செஞ்சித் தூண்கள்
புதுச்சேரிக் கடற்கரைக்கு நீங்கள் காற்று வாங்கப் போனால், அங்கு காந்தி சிலையைச் சுற்றிலும் நெடிதுயர்ந்து நிற்கும் கற்தூண்களைப் பார்க்காமல் இருக்க முடியாது. அதேபோல் பூங்கா உள்ளிட்ட இடங்களிலும் இத்தகைய தூண்களைப் பார்க்கலாம்.
இவற்றில் கிருஷ்ணர், நரசிம்மர், இராமர் உள்ளிட்ட சிற்பங்கள் அழகுறச் செதுக்கப்பட்டுள்ளன.
இந்தத் தூண்களெல்லாம் எங்கிருந்து வந்தன?
கி.பி.1750இல் பிரெஞ்சுக்காரர்கள் செஞ்சியைத் தாக்கி கைப்பற்றிக் கொண்டனர். ஏறக்குறைய 10 ஆண்டுகளுக்கும் மேல் அவர்களது பிடியில் செஞ்சிக் கோட்டை இருந்தது.
அந்த காலக்கட்டத்தில் வேங்கட ரமணர் உள்ளிட்டக் கோயில்களில் இருந்த தங்கம் மற்றும் வெள்ளிச் சிலைகள், வெண்கல மணிகள் உள்ளிட்டவை பிரெஞ்சுக்காரர்களால் களவாடப்பட்டன. இவற்றில் பல இன்றும்கூட பாரீஸ் அருங்காட்சியகத்தை அலங்கரித்துக் கொண்டிருக்கிறதாம்.
செஞ்சியை ஆக்கிரமித்த பிரெஞ்சுக்காரர்கள் விலை உயர்ந்தச் சிலைகளை மட்டுமல்ல கல் தூண்கள் மற்றும் கருங்கற்களைக் கூட விட்டு வைக்கவில்லை. புதுவைக்குப் பெயர்த்து எடுத்துச் சென்றுவிட்டார்கள்.
இதற்கு சாட்சியாக புதுவை மண்ணில் இன்றும் நிற்கின்றன இந்த செஞ்சித் தூண்கள்.
இவை, செஞ்சியை ஆண்ட நாயக்க மன்னரான முத்து நாயக் என்பவரது ஆட்சிக் காலத்தை – கி.பி.1595 – கி.பி.1625 – சேர்ந்தவையாகும்.
—