எழுதுகோல் !

Vinkmag ad

 எழுதுகோல் !

( பொற்கிழிக் கவிஞர் மு. ஹிதாயத்துல்லா, இளையான்குடி )

  • எழுதுகோல் !

கண்களால்  

உழவு செய்வது

காதல் !

  • காகிதங்களில்  

உழவு செய்வது …  

எழுதுகோல் !

  • நிர்வாண வெள்ளைக்கு

எழுத்து ஆடை அணிவிப்பது

எழுதுகோலே !                  

  • யார் மூப்பு அடைந்தாலும்      

எழுதுகோலுக்கு மூப்பில்லை !

  • எழுதுகோல் …

சமுதாயத்தைப் 

புரட்டிப்போடும் … 

நெம்புகோல் !

  • இதற்கு

 எல்லா மொழியும் 

தெரியும் !

 ஆனால் …………………

பேசத்தெரியாது !

  • அதே சமயம்   

 ஜம்பமாய் பேசும் வாய்களை   

மூடச்செய்யும் வல்லமை 

எழுதுகோலுக்கு உண்டு !

  • எழுதுகோல் …      

தெய்வம் ஒன்றென    

உரத்துச் சொல்லும்  

 ஒற்றை நாவு !

  • மனிதர் நாவெல்லாம்        

 உணவின் ருசியைச்   

 சொல்லும் !     

  • ஆனால் …      

எழுதுகோலின்  

நாவு மட்டும் தான் …      

ஏழைகளின் …     

பசியையும் சொல்லும் !

  • எழுதுகோல்       

நம்சட்டைப் பையில்     

இருக்கும் …    

ஒற்றை மினாரா !

  • இது மின்னுவது …            

 ஒளி விளக்காய்    அல்ல;   

மொழி விளக்கால் !

  •  செடியில் , கொடியில் ..

பூ பூக்கும் !  

முள்ளில்        பூ பூக்குமா … ?    

பூக்கும் !

பேனா  முள்ளில்  

எழுத்து மலர்கள் …        

பூக்கிறதே !

  • உதிரும் உறவுகளின் மத்தியில்    

உதிராத உறவு   

எழுதுகோலே !                                                    

  • சங்கையானவர்களே     

எழுதுகோலின்      

மூடியைத் திறக்கிற போதே 

பொய்களுக்கு ……………

காய்ச்சல் வரவேண்டும் !

  • என் எழுதுகோல்      

மலடு அல்ல   

சமுதாய நலன்களைச் சொல்ல     

எப்போதும் கர்ப்பமாயிருக்கும்     pen

  • என் எழுதுகோல் …      

ஒரு மாதிரி     

வேறு எந்த மையை      

ஊற்றினாலும் …       

ஏற்காது ! எழுதாது !    

ஹக்கான   

உண்மையைத் தவிர !

  • பாரதி      

கண்ணம்மாவிடம் …      

உன்னைக் கரம்பிடித்தேன்     

வாழ்க்கை         

ஒளி மயமானதடி – என்றான் !       

நான் சொல்வேன்         

இந்த pen- ஐக் கரம் பிடித்தேன்    

பிரபலம் ஆனேன் என்று !

  • மாவீரன் திப்புவின்   

எழுதுகோல்        

அந்த சிருங்கேரி மடத்தோடும்       

சினேகம் வளர்த்தது ! 

மதம் தாண்டியும்      

மனிதநேயம் விதைத்தது !

  • எட்டயபுரக் கவிச்சிங்கம்     

நம் பாரதியின் எழுதுகோல்        

நாமிருக்கும் நாடு …       

நமதென்ற வெப்பத்தை          

உணர்த்தியது !

  • புரட்சிக்கவி பாரதிதாசனின்            

எழுதுகோல்        

 தமிழ் உணர்வின் வாசலைத்       

திறந்து வைத்தது !                              

  • சங்கைக்குரிய      

கவிக்கோ, கவிமாமணியார்      

எழுதுகோல்கள்      

இறவாத இலக்கியங்களைத்         

தந்து கொண்டிருக்கிறது !

  • ஆகவே …        

எழுதுகோல் என்பது        

வேறு எதுவும் அல்ல ;          

  • நம் தோழமை !            

தீமைகளைக் கிழிக்கும்                

கூர்மை ஆயுதம் யென்பேன் !    

என்ன … சரிதானே !         

நன்றி !

( சென்னை இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் மூன்றாவது மாநில மாநாடு செம்டம்பர் 30, அக்டோபர் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் குற்றாலம் மற்றும் தென்காசியில் நடைபெற்றது.

02.10.2011 அன்று தென்காசி இசக்கி திருமண மண்டபத்தில் நடைபெற்ற கவியரங்கத்தில் எழுதுகோல் என்னும் தலைப்பில் இளையான்குடி தமிழ்மாமணி கவிஞர் மு. ஹிதாயத்துல்லாஹ் ( மு. சண்முகம் ) அவர்கள் வாசித்த கவிதை )

கவிஞரின் தொடர்பு எண் : 99763 72229

அருமையான கவிதை..

எழுதுகோல் 

இருண்ட இதயங்களின் திறவு கோல்
வறண்ட உள்ளங்களின் உறவுகோல்
சிதைந்த இதயங்களின் உதவுகோல்
செந்தமிழ் ஆளுகின்ற செங்கோல்..

வழங்கிய உங்களுக்கு நன்றி…

kaviri61@gmail.com

News

Read Previous

கவிதை : லால்பேட்டை மௌலவி அன்சாரி

Read Next

இறையருளும் மனித முயற்சியும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *