அஞ்சறைப் பெட்டியும் ……
அஞ்சறைப் பெட்டியும் அவளுடையக் காதலும்.. (கவிதை) வித்யாசாகர்!
1
நீ கொடுத்தாலும்
உதடுகள் ஒட்டுகிறது
நான் கொடுத்தாலும்
உதடுகள் ஒட்டுகிறது
ஆனால் –
நீ கொடுப்பது மட்டுமே முத்தமாகிறது..
——————————
2
ஒரு சன்னமான ஒளியில்
உனைச் சந்திக்க ஆசை
இருட்டில் உனைக்
கட்டிக்கொள்ள அல்ல,
அந்த சன்னமான
ஒளி பற்றிப் பேச..
——————————
3
இந்த உலகத்திற்கு
அழகற்ற
நிறையக் கண்களுண்டு,
ஆணென்றும்
பெண்ணென்றும்
தூக்கி இறக்கி
தூக்கி இறக்கி
நம்மை அசிங்கமாகவே பார்த்துக்கொண்டிருக்கும்,
ஒவ்வொரு வட்டமாய்
நாம் ஓடி ஓடி
வந்துநிற்க
உன்னையோ
என்னையோ
கீழ்தள்ளியே கைக் கொட்டும்
இருவர் காதுகளிலும் வந்து
இருவருக்கும்
தோல்வியையேச் சொல்லித்தரும்
எல்லோரும்
உலகத்தின் பின்னாலையே
ஓடுகிறார்கள்
நாம் தான் காதலிக்கக் கற்றுக்கொண்டோமே
நம் காதல் பார்
ஒரு படி மேலேறி
அதோ அந்த உலகை
நமக்குக் கீழிருப்பதாகவே காட்டுகிறது..
——————————
4
யாரிடம் பேசினாய் இப்போது
என்றார் அவர்
நானா.. ?
எனது அம்மாவிடம்
பேசிக்கொன்றிருந்தேன் என்றேன்
இல்லையே
ஏதோ மனைவியிடம்
பேசுவது போலிருந்ததே என்கிறார் அவர்
நான் சிரித்துக்கொண்டே
ஓ அதுவா
அதனாலென்ன
எனக்கு அம்மாவும் அவள்தான்
மனைவியும் அவள்தானென்றேன்..
ஒரு கிளையில்
குருவியொன்று இலைகளை விளக்கிக்கொண்டு
எனை எட்டிப் பார்த்தது
கீழ்விழுந்த இலையொன்றை எடுத்து
எழுதிப் போட்டது
எனக்கும் அவள்
அம்மா போலென்று!!
——————————
வித்யாசாகர்