உறக்கம் என்றால் கேவலமா ?
உறக்கம் என்றால் கேவலமா ?
உனது தூக்கம் சிதறியதால்
உலகம் தூங்கக் கூடாதா ?
எனது தூக்கம் கெடுத்ததினால்
என்ன பயனை நீர்பெற்றீர் ?
மனது முழுதும் துயர்க்காடு !
மனித வாழ்வு பெரும்பாடு !
தினமும் மாறும் வாழ்வினிலே
திறமை மட்டும் போதாது !
உலகம் முழுதும் பார்ப்போமால்
உண்மை வாழ்வு புரிந்துவிடும் !
நிலவும் உலகில் அமைதியில்லை !
நிறைய உழைத்தும் பயனில்லை !
அலையும் வாழ்வில் தூக்கமில்லை !
ஆழ்ந்துப் படித்தால் வேலையில்லை !
எளிதாய் வாழ்ந்து மகிழ்வடைய
எதற்குத் தேவை சுறுசுறுப்பு ?
வாழும் உலகில் காண்பதெல்லாம்
வாழும் மனிதர் மேற்தோற்றம் !
பாழும் நோயில் வீழ்பவரில்
பலத்தைக் காட்டும் வீரனுண்டு !
சூழும் வறுமை நிலைக்கோட்டில்
துடிக்கும் மேதை பலருண்டு !
தாழும் நிலைமை அடைந்தவரில்
தரத்தால் சிறந்த மனிதருண்டு !
நாட்டில் ஆளும் அமைச்சர்கள்
நன்றாய்த் தூங்கி வாழ்கின்றர் !
காட்டில் வாழும் விலங்கினமும்
கவலை யின்றி தூங்குதப்பா !
கூட்டில் வாழும் கிளிகூட
குழந்தைப் போல வாழுதப்பா !
வீட்டில் வாழும் எந்நிலைமை …
விடியும் முன்பே சுப்ரபாதம் ….
உறக்கம் என்றால் கேவலமா ?
உரசிப் பார்ப்பீர் நின்தலையை !
பிறக்கும் குழந்தை தூங்கிவிட்டால்
பெரிதாய் மகிழ்வீர் முகம்விரிய !
மறக்கும் நினைவை உடையவரே !
மறந்துப் போச்சா நின்தூக்கம் ?
அரக்கன் போல மாறிடுவீர் !
அயர்ந்து நானோ தூங்கிவிட்டால்.
உருத்திடும் கண்கள் சிவந்திட
உருவமோ எலும்பாய் மாறிட
வருத்திடும் வலியில் துடித்திட
வாவென நோயை அழைக்கவா ?
மருத்துவ மனைக்குச் செல்லவா ?
மாத்திரை நின்போல் உண்ணவா ?
கருத்துடன் கேளும் யோசனை !
காலையில் என்போல் தூங்குவீர் !
– திரு சமரசம்