எழுத்தின் சேவை அழியாது !

Vinkmag ad

 

    ( முதுவைக் கவிஞர், ஹாஜி மௌலவி உமர் ஜஹ்பர் பாஜில் மன்பயீ )

 

ஒவ்வொரு எழுத்தும் ஒரு துளி உதிரம் !

ஒவ்வொரு சொல்லும் உணரும் புலன்கள் !

ஒவ்வொரு பக்கமும் செயலின் உறுப்பு !

ஒவ்வொரு நூலும் அழகிய குழந்தை !

எவ்விதம் கருவோ அவ்விதம் பிறப்பு !

எப்படிக் காப்போ அப்படிப் படைப்பு !

இவ்விதம் அமைத்து வெளிவரும் நூற்கள்,

எழில்மனு வாழ்வின் படிகள் ! பலன்கள் !!

 

 

எண்ணுவா ரெல்லாம் எழுதுவா ரில்லை !

எழுதுவ தெல்லாம் ஏற்றமா யில்லை !

எண்ணங்க ளெல்லாம் எழுத்தாகும் போது,

ஏடுகள் வாங்கிப் படிப்போரு மில்லை !

மண்ணிலே விரல் போட்டு எழுதிட்ட காலம் ,

மனதிலே விதை போட்டு பயிராச்சு சரிதம் !

கண்முனே கணினியும் இணையமும் இருந்தும்

காவியம் படைக்கக் கருப்பொருள் காணோம் ?

 

 

சாலையின் கல்வெட்டும் சரித்திரம் பாடும் !

சங்கமும், அரசரும் அதை காக்கக் கூடும் !

ஓலையில் எழுதினார் நூறாண்டு காலம் !

ஓடியும் ஒளியவோ அழியவோ காணோம் !

காலையில் எழுதினால் மாலையில் காணோம் !

கருப்பொருள் குற்றமா? கண்டுநீர் கூறும் !

வேலைக்கு ஒரு நூலை வெளியிட்ட போதும்,

விடியலோ வெளிச்சமோ வரவில்லை ! ஏனோ

 

 

பக்கமோ, பத்தியோ பெரிதல்ல தோழா !

படைத்திடும் படைப்பதன் உயிரோட்ட மென்ன ?

மக்களின் குறைகளைக் குத்தூசி கொண்டு

மடிந்திடும் வரையிலும் குத்தியே கொல்லு !

எக்காள மிடுவோர்கள் இனம்மாறு வரையும்

எழுச்சியைப் புரட்சியை எடுத்து நீ சொல்லு !

தக்கவை தனக்கொரு சரித்திரம் என்று !

தரணியே உன்பாதம் பணிந்திடும் இன்று !

 

 

தன்னிக ரில்லாத தமிழ்மொழி உண்டு !

தனக்கென இலக்கண இலக்கியம் உண்டு !

உன்னிடம் மாபெரும் வரலாறும் உண்டு !

உலகிலே அதற்கெனத் தனியிடம் உண்டு !

உன்மனக் கோட்டையின் எண்ணங்கள் குழைத்து,

வடித்திடு புதுப்புதுத் தூரிகை எடுத்து !

உன்னோடு செத்திடும் உணர்வுகள் வேண்டாம் !

உள்ள(த்) தை உடைத்து நீ வெளியாக்கு இன்று !

 

 

பாண்டிய மன்னனோ மாநகர் மதுரையில்

பைந்தமிழ் காத்திட சங்கமும் அமைத்தான் !

ஆண்டுகள் ஆறாய் மலையகம் மீதில்

அழகுடன் பாரதி தாசனின் பெயரில்

மாண்புயர் டத்தின்ஸ்ரீ இந்திராணி அன்னை

மகிழ்வுடன் அமைத்தார் எழுத்தாளர் தினத்தை !

ஆண்டுகள் கோடி அழிந்தாலும் அழியும் !

அன்னையின் சேவையும் புகழென்றும் தொடரும் !

News

Read Previous

சீன வானொலி : தமிழ்ப் பிரிவின் பொன்விழாவுடன் நட்புறவு எனும் கட்டுரைப் போட்டி

Read Next

இஸ்லாத்தில் தீவிரவாதத்திற்கு இடமில்லை : டாக்டர் ஜாபருல் இஸ்லாம் கான்

Leave a Reply

Your email address will not be published.