கால்நடை – பெருகும் அசையும் சொத்து

Vinkmag ad
கால்நடை – பெருகும் அசையும் சொத்து
நிலம், மனிதருக்கு அசையா சொத்தென்றால், மாடு, ஆடு, கோழி போன்ற கால்நடைகள் மனிதருக்கு அசையும் சொத்து. வேறெந்த அசையும் சொத்தும், கால்நடைகளைப் போல், பல்கிப் பெருகாது. செலவில்லா விவசாயத்திற்கும் உறுதுணையாக அமைவது, கால்நடைகளாகும். மக்களின், இயற்கையுடன் ஒன்றிய விவசாய வாழ்வில், நண்பனாக, குழந்தைகளாக இருக்கும் உறவுகள், கால்நடைகள். நாம் எவ்வளவுக்கு கால்நடைகளை நேசிக்கிறோமோ, அந்த அளவுக்கு, அவை நமக்கு நன்மை பயக்கும்; நம்மிடம் நட்புடன் விளங்கும்.
இந்திய நாடு, அடிப்படையில், விவசாய நாடு. விவசாயத்திலிருந்து பிரிக்க முடியாதது, கால்நடை வளர்ப்பு. மாடு, ஆடு,  கோழி வளர்ப்பு, விவசாயப் பணிகளுக்குப் பலவிதங்களில் உதவுவதோடு அல்லாமல், கூடுதல் வருவாயையும் அளிக்க வல்லது.
சுதந்திரத்திற்கு முந்தைய இந்தியாவில், ஏராளமான கால்நடைகள் இருந்துள்ளன. ஆங்கிலேயரின் ஆட்சிக் காலத்திலேயே, பெருமளவு கால்நடைகளை அழிக்கத் தொடங்கிவிட்டனர். பசுமைப் புரட்சிக் காலக் கட்டத்தில், இரசாயன உரங்களும், விவசாய இயந்திரங்களும் முதல்நிலைக்கு வந்தன. மாட்டு எருவும், மாட்டு உழைப்பும் இரண்டாம் நிலைக்குத் தள்ளப்பட்டன. கால்நடைகள், குறிப்பாகக் காளைமாடுகள், தேவையற்ற சுமையாகத் தோன்றின. அவற்றில் பெரும்பான்மையானவை, சதைக்காகவும் தோலுக்காகவும் குறைந்த விலையில் அழித்தொழிக்கப்பட்டன.
ஆனால், பசுமைப் புரட்சியால், மண்வளம் குன்றுவதையும், விவசாயிகள் கடன்களால், தற்கொலைவரை செல்வதையும், நாம் இன்றுவரை, அன்றாடம் காண்கிறோம். எனவே, இயற்கை விவசாயத்தால் மாட்டுமே, இழந்த மண்வளத்தை மீட்டெடுக்க முடியும், விவசாயிகள் கடன் பொறியில் சிக்காமல் இருக்க முடியும். ஆனால், செலவில்லா விவசாயத்தை வெற்றிகரமாக நடத்த, கால்நடைகள் மிகவும் அவசியமாகின்றது.
மாடுகள்:
மாடுகள் என்றால், நாம் காளைமாடு, பசுமாடு ஆகிய இரண்டையுமே எண்ணுவோம். ஏர் உழவும், மண்ணைச் சமப்படுத்தவும், கழனி செய்யவும், போர் மெருக்கடிக்கவும், நீர் இறைக்கவும், வண்டி இழுக்கவும் காளைகளைப் பயன்படுத்துவோம்.  சாணத்தைக் கொண்டு வறட்டி தட்டவும், கிருமிநாசினியாக வீட்டிற்கு முன்னும், உள்ளும் மெழுகவும், நிலத்திற்கு எருவாக்கவும், பால் கறக்கவும் பசுமாடுகள் உதவும்.
இந்த காலத்தில், இரண்டு காளை மாடுகளை வளர்ப்பது, சற்று கடினம். எனவே, ஒற்றை காளைமாட்டை வளர்க்கலாம். அதை, நிலத்தில் பல பயிர் வேலைகளுக்கும், பாரம் இழுக்கவும், சொந்த சிறு பயணத்திற்கும் பயன்படுத்திக் கொள்ளலாம். அதற்கேற்ற கருவிகளையும் உருவாக்கலாம். உழவு மற்றும் விவசாயத்தின் அருமையை உணராதவர்கள், எருதுமாட்டையே பாரமாக நினைப்பர்.
தமிழ்நாட்டில், பல பெயருள்ள மாடுகள் உள்ளன. இப்பெயர்கள் அவற்றின் நிறம் பற்றியும், உடல் உறுப்புகளின் தனித்தன்மையைப் பொறுத்தும், பண்புகளைப் பொறுத்தும் அமைந்துள்ளன. இவை யாவும் காரணப் பெயர்கள். மாடுகளுடன் நெருங்கிப் பழகியிருந்தால்தான், காரணங்களை அறிய முடியும். பெயர் சூட்ட முடியும்.
1. அத்தக்கருப்பன் 2. அழுக்குமறையன் 3.அணறிகாலன் 4. ஆளைவெறிச்சான்
5. ஆனைச்சொறியன் 6. கட்டைக்காளை 7. கருமறையான் 8. கட்டைக்காரி
9. கட்டுக்கொம்பன் 10. கட்டைவால் கூளை 11. கருமறைக்காளை 12. கண்ணன் மயிலை
13. கத்திக்கொம்பன் 14. கள்ளக்காடன் 15. கள்ளக்காளை 16. கட்டைக்கொம்பன்
17. கருங்கூழை 18. கழற்வாய்வெறியன் 19. கழற்சிக்கண்ணன் 20. கருப்பன்
21. காரிக்காளை 22. காற்சிலம்பன் 23. காராம்பசு 24. குட்டைசெவியன்
25. குண்டுக்கண்ணன் 26. குட்டைநரம்பன் 27. குத்துக்குளம்பன் 28. குட்டை செவியன்
29. குள்ளச்சிவப்பன் 30. கூழைவாலன் 31. கூடுகொம்பன் 32. கூழைசிவலை
33. கொட்டைப்பாக்கன் 34. கொண்டைத்தலையன் 35. ஏரிச்சுழியன் 36. ஏறுவாலன்
37. நாரைக்கழுத்தன் 38. நெட்டைக்கொம்பன் 39. நெட்டைக்காலன் 40. படப்பு பிடுங்கி
41. படலைக் கொம்பன் 42. பட்டிக்காளை 43. பனங்காய் மயிலை  44. பசுங்கழுத்தான்
45. பால்வெள்ளை 46. பொட்டைக்கண்ணன்  47. பொங்குவாயன் 48. போருக்காளை
49. மட்டைக் கொலம்பன் 50. மஞ்சள் வாலன் 51. மறைச்சிவலை 52. மஞ்சலி வாலன்
53. மஞ்ச மயிலை  54. மயிலை 55. மேகவண்ணன் 56. முறிகொம்பன்
57. முட்டிக்காலன் 58. முரிகாளை 59. சங்குவண்ணன் 60. செம்மறைக்காளை
61. செவலை எருது 62. செம்ம(ப)றையன் 63. செந்தாழைவயிரன் 64. சொறியன்
65. தளப்பன்  66. தல்லயன் காளை 67. தறிகொம்பன் 68. துடைசேர்கூழை
69. தூங்கச்செழியன் 70. வட்டப்புல்லை 71. வட்டச்செவியன்  72. வளைக்கொம்பன்
73. வள்ளிக் கொம்பன் 74. வர்ணக்காளை  75. வட்டக்கரியன் 76. வெள்ளைக்காளை
77. வெள்ளைக்குடும்பன் 78. வெள்ளைக்கண்ணன் 79. வெள்ளைப்போரான் 80. மயிலைக்காளை
81. வெள்ளை 82. கழுத்திகாபிள்ளை 83. கருக்காமயிலை 84. பணங்காரி
85. சந்தனப்பிள்ளை 86. சர்ச்சி 87. சிந்துமாடு 88. செம்பூத்துக்காரி
89. செவலமாடு 90. நாட்டுமாடு 91. எருமைமாடு 92. காரிமாடு
நாட்டு பசுமாடுகள்:
1. கீர் (குஜராத்)
2. சிவப்பு சிந்தி (சிந்துப் பகுதி)
3. சாகிவால் (சிந்துப் பகுதி)
4. காங்கயம் (தமிழகம்)
5. பர்கூர் (தமிழகம்)
6. உம்பளசேரி (தமிழகம்)
அந்நிய பசுமாடுகள்:
1. ஜெர்சி (இங்கிலாந்து)
2. ஓல்ஸ்டன் பிரைசியன் ( நெதர்லாந்து)
3. பழுப்பு சுவிஸ் (சுவிட்ஸர்லாந்து)
4. சிவப்பு டேன் (டென்மார்க்)
5. அய்ர்ஷைர் (ஸ்காட்லாந்து)
6. குவம்சே (பிரான்ஸ்)
நாட்டு வண்டி மாடுகள்:
1. அல்லிக்கார் (கருநாடகம்)
2. அம்ரித் மகல் (கருநாடகம்)
3. கில்லாரி (மராட்டியம்)
4. காங்கயம் (தமிழகம்)
5. பர்கூர் (தமிழகம்)
6. உம்பளசேரி (தமிழகம்)
7. புலிக்குளம் (தமிழகம்)
8. ஆலம்பாடி (தமிழகம்)
இரட்டைப் பயனுள்ள மாடுகள்: (உழுதல், பால்)
1. தார்பார்க்கர் (சிந்துப் பகுதி)
2. அரியானா (அரியானா)
3. காங்ரேஜ் (குஜராத்)
4. ஓங்கோல் (ஆந்திரா)
5. கிருஷ்ணா பள்ளத்தாக்கு (ஆந்திரா)
6. தியோனி (ஆந்திரா)
நாட்டு எருமைகள்:
1. முர்ரா (அரியானா, பஞ்சாப்)
2. சூரத்தி (குஜராத்)
3. ஜாப்ராபார்டி (குஜராத்)
4. பாதவாரி (உ.பி., ம.பி.)
5. நீலி ராவி (பஞ்சாப்)
6. மேகசானா (குஜராத்)
7. நாகபுரி (மராட்டியம்)
8. தோடா (நீலகிரி)
மேலும் அதிக விவரங்களுக்கு:
***
ஆடுகள்:
மாடுகளை வாங்கவும், பராமரிக்கவும் அதிக முதலீடு தேவை. ஆனால், குறைந்த செலவில், அதிக இலாபம் காண, ஆடுகளைக் குறிப்பாக வெள்ளாடுகளை வளர்க்கலாம். எனவேதான், வெள்ளாடுகளை “ஏழைகளின் பசு” என்கிறார்கள் போலும். மேலும், ஆட்டைத்தான் பிராணியாக முதன் முதலில் மனிதன் வளர்த்திருப்பான்.
வெள்ளாடு வளர்ப்பின் நன்மைகள்
1. வெள்ளாடு வளர்ப்பில் முதலீடு மிகவும் குறைவு.
2. இவை அளவில் சிறியதாக உள்ளதால் கொட்டகைப் பராமரிப்புச் செலவு குறைவு.
3. ஆடுகள் மிகக்குறைந்த காலத்தில் 10-12 மாதங்களில் பருவ வயதை அடைந்து விடும். இவை 16-17 மாதங்களில் குட்டி ஈன்று விடும்.
4. பொதுவாக ஆடுகள் ஒரு தருணத்தில் 2 குட்டிகள் மட்டுமே போடும். 3 அல்லது நான்கு குட்டிகள் போடுவது மிகவும் அரிது.
5. வறண்ட நிலங்களில் மற்ற கால்நடையை விட வெள்ளாடு வளர்ப்பே சிறந்ததாகும்.
6. ஆடுகள், பலவகைப்பட்ட பயிர்களையும் உண்பவை. இவை முட்புதர்கள், பூடுகள், வேளாண் பயிர்க்கழிவுகள் மேலும் வேளாண் உப விளைப்பொருட்கள் போன்ற அனைத்தையும் உண்பதால் தீவனப் பராமரிப்புக் குறைவு.
7. ஆட்டு இறைச்சியில் பன்றி இறைச்சியை விடக் கொழுப்பு குறைவாகவே உள்ளது. மேலும் இதன் குளிர்ச்சி மற்றும் மென்று உண்பதில் எளிதாகையால் வெயில் காலங்களுக்கு மிகவும் ஏற்றது.
8. பசும்பாலை விட வெள்ளாட்டுப்பால் எளிதில் செரிக்கக்கூடியது. இதில் ஏதும் ஒவ்வாமை ஏற்படுவதில்லை. மேலும் வெள்ளாட்டுப்பாலில் சிறிய கொழுப்பு திரள்களே உள்ளன. பாக்டீரியா, பூஞ்சை எதிர்ப்பொருட்கள் அதிகளவு உள்ளதால், நோய் எதிர்ப்பாற்றல் குறைவு.
9. வெள்ளாடு செம்மறி ஆட்டுடன் ஒப்பிடும் போது 2.5 மடங்கு பொருளாதார அளவில் இலாபம் கொடுக்கும்.
10. ஆட்டிலிருந்து கிடைக்கும் தோல், முடி ஆகியவையும் பதனிடு தொழிற்சாலைகளில் பயன்படுகின்றன.
தமிழ் நாட்டு ஆடுகள்:
1. கன்னி
2. கொடி
3. சேலம் கருப்பு
கொட்டில்கள்:
கடா, பெட்டை, குட்டி ஆடுகளைப் பிரித்து வைக்கும்படியாக கொட்டில் அறைகள் அமைப்பது நலம். காற்றோட்டமும், தூய்மையும் அவசியம்.
மேய்ச்சல் இன்றியும் கொட்டிலிலேயே ஆடுகளை வளர்க்கலாம். தீவனச் செலவைக் குறைக்க, மேய்ச்சல் செய்வது நல்லது.
தீவனம்:
பசுந்தீவனம், அடர்தீவனம், பயறுவகைகள் கொடுக்கலாம்.
தண்ணீர்:
தூய்மையான தண்ணீர் அவசியம்.
சினை ஆடுகள் பராமரிப்பு:
1. சினை ஆடுகளை மந்தையிலிருந்து பிரித்துத் தனியே பராமரித்தல் வேண்டும்.
2. சரிவிகித ஊட்டச்சத்துக்கள், எளிதில் செரிக்கக்கூடிய தீவனமளித்தல்.
3. சினை ஆடுகள் ஒன்றை ஒன்று முட்டிக் கொள்ள அனுமதிக்கக்கூடாது.
4. சினையுற்றபின் கரு கலைந்த ஆடுகளுடன் சினை ஆடுகள் எக்காரணம் கொண்டும் கலந்து விடுதல் கூடாது.
5. குட்டி ஈனுவதற்கு முன்பு ஆட்டின் பின்பாகத்தில் மடியைச் சுற்றிலும் உள்ள முடியையும் வாலையும் வெட்டி விடுதல் நல்லது.
6. அடுத்த குட்டி ஈனுவதற்கு 6-8 வாரங்கள் முன்பே பால் கறப்பதை நிறுத்தி விடவேண்டும்.
பிறந்த குட்டிகளின் பராமரிப்பு
1. குட்டி பிறந்தவுடன் பஞ்சு அல்லது பழைய துணி கொண்டு குட்டியின் வாயையும் மூக்கையும் நன்கு துடைக்கவேண்டும். குட்டி மூச்சுவிட எளிதாகுமாறு வாயைச்சுற்றயுள்ள திரவத்தை அகற்றவேண்டும்.
2. பின்னங்கால்களைப் பிடித்து தலைகீழாக இருக்குமாறு குட்டியை சில நொடிகள் பிடித்திருக்கலாம். இது மூச்சுக் குழல் பாதையைச் சுத்தம் செய்ய உதவும்.
3. குட்டி பிறந்த அரை மணிக்குள் தானாகவே எழுந்து தாயிடம் பால் குடிக்கவேண்டும். இல்லாவிடில் அது எழுந்து நடக்க உதவி செய்தல் வேண்டும்.
4. தாய் ஆட்டுக்குட்டியை நாக்கினால் தடவி விட அனுமதிக்கவேண்டும்.  தடவி விடுவதால் குட்டியின் மேலுள்ள உறை போன்ற திரவத்தை எடுத்து விடும்.
5. தொப்புள் கொடியின் மறு நுனியை டிஞ்சர் (அ) அயோடின் கொண்டு நனைத்தல் வேண்டும். இவ்வாறு 12 மணி நேரம் கழித்து மீண்டும் ஒரு முறை செய்யவேண்டும்.
6. முதல் அரை மணி நேரத்திற்குள் குட்டியைச் சீம்பால் குடிக்க வைக்க வேண்டும். குட்டி தானாகக் குடிக்க முடியாவிட்டால் காம்பை எடுத்து வாயில் வைத்துப் பாலை பீய்ச்சி விடுதல் நலம்.
7. புதிதாகப் பிறந்த குட்டிகளைத் தனியே வைத்துப் பராமரிக்க வேண்டும்.
8. தொப்புள் கொடியைச் சிறிது நேரம் விட்டு நறுக்கிப் பின் உடனே அயோடின் அல்லது டிஞ்சர் போன்ற தொற்று நீக்கிகளைத் தடவி விடவேண்டும்.
9. முதல் இரண்டு மாதங்கள் குளிர் மழை எந்த ஒரு பாதிப்புமின்றி குட்டிகளைக் கவனமாகப் பாதுகாத்தல் வேண்டும்.
10. முதல் இரண்டு வாரங்களில் கொம்பு நீக்கம் செய்தல்.
11. கிடா குட்டிகள் இனச்சேர்க்கைக்குத் தேவையானவை போக மீதமுள்ளவற்றைக் காயடித்து விட வேண்டும்.
12. சரியான தடுப்பூசிகளைத் தவறாமல் தகுந்த நேரம் போடுதல் வேண்டும்.
13. 8 வார வயதில் தாயிடமிருந்து குட்டியைப் பிரித்துத் தனியே வளர்க்கப் பழக்கவேண்டும்.
நோய்த் தடுப்பு பராமரிப்பு அவசியம்.
மேலும் அதிக விவரங்களுக்கு:
***
 
கோழிகள்:
கோழிகள் வளர்ப்பதற்கான செலவு, பிற கால்நடைகளை ஒப்பிடும்போது, மிகவும் குறைவு.
வளர்ப்பு முறை:
கூண்டு அல்லது கொட்டகை முறை, ஆழ்கூள முறை என இரண்டு வகையாகக் கோழிகளை வளர்க்கலாம்.
ஆழ்கூள முறையே, இயற்கையான கோழி வளர்ப்பு முறையாகும்.
ஆழ்கூள முறை பயன்கள்:
1. மூலதனம் குறைவு.
2. சுகாதாரமானது, அதோடு கோழிகளுக்கு எந்த ஒரு பாதிப்பும் இருக்காது.
3. இதில் பயன்படுத்தப்படும் கூளமானது ரிஃபோஃபிளேவின் மற்றும் விட்டமின் பி 12 ஆகிய     சத்துக்களைக் கோழிக்கு அளிக்கிறது.
4. நோய்க் குறைபாடுகளைக் கட்டுப்படுத்துதல் எளிது.
5. உற்பத்தித் திறனை அதிகப்படுத்துகிறது.
6. நெல் உமி, உலர்ந்த இலைகள், நறுக்கிய வைக்கோல் மற்றும் வேர்க்கடலை தழைகள் போன்ற கிடைக்கும் பொருட்களை கூளமாக உபயோகிப்பதால் இடுபொருள் செலவு குறைவு.
ஆழ்கூள முறையில் கவனிக்க வேண்டியவை:
1. கூளங்கள் அதிக ஈரம்படாமல் எப்போதும் உலர்ந்த நிலையில் இருக்கவேண்டும்.
2. குறிப்பிட்ட அளவுக் கோழிகளையே வளர்க்க முடியும்.
3. நல்ல காற்று வசதி இருக்கவேண்டும்.
4. கூளங்கள் வாரத்திற்கொரு முறை மாற்றப்படவேண்டும். ஏதேனும் ஈரமான கூளங்கள் இருப்பின் அவற்றிற்குப் பதில் புதிய உலர்ந்த கூளங்கள் போடப்படவேண்டும்.
5. ஒரு சரிவிகிதத் தீவனம் கோழிகளுக்குக்  கொடுக்கப்படவேண்டும்.
6. கோடைக்காலத்திற்கு 2 மாதங்களுக்கு முன்பே கூளங்கள் போடப்பட்டு தயார் செய்யப்படவேண்டும். அப்போது தான் சூட்டில் பாக்டீரியாக்கள் நன்கு செயல்புரிந்து கூளங்கள் தயாராகும்.
7. தண்ணீர் வைக்கும் இடங்களில் நீர்க்கூளத்தின் மீது சிந்தி ஈரமாக்கிவிடாதவாறு எப்போதும் கவனமாகப் பார்த்துக் கொள்ளவேண்டும்.
கோழி இனங்கள்:
1. அசீல்
2. கடகனாத்.
3. சிட்டகாங்
4. பிரம்மா
5. கிரிராஜா
6. வனராஜா
7. சிறுவிடை
8. பெருவிடை
ஆகிய இனங்கள், தமிழ்நாட்டில் வளர்க்கப்படும் கோழிகள்.
கோழிகளுக்குத் தேவையான சத்துகள்:
நீர், புரதம், கார்போஹைட்ரேட், கொழுப்பு, விட்டமின்கள் மற்றும் தாதுக்கள் ஆகும்.
கோழிகளுக்கான உணவுகள்:
1. சோளம்
2. கம்பு
3. கேழ்வரகு
4. அரிசிக் குருணை, அரிசி, நெல்
5. கோதுமை
6. தவிடு
7. பிண்ணாக்கு (கடலை, எள், வேம்பு, தேங்காய்)
8. மீன்தூள்
9. கடற்சிப்பித் துகள்
10. கழிவுகள் (தாவரம், இறைச்சி)
நோய்கள்:
நாட்டுக்கோழிகளுக்கு வெயில், காற்று, பனி, மழை என ஒவ்வொரு பருவநிலை மாறும் போதும் நோய்த்தாக்குதல் ஏற்படும். கோழிகளை அதிகளவில் தாக்குவது வெள்ளைக்கழிசல் மற்றும் ரத்தக்கழிசல் நோய்தான். வெள்ளை , பச்சை அல்லது வெள்ளையும் பச்சையும் கலந்த நிறத்தில் கோழிகள் மலத்தைக் கழிந்தால் அது வெள்ளைக்கழிசலுக்கான அறிகுறி. காபி நிறத்தில் கழிந்தால் அது ரத்தக்கழிசலுக்கான அறிகுறி.
பண்ணையில் உள்ள பெரிய கோழிகளுக்கு அவ்வப்போது சின்ன வெங்காயத்தை நறுக்கித் தீவனமாகக் கொடுத்து வந்தால், இந்த நோய்கள் தாக்காது. அதையும் மீறித்தாக்கினால் அதற்கும் கைவைத்தியம் உண்டு.
10 சின்ன வெங்காயம், ஒரு கரண்டி புளிக்காத தயிர், ஒரு தேக்கரண்டி(டீ ஸ்பூன்) சீரகம், ஒரு தேக்கரண்டி மிளகு, அரைத் தேக்கரண்டி மஞ்சள்தூள், ஐந்து ஈர்க்குக் கீழாநெல்லி ஆகியவற்றை அரைத்துக் கரைசலாக்கிக் கொள்ள வேண்டும். இதைக் காலை, மாலை இரண்டு வேளைகளும் நோயால் பாதிக்கப்பட்ட கோழிகளுக்கு வாயில் ஊற்றி விடவேண்டும். கோழிகள் குடிக்கும் வரை கொடுக்க வேண்டும். குடிக்க முடியாமல் திமிறும்போது ஊற்றுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். இதன் மூலம் நோய்கள் குணமாகும்.
கோழிகளைத் தாக்கும் மற்றொரு நோய் அம்மை, பெரும்பாலும் நாட்டுக்கோழிகளை அம்மை தாக்காது அப்படியே தாக்கினாலும் வேப்பிலை, மஞ்சள் தூள் கலந்து உடம்பில் தடவிவந்தால் அம்மை நோய் குணமாகும்.
கோழிகள் வைக்கும் முட்டையில் ஓடுகள் பலமாக இருக்காது. இப்படி இடப்படும் முட்டைகளை ‘தோல் முட்டை’ என்பார்கள். தோல் முட்டை வைக்கும் கோழிகள் வீட்டுக்கு ஆகாது என்று கிராமங்களில் சொல்வார்கள். உண்மையில், கால்சியம் பற்றாக்குறையால்தான் கோழிகள் தோல் முட்டை வைக்கின்றன. முட்டை வைக்கும் கோழிகள், கால்சியம் சத்துக்காகத் தாமாகவே சுண்ணாம்புச் சுவரைக் கொத்துவதைப் பார்க்கமுடியும். முட்டையிடும் கோழிகளின் தீவனத்தோடு கிளிஞ்சல் தூளைச் சேர்த்துக் கொடுத்துவந்தால், போதுமான கால்சியம் கோழிகளுக்குக் கிடைக்கும்.
கோழிப்பேன் எனப்படும் செல்வகைப்பூச்சிகளால் கோழிகளுக்கு அதிக பாதிப்பு ஏற்படும். இவை கோழிகளுக்கு அரிப்பை உண்டாக்கும். பேன் தாக்கிய கோழிகளுக்கு வசம்பைத் தூளாக்கி, அதில் சிறிது சாம்பல் சேர்த்து, வெயில் நேரத்தில் உடம்பு முழுவதும் தேய்த்து, விடவேண்டும்.
நோய்த் தடுப்பு:
தூதுவளை, துளசி, மஞ்சள், சீரகம் மிளகு, கீழாநெல்லி போன்றவற்றை அவ்வப்பொழுது தீவனத்துடன் கலந்து அளிக்கலாம்.
மேலும் அதிக விவரங்களுக்கு:

— சொல்லாக்கியன்

News

Read Previous

எம்ஜிஆர் காதல் பாடல்கள்

Read Next

பிரணாப்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *