ஊடகம் — கவிமகன் காதர் (எ) மு.ச. அப்துல் காதர்
ஊடகம் !
நிழல்களை உரசுவதல்ல …
நிஜங்களை ஊடுருவிச் செல்வது !
எத்தனை முகங்கள் உனக்கு?
எழுத்தென, ஒலியென, ஒளியென,
காற்றில் கலக்கும் அலையென,
கல்லோ மண்ணோ எதுவுமில்லாமல்
கணிணியில் இணைக்கும் தளமென
இன்னும் எத்தனை முகங்கள் உனக்கு?
இருபக்கம் கூர்கொண்ட
இரும்புக்கத்தி !
இதயத்தைத் திறக்கவும்,பிளக்கவும்
இமைக்கின்ற பொழுதுக்குள்
இமயத்தை தகர்த்து விடும்
காகிதத்தில் செய்திட்ட
கனரக ஆயுதங்கள் !
இருந்தும் ஏன்
நடிகைகளின் கதைபேசும்
சதை வியாபாரியாக
அக்கிரமம் சமைக்கின்ற
அமெரிக்க அடிமையாக,
இஸ்ரேலின் காலடியில்
இழிநிலைக் குப்பையாக
இரைந்து கிடக்கின்றாய் !
சிச்சீ இறந்து கிடக்கின்றாய் !
ஏய் ஊடகதர்மமே ! உந்தன்
மற்றொரு பேரென்ன பாபரி மஸ்ஜிதா?
உன்னை இடித்து தகர்த்திட இலட்சம்
பேர்
ஆனால் கட்டி எழுப்பிட எவருமில்லை !
பெற்றவரே ஆனாலும்
பிறழாத நீதிதர
பகர்ந்திட்ட பெருமானார்
பொன்மொழிகள் புரிந்திட்டால்
அதுபோதும் ஊடகமே
உயிரோடு நீ வாழ !
நீதியின் வேர்கள் காயாதிருக்க
நெஞ்சுரத்தோடு செந்நீர் பாய்ச்சும்
நல்லசில ஊடகங்கள் மீது
நம்பிக்கை வைப்போம் ! அவற்றை
நம்பிக்கை வைப்போம் !
( நன்றி : மணிச்சுடர் ரமளான் சிறப்பு மலர் 2011 )