அப்பா
ஆயிரம் முறை கவி தொடுத்த நான் முதல்முறையாக,மூர்ச்சையாக வரிகளும் ,வார்த்தைகளும் தடைப்பட்டு நிற்க மனதில் பெருத்த கனமும்,கண்ணின் ஈரமுமாய் ….
பேனா , முள்ளாய் இருதயத்தை கிழித்து சிவப்பு மை குருதியாய் சிதறிக்கிடக்கிறது ….
கரு கொண்டு சுமந்திருந்தாலும்,பத்து திங்களில் பளுவிறக்கிருப்பாய்…
கரு கொண்ட நாள் முதலாய்,
நான் கருப்பா ? சிவப்பா ?
குட்டையா ? நெட்டையா ?
அழகா ? அறிவா ?
உன் தோளுக்கு தோழனான ஆண்மகனா இல்லை?
உன்னை மடியில் சுமக்கும் தாயின் அம்சமான பெண்மகளா? என எதையுமே எதிர்பார்க்காமல் அப்படியே என்னை உள்ளங்கையில் உதிரம் ஒட்டிக்கொண்ட ஒற்றை ஆண்மகன்!!!
சிங்க மகனின் சீரிய ஆண்மையின்
தன் பெண்பிள்ளையின் பிஞ்சி விரல்
தீண்டலில் சருகாய் மிதந்த சீமான்…
தீண்டாத பசி பட்டினி தீண்டினும் ஓடாத தூரம் ஓடிச்சென்று பிஞ்சு பிரபஞ்சம் பசியாற்றும் சாமானியன்…
ஆணுக்கு ஆணாய்
பெண்ணுக்கு பெண்ணாய்
ஆளுமையின் அடையாளமாய் என்னை உருமாற்றி திருமாற்றி
உலகறிய செய்தாய்…
விடாயில் வீடைந்த பெண்கள் பல இருக்க..
மூன்று நாள் கொட்டி தீர்க்கும் உதிரம் , உலகின் பெண்மைக்கெல்லாம் வலி தான்,
வல்லமை தான் ,அவர் ஆளுமைக்கு சவால்தான் என கற்றுத்தந்தாய்…
தீட்டு என்று தீண்டி கோவிலிலும் பூஜையிலும் ஒதுக்கப்பட்ட பெண்களுக்கு மத்தியில், உன் கர்ப்பக் கரையில் நான்தான் சாமி!!! நான் மட்டும் தான் சாமி!!! இன்றுவரை…
புழு பூச்சி கொண்டு கருவுற்று தொப்புள்கொடி அறுக்காமல் … மலடி பட்டம் பெற்று இருப்பினும் சற்று தலை கனத்துடனே மகுடம் சூட்டி கொண்டிருந்திருப்பேன்…..
ஏனென்றால் என் தலச்சம் பிள்ளையாக நீ இருக்க….
அம்மா என்று என் அப்பன் அழைத்த அடுத்தகனமே எம் கருவறை கணத்துவிட்டது..
இனி நான் யார் உரக்க உரைப்பின் யான் மலடியாவேன்????
பல ஒதுக்குதலில் ஒதுங்காமல் காட்டாற்று வெள்ளமாய் கடந்துசெல்ல ஊக்குவித்தாய்…..
நீ ஆழப் பிறந்தவள் அல்ல ஆளப்பிறந்தவள் என்று நீ வித்திட்ட விதை இன்று விருட்சமாக….
மாற்றம் ஒன்றே மாறாதது …அத்தகைய மாற்றத்தை எதிர்நோக்கி உதிரம் என்னும் வர்ணம் கொட்டித்தீர்த்த ஓவியமாய் இவள்….
உன் அன்பின் மிச்சமாய் எச்சமாய் சற்று தலைகனத்துடனே தூக்குவேன்
இவள் , காதலுடன் உனதருமை மகள் ❤️அப்பா❤️
அர்ச்சனா .ஜெ
அர்ச்சனா கலைத்திறன் பயிலகம்
சென்னை