இலக்கு

Vinkmag ad

இலக்கு..

 

 எங்கே துவங்கி இங்குவந்தோம் 

எங்கே துவங்கி இங்குவந்தோம் 
       என்ன தான்நாம் செய்கின்றோம்
எங்கே சென்று முடிந்திடுவோம்
        என்று தான்நாம் அறியாமல்
எங்கே போய்க்கொண் டிருக்கின்றோம் 
        இலக்கே இல்லாப் பயணமாக
இங்கே வந்து இயற்றுகின்ற 
         இனிய பாடல் சொல்லட்டும்!
இலக்கினைப் பார்த்து வாழ்வினை நகர்த்து
          இடைவரும் சோம்பலை யொழித்து
கலக்கமே யின்றி யிலக்கினைப் பற்றிக்
      களத்தினு ளிறங்கினால் வெற்றி
விலக்கிடு ஐயம் யாவுமேத் துணிந்து
      விதைத்திடு மனத்தினுட் பதிந்து
துலங்கிடும் புதிய வழிகளும் உன்னால்
      துவக்கிடுப் புள்ளியும் முன்னால்
 
 
நோக்கியேத் தேவை யுணர்ந்திட வேண்டும்
        நோக்கமும் முடிவுறும் நாளை
ஊக்கமாய்த் தெரிவுச் செய்திட வேண்டும்
      ஊர்ந்திடும் தடையொழி(ய) வேண்டும்
ஆக்கமும் குறையக் காரணம் என்ன
      ஆர்வமாய்த் துலக்கிட வேண்டும்
தாக்கிடும் விபத்தில் பரிவுடன் வந்துத்
    தாங்கிடும் நண்பரும் வேண்டும்
 
 
திட்டமிட் டபடி யிலக்கினை நோக்கித்
       திண்ணமா யுழைத்திட வேண்டும்
வட்டமாய்க் கவலைச் சுற்றியே மனத்தை
     வதைத்திடா திருந்திட வேண்டும்
நட்டமே வந்துத் தடுத்திடமுனைந்தால்
    நம்பியே வென்றிட வேண்டும்
பட்டதும் தெளிவுக் கிட்டவும் வேண்டும்
   படைத்தவ னருளவும் வேண்டும்
 
 
மலரை வருடிச் செல்லும் மாலை நேரத் தென்றல்;
நிலவை கடந்து செல்லும் நீல வானின் மேகம்;
புலவர் யாப்பில் மனமும் புரளும் தன்மை காண்பீர்!
உலகில் மொழிகள் வேறாம்; உணர்வு என்றும் ஒன்றாம் !

திசைகள் வேறு வேறு; தெரியும் இலக்கு ஒன்றே
அசைக்கும் நிலையில் பாடும் அனைத்து மொழிகள் கவியும்
விசையாய் இயக்கும் மனதில் விந்தை கண்டால் புரியும்
தசையும் உடலும் சிலிர்க்கத் தானாய் மூளை விரியும்

வானின் பரப்பை மறந்து வண்ணப் பறவை காண்போம்
தேனின் சுவைக்கு நம்மைத் தீண்டும் தேனீ அறியோம்
மீனின் சுவைக்கு வேண்டி மீண்டும் தூண்டில் இடுவோம்
தானில் உணரும் ஞான தவம்போல் கவிகள் காண்போம்

 
 

“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்(பாடசாலை), அபுதபி(தொழிற்சாலை)

News

Read Previous

மலடு நீக்கும் அதிமதுரம்!

Read Next

உயர்ந்தோன் நீ ………..

Leave a Reply

Your email address will not be published.