இதுவே எனது இந்தியா

Vinkmag ad

 

( முதுவைக் கவிஞர். அ. உமர் ஜஹ்பர் )

 

இது எனது இந்தியா !

எனது இந்தியாவை

எண்ணிப் பார்க்கிறேன் !

இன்றோடு இந்த இடத்தில்

இருபத்து ஆறாம் தடவையாக

நின்று பார்க்கிறேன் !

 

‘குடிமக்கள் அரசாளும்

குதூகலத் திருநாடு

என் நாடு !”

 

மன்னர்கள் ஆளுகின்ற

நாட்டில் எல்லாம் –

ஒருவனே ராஜா !

மக்களாட்சி செலுத்துகின்ற

எனது மண்ணில்

இங்கு பிறந்தவன் எல்லாம் ராஜா !

ஆம் ! மக்களே

இந் நாட்டின் மன்னர்கள் !!

 

ஏனென்றால் ?

எனது இந்தியத் திருநாடு,

மன்னராளும் நாடல்ல !

மக்கள் ஆளும் நாடு !

முடியரசு நாடல்ல !

இது குடியரசு நாடு !!

 

இங்கு…

‘சுனாமி’கள் மிரட்டிப்

போகலாம் ! ஆனால் …

அயல் நாட்டுப் ‘பினாமி’ கள்

எங்களை மிரட்டவும் முடியாது …

இந்த மண்ணை விட்டு

எங்களை விரட்டவும் முடியாது !

 

சுனாமி என்னும்

எமனின் பினாமி வந்து

பூமியைப் பொங்க வைத்து …

புயலுக்குத் தூபம் போட்டு …

கடலுக்கு இறக்கை கட்டி …

அலைகளைக் கோப மூட்டி …

உயிர்களைக் குடித்து விட்டு …

உடல்களை மறைத்து விட்டு …

உறவினைப் பிரித்து விட்டு …

ஊரையும் அழித்து விட்டு …

 

ஓ … வென்று கதறி நாங்கள்

உட்கார்ந்து இருக்கும் போது

நல்லவர் போல நின்று

வல்லரசு நாடு வந்து –

உதவிட வந்த போது …

”நில்லுங்கள் ! நீங்கள் வேண்டாம் !

எல்லாமும் எமக்குள் உண்டு”

என்று

தன்னிறைவை

அவர் அறிவுக்கு ஊட்டியது

எனது இந்தியா !

 

இலங்கைக்கும்

இந்தோனேசியாவுக்கும்

மஹல்லதீவுக்கும்

அந்தமான் நிகோபாருக்கும்

அள்ளி அள்ளி கொடுத்து –

“ஊர் பிள்ளையை ஊட்டி

வளர்த்தால்

தன் பிள்ளை தானே வளரும்”

என்ற தத்துவத்தை

தரணியே அன்று

உணரவைத்தது

எனது இந்தியா !

 

உடலிலே ஒரு பக்கம் ‘வலி’

என்றால்

விழிகளே கலங்கி அழும்

‘விதி’ போல –

கடலினால் உலகுக்கு

’சதி’ வந்தால்

உடுக்கை இழந்தவன்

கைபோல –

அங்கே இடுக்கண் களைவதே”

எனது இந்தியா !

 

கிழிந்த ஆடை கட்டிய

இந்தியன் இருக்கலாம் !

ஆனால் …

இழிந்த ‘நடை; கட்டிய

இந்தியன் இருக்க மாட்டான் !

 

‘அழுக்கு’ ஆடை கட்டிய

இந்தியன் இருக்கலாம் !

ஆனால்…

‘இழுக்கு’ குணம் கொண்ட

இந்தியன் இருக்க மாட்டான் !

 

இந்து, முஸ்லிம், கிறிஸ்தவன்

என்று

இந்தியன் இருக்கலாம் !

அதில் …

ஏற்றம், இழிவு, தாழ்வு என்று

இந்தியன் இருக்க மாட்டான் !

 

அப்படி இருந்தால் …

அவன் .. அவன் …

ஜன, கன, மன என்று

தாலட்டுப் பாடிய

தங்கமான இந்திய தாய்க்குப்

பிறந்திருக்கவும் மாட்டான் !

 

என் இந்தியாவை –

எல்லைக் கோட்டுக்கு

உள்ளே வந்து

எட்டிப் பார்க்க

எவனும் நினைக் ‘கலாம்’

 

என் இந்தியாவை –

துப்பாக்கி தோட்டா வைத்து

துளைத்துப் பார்க்க

எவனும் நினைக் ‘கலாம்’

 

என் இந்தியாவை –

விண்ணுக்கு மேலே நின்று

உலவு பார்க்க

எவனும் நினைக் ‘கலாம்’

 

என் இந்தியாவை –

பொருளாதாரத் தடை போட்டு

புறட்டிப் பார்க்க

எவனும் நினைக் ‘கலாம்’

 

என் இந்தியாவை –

இது போன்ற எண்ணங்களால்

உரசிப் பார்க்க

உலகமே நினைக் ‘கலாம்’

 

அது அத்தனையும்

அலைகலாய் அழிந்து போகும் !

கனவுகளாய்க் கலைந்து போகும் !

ஏனென்றால் … ஏனென்றால் …?

இங்கே எங்களை

அரவணைத்துக்

காத்துக் கொண்டு இருப்பது

எங்கள் கலாம் … கலாம்

அவரே அப்துல் கலாம் !

இதுவே எனது இந்தியா !

 

 

நன்றி :

முகவை முரசு

பிப்ரவரி 25 – மார்ச் 3, 2005

News

Read Previous

நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்!

Read Next

ஹுஸைனார் உணர்வை மறந்திடுமா ?

Leave a Reply

Your email address will not be published.