
உண்ணவுண்ணக் கிடைத்தமையை
உள்ளந்தான் மறந்திடுமா

பொட்டுவைத்த வாலிவந்து
தொட்டுநின்ற கற்பனைகள்
அத்தனையும் கவிதையெனும்
அழகுதனை பெற்றதன்றோ

கறுத்தநிற வைரமுத்து
கற்பனையில் வந்துதித்த
தமிழ்க்கவிதை அத்தனையும்
தானுயர்ந்து நிற்குதிப்போ

கற்பனைக் கடலுள்மூழ்கி
கணக்கிலா கவிதைதந்து
நிற்கின்ற உள்ளங்கொண்டோர்
நெடுதுநாள் வாழவேண்டும்

கற்பனை வரண்டுபோனால்
காலமும் இருண்டேபோகும்
கற்பனை சேரும்போதே
கவிதையும் உயர்ந்தேநிற்கும்

அற்புதம் செய்யுமந்த
அனைவரும் வாழ்கவென்று
கற்பனையோடு நின்று
கவிதையால் வாழ்த்துகின்றேன் !

News

Read Previous

வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்

Read Next

ஊருணியில் கலக்கும் கழிவு நீர்: கிராம மக்கள் புகார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *