அனைவருமே பணிந்து நிற்போம் !

Vinkmag ad
அனைவருமே பணிந்து நிற்போம் ! 
 
   ( எம் . ஜெயராமசர்மா ….. மெல்பேண் …. அவுஸ்திரேலியா ) 
 

கண்கண்ட தெய்வமாய் காருண்யக் கடவுளாய்
            மண்மீது வந்திருக்கும் மாதாநம் வரமாகும் 
        எண்ணிநாம் பார்த்துவிடா இன்னல்களை அனுபவித்தும் 
              எமைப்பற்றி நினைத்திருப்பாள் என்னாளும் அன்னையவள் ! 
 
        இரவுகண் விழித்திருப்பாள் எம்மருகே அவளிருப்பார்
             குளிர்சுரங்கள் வந்துவிட்டால் கொடுத்திடுவாள் பலமருந்தை 
       அவளுணவை நினைக்காமல் அழுமெம்மை அவள்பார்ப்பாள்
                ஆசையுடன் எமையணைத்து ஆறுதலைப் பெற்றுநிற்பாள் !
 
       நாம்சிரிக்கும் நாளெல்லாம் தான்சிரிப்பைக் காட்டிடுவாள்
              நாமழுது விட்டுவிடின் தானுமே சேர்ந்தழுவாள் 
       ஓர்நொடியும் எமைவிட்டு அவளுணர்வு ஒதுங்கிவிடா
             வேராக அவளிருந்து வீழாமல் காத்துநிற்பாள் !
 
      அம்மாபோல் பொறுப்புள்ளார் இப்புவியில் யாருமுண்டோ 
             அம்மாவின் மடியிருத்தல் அனைவருக்கும் பெருமையன்றோ
      அம்மாவை அணைத்துநிதம் அவழடியைத் தொழுதுநிற்றல்
               அம்மாவை அகம்வைப்பார் அனைவருமே ஆற்றிடுவார் ! 
 
     காப்பகத்தில் தாயைவிடும் காட்சியினை மறந்திடுவோம் 
        கர்ப்பத்தில் காத்தவளை காப்பகத்தில் விடலாமா 
    மூப்புவரும் முடுக்குவரும் மூச்சுவிடக் கஷ்டம்வரும் 
           காத்துயெம்மை வளர்த்தவளை காப்பாற்றல் கடமையன்றோ ! 
 
    அம்மாவின் அழுகுரலை ஆருமே விரும்பாதீர்
       அம்மாவை நோகவிட ஆருமே நினைக்காதீர்
   அம்மாவின் தினமதிலே அன்னைதெய்வம் எனநினைப்போம் 
        அத்தெய்வம் தனைநாங்கள் அனைவருமே பணிந்துநிற்போம் ! 

News

Read Previous

பாலகுமாரன்

Read Next

அஞ்சலி: நீலு திரையை நடிப்பால் நிறைத்தவர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *