அருளைப் பெற்ற பெருநாள் !

Vinkmag ad

பெருநாள் சிறப்புக் கவிதை

 

அருளைப் பெற்ற பெருநாள் !

         ( முதுவை கவிஞர், ஹாஜி, உமர் ஜஹ்பர் )

 

இருப்பதை இல்லார்க்கும் ஈந்தளிக்க – இன்று

இறைவனே வழங்கிய ஈதுப்பெருநாள் !

இருப்பவர் இல்லாமை உணர்வுதன்னை – நீக்கி

இன்பமும் திருப்தியும் காணும் பெருநாள் !

 

பசித்ததை, விழித்ததைத்  தனித்த அமலை – இன்று

பக்தர்கள் இறையிடம் சொல்லும் ஒருநாள் !

பசித்தவர் பரிசினை இறைவன் தானே – வந்து

படைத்திடும் நாளிதே இன்பத்திருநாள் !

 

பெற்றவர் உற்றவர் நண்பரெல்லாம் – செய்த

பிழையினைக் கழுவிடக் கூடும் நன்னாள் !

நற்றவம் ஏற்றிட மூமின்களெல்லாம் – இன்று

நன்மைகள் பெற்றிட்ட முழுமைப்பெருநாள் !

 

நோன்பையும் மாண்புயர் வணக்கமெல்லாம் – இறைவன்

நலமுடன் ஏற்றிட வேண்டுமென்றே –

தான் தனக் காகவே ‘பித்ரா’ ஈந்து – நம்

தனித்தவன் இறைவனைப் போற்றும் பெருநாள் !

 

இரவிலே தராவீஹின் இன்பத் தொழுகை – இன்று

இனிமையாய் முடிவுறும் ஈதுப்பெருநாள் !

தரமிகு தஸ்பீஹ் முழக்கமெல்லாம் – இன்று

தலைவனின் வாயிலைத் தட்டும் திருநாள் !

 

தூயநன் நோன்பினை நோற்ற மாந்தர் – தன்னைத்

தவ்பாவால் பரிசுத்த மாக்கும் திருநாள் !

தாயினும் மேலான தூய இறைவன் – இன்று

தன்னரும் அடியாரைப் போற்றும் உயர்நாள் !

 

திருமறை குர்ஆனை ஓதி ஓதி – இன்று

தீனோர்கள் முடித்திடும் தூய திருநாள் !

அருளினை அன்பினை அடியாரெல்லாம் – இன்று

அதிகமாய் அதிகமாய்ப் பெற்ற பெருநாள் !

News

Read Previous

பர்வீன் கிளினிக்

Read Next

துஆ செய்து வாழ்த்துகிறேன் !

Leave a Reply

Your email address will not be published.