இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களுக்கு… கண்ணீர் அஞ்சலி !
மறைந்த மாமேதை, இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி
அறிவியல் அறிஞர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களுக்கு…
அஞ்சலி ! அஞ்சலி ! கண்ணீர் அஞ்சலி !
தமிழ்மாமணி. கவிஞர் ஹாஜி மு.ஹிதாயத்துல்லாஹ்.
இளையான்குடி
அலைபேசி : 99763 72229
அன்பின் பெருந்தகையே !
கண்ணிய ரமலான்தான்
கடந்து போனது !
நீங்களுமா …?
நதிதான்
நடந்து போகும் என்றால் …
நீங்கள் நடந்ததெங்கே ..?
எங்களைக்
கடந்து போன தெங்கே ..?
மலர்களிலே … மல்லிகை
மனிதர்களிலே … நீங்கள்
மாமனிதர் !
மதம், இனம், நிறம் கடந்து
எல்லோரையும்
நேசித்த … நீங்கள்
எல்லோராலும்
நேசிக்கப்பட்டவர் !
அன்று,
மாணவர்களுக்கு
நேர்வழி காட்டத்தானே …
பயணித்தீர்கள் !
நீங்கள்
திரும்பி வரும் முன்னே
மரணம் முந்திக்கொண்டு
உங்களைத் தன்சீமைக்கு
அழைத்துப் போய் விட்டதே …!
செய்தியறிந்து
சோகத்தில் … நனைந்தது
இந்தியா !
சுற்றம் அழ, சொந்தம் அழ
நட்பும் அழ ..
பாசப்பறவையே … நீ
பறந்த தெங்கே …?
எண்பத்தி நான்கு வயது
இளைஞனே !
நரைத்தாலும் .. காதலித்தாயே
தாயகத்தை !
இந்தியாவை உயர்த்த
கனவு கண்ட
புதுயுகச் சிற்பியே !
எங்கள்
கடலோரக் கவிதையே …!
உங்களை வாசிக்கும்போதே
மரணம் உங்களை
யாசித்துக் கொண்டுபோய் விட்டதே !
வறுமையிலும்
செம்மையைக் கடைப்பிடித்த
மாணவர் !
வாழ்க்கையில்
எளிமையை நேர்மையை கற்பித்த
ஆசான் ! ஆசிரியர் !
தோல்வியிலும்
பாடம் உண்டெனச்
சொல்லிவிட்டுப் போன ..
வழிகாட்டி … நீங்கள் !
மாணவப் பருவத்திலேயே …
உயரவேண்டும் என்று
கனவு கண்ட நீங்கள்
விஞ்ஞானியானதும்
இந்தியாவின்
முதல் செயற்கைக்கோளின்
தந்தையானீர்கள் !
தமிழகம் தந்த …
இந்திய விஞ்ஞானியே !
உலக விஞ்ஞானிகள்
திரும்பிப் பார்த்த .. அதிசயமே !
அற்புதமே !
உங்களைத் திரும்பவும் பார்க்க
ஆசைப்படுகிறோம் ! – அது
இயலாது என்பதினால்
உங்களின் ‘ஆன்மா’ அமைதிபெற
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம் !