பிரசாந்த் கிஷோர்
தேர்தல் உக்தியாளர் (Poll Strategist) பிரசாந்த் கிஷோர் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு அளித்த பேட்டியின் மொழியாக்கம் : முனைவர் ஆர். விவேகானந்தன், மதுரை.
மேற்கு வங்கத்தில் பி.ஜே.பி. வெற்றி பெற்றிருந்தால் ‘ஒரு நாடு ஒரே கட்சி” என்ற கோஷத்தை முன் வைத்து அவர்கள் சென்றிருக்க வாய்ப்பு இருந்தது.
இதை நான் கூறும் காரணம் என்ன என்பதைக் கண்டிப்பாகப் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
அறுதிப் பெரும்பான்மை பெற்று நாடாளுமன்றத்தில் ஆட்சி அமைவது இது முதல் முறையல்ல. பல முறை பல கட்சிகள் பெரும்பான்மை பெற்று ஆட்சி நடத்தியிருக்கின்றன. அதே போல இந்த ஆட்சியை விட, அதிகமாக, 10-15 ஆண்டுகள் ஆட்சி நடத்திய கட்சிகளும் உள்ளன. அப்படியிருந்தும் இந்த ஆட்சியை ஏன் வேறுபட்டது என்று கூறுகிறோம் என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.
ஏனென்றால் இந்த அரசாங்கம் உங்கள் வோட்டுக்களைக் கேட்டு வாங்கியதைத் தாண்டி உங்களது உளவியல் மனநிலையில் முழு ஆதிக்கம் செலுத்த நினைக்கிறது. பி.ஜே.பி. உங்களது வாக்குகளை மட்டும் கோரவில்லை. மாறாக நீங்கள் உடுத்தும் உடை, உண்ணும் உணவு, உங்களது நண்பர்கள், உங்களது மதம் ஆகிய அனைத்திலும் குறுக்கிட நினைக்கிறது. இதுதான் நாம் வெறுக்கத் தக்க விஷயம். ஒரு அரசியல் கட்சி என்ற முறையில் நமது வாக்குகளைக் கோரும் உரிமை பிஜேபியினருக்கு உண்டு ஆனால் அத்துடன் அவர்கள் நிற்பதில்லை. நமது உளவியல் மனநிலையை முழுமையாகக் கட்டுப்படுத்துவதுடன் வாக்குகள் பெறுவதைத் தாண்டி பல விஷயங்களைப் பற்றியும் சொல்ல நினைப்பதை ஏற்க முடியாது. நாங்கள் வாக்குகளின் மூலம் ஆட்சியைப் பிடிக்கப்போகிறோம் என்று சொல்லுவதற்கு அவர்களுக்கு உரிமை உண்டு ஆனால் எதிர்க்கட்சிகளை முழுமையாக அழிக்கப் போகிறோம் என்ற போர் முழக்கத்தை இதற்கு முன் வேறு எந்தக் கட்சியும் முன் நிறுத்தியதில்லை. அவர்களது சாதனைகளைச் சொல்லி வாக்குக் கேட்கத் தடையில்லை.ஆனால் கடந்த 70 ஆண்டுகளாக எதுவும் சரியாக நடக்கவில்லை என்று சொல்வதை ஏற்க முடியாது. அதில் அவர்கள் ஆட்சி செய்யும் 10 வருடமும் இருக்கிறது என்பதுதான் நல்ல வேடிக்கை.
இது போன்ற விஷயங்களால்தான் மக்களுக்கு இந்த அரசைக் கண்டு வெறுப்பு கலந்த அச்சம் ஏற்படுகிறது. நம் நாடு ஜனநாயக் கோட்பாடு களிலிருந்து தரம் தாழ்கிறது என்று மக்கள் அச்சப்படுகிறார்கள்… அதே போல அவர்கள் “நீ முஸ்லிம்களுடன் நண்பராய் இருக்காதே, ஜீன்ஸ் போடாதே, இதைச் சாப்பிடாதே அதைச் சாப்பிடாதே” என்று பல கட்டுப்பாடுகளை விதிக்க நினைப்பதுதான் அவர்கள்மேல் வெறுப்புடன் கூடிய அச்சம் ஏற்படக் காரணமாகிறது.