இதய நலம் காப்போம் !
-தமிழ் மாமணி கவிஞர் அல்ஹாஜ் இ. முஹம்மது அலி, திருச்சி
இறைவன்
இதயம்
அனைத்தையும் படைத்தவன்
இறைவன்
தன்னையறிய
தன் வல்லமை தெரிய
மனிதனைப் படைத்தான்
இறைவனின்
அத்தனை குணங்களும்
மனிதனிடம்
தோல் போர்த்திக் கோலோச்சும்
உடம்பிலே
தலையே முதன்மை
மூளை வழி
இதயம் பேசுகிறது
இயங்கிடும் இதயம்
இயக்கிடம் இறைவன்
எல்லாம் தனதென்றான்
இதயத்தை
இறைவன் என்றான்
இதயமே
இறைவனின் சிம்மாசனம்
அன்பாலயம் இதயம்…
ஆலயத்தை இடிக்கலாமா?
மறுக்கப்பட்ட
மதுவைக் கொண்டு
இதயத்தைக் கெடுக்கலாமா?
விபரீதப் புகையை விலைகொடுத்து
உள்இழுத்து வேகலாமா?
இதயம் சாகலாமா?
சீரான உணவு
செம்மையான சுவாசம்
மாறாகிப் போனால்
நலம் வேறாகிப் போகும்
அளவோடு உண்டால்
வாணாளுக்கு அளவில்லை
ஒருபங்கு நீர்
ஒருபங்கு உணவு
மூன்றாம்பங்கு காற்றுக்கென
கூறாக்கிக் கொண்டால்
கூற்றுவன் நெருங்குவானா?
வாய்ச்சொல் இனிதாகட்டும்
வகையான உணவில் வேண்டாம்
இனிப்பேறிய உணவால்
இதயம் புண்ணாகும்
நடைப்பழக்கம்
இனிமையைக் குறைக்கும்
இளமையைக் கூட்டும்
நன்னடை
சுவாசத்தை வாசமாக்கும்
சுவாச வாசம்
உயிருக்கு விசுவாசம்
கையளவு இதயம் காக்க
கடலளவு செலவு தேவையா?
சரியான உணவுண்போம்
தடுத்ததை விடுத்து வாழ்வோம்
சந்நதி நலம்பெற…
இதயச் சன்னதி தொழுவோம்
இதயம் – இறைவன் !
இதய சுத்தியோடு
இறைவனைத் தொழுவோம் !
இதமுடம் வாழ்வோம் !
நன்றி :
மணிச்சுடர்
ரமளான் சிறப்பு மலர் 2011