வாழ்க்கை வாழ்வதற்கே!
வாழ்க்கை வாழ்வதற்கே!
சிரா. ஆனந்தன்
நாம் ஒவ்வொருவரும், வாழ்க்கையின் ஒவ்வொரு காலகட்டத்தில், ஒவ்வோர் அனுபவ பாடத்தைக் கற்க நேரிடுகிறது. `புதிய ஆசிரியன்‘ பத்திரிகையின் ஆசிரியரான திரு.கே. ராஜு, நான் பணி புரிந்த விருதைக் கல்லூரியில் 1970-களில் என்னுடைய சக தோழரும், நல்ல நண்பருமாக இருந்தார். அவரிடமிருந்து கிடைத்த நல்ல சில ஆரோக்கியமான சிந்தனைகளை உங்களுடன் பகிர முனையும்போது, தன்னடக்கத்தின் காரணமாக திரு. ராஜு எனது கட்டுரையை அவரது கத்திரிக்கோலுக்கு இரையாக்காமல் இருக்க வேண்டும்.
நான் மதுரையிலிருந்து தினமும் விருதைக் கல்லூரிக்கு புகைவண்டியில் சென்று வந்து கொண்டிருந்தேன். திரு. ராஜுவின் தாயாரும், சகோதரரும், எனது உறைவிடத்தின் அருகாமையில் வசித்து வந்தனர். விருதையில் வசித்து வந்த ராஜூ, ஞாயிற்றுக்கிழமைகளில் மதுரை வந்து அவர்களுடன் தங்கியிருந்துவிட்டு, திங்கட்கிழமை காலையில் என்னுடன் விருதைக்கு இரயிலில் பயணம் செய்வது வழக்கம்.
அப்படியான ஒரு இரயில் பயணத்தின்போது, நாங்கள் பயணித்த இரயில் பெட்டியில் கண் தெரியாத ஒரு யாசகர், யாசகம் கேட்டு வந்தார். அவர், தன்னுடைய கையில் வைத்திருந்த தீப்பெட்டியின் மேல் செருகி வைத்திருந்த ஒரு ஒற்றைத் தீக்குச்சியை விரலால் தாளகதியில் மீட்டிக் கொண்டு, “அம்மம்மா, தம்பியென்று நம்பி அவன் உன்னை வளர்த்தான்” என்று உரக்கப் பாடவும் செய்தார்.
“அருமையாகப் பாடுகிறார்” என்றேன் நான் ராஜுவிடம்.
“அவரின் இசையை இரசித்தாயல்லவா? அவருக்கு நீ ஏதேனும் அளிக்கக் கடமைப்பட்டிருக்கிறாய்” என்றார் ராஜு. அந்த அறிவுரைக்கு இணங்கி யாசகருக்கு அப்போது நான் யாசகம் வழங்கினேன். இன்றைக்கும் தெருவில் யாசகம் கேட்டு, பூம் பூம் மாட்டுக்காரர் உறுமி மேளம் வாசித்து வந்தாலும், யாசகர் யாரேனும் சாய் பஜனையை சிங்கியொலி எழுப்பிப் பாடி வந்தாலும், பேரப் பிள்ளைகளுக்கு வேடிக்கை காண்பிக்கும் தருணத்தில், “அவருக்கு நீ ஏதேனும் அளிக்கக் கடமைப்பட்டிருக்கிறாய்” என்ற ராஜுவின் அறிவுரை என் காதுகளில் ஒலிக்கும்; யாசகருக்கு ஈகை செய்துவைப்பேன். “வறியார்க்கொன்றீவதே ஈகை”, எனும் ஈத்துவக்கும் இன்பத்தை எனக்கு எடுத்துச் சொன்ன நல்ல நண்பர் ராஜுவை மறக்க மனம் கூடுதில்லையே!
தற்போது நான் அலுவலகத்திற்குக் காரில் செல்லும்போது, எனது சக ஊழியர் ஒருவரே எனக்கு சாரதியாக உதவுவார். காரை அருமையாக செலுத்தக் கூடியவர். ஆனால், அவரிடம் நான் விரும்பாத ஒரு குணம் என்னவென்றால், வீட்டிலிருந்து புறப்பட்டு, அலுவலகம் சேரும் வரையிலும் அவர் பேசும் பேச்சனைத்திலும் ஒரு சலிப்பு காணப்படும்.”ரோடு சரியில்லை, அரசியல் சரியில்லை, அரசாங்கம் சரியில்லை, அரசியல்வாதிகள் சரியில்லை, சிஸ்டம் சரியில்லை….” என்று அடுக்கிக் கொண்டே போவார்! எனக்கோ தாங்காது. ஒருநாள் சலிப்பு நபரிடம், “ஒரு கடந்த கால சம்பவத்தை நான் உனக்குச் சொல்லட்டுமா?” என்று கேட்டுவிட்டு விவரிக்கத் தொடங்கினேன்: “நான் கல்லூரியில் பணியாற்றிக் கொண்டிருக்கும்போது, பாண்டி என்று ஒரு உதவிப் பேராசிரியர் இருந்தார். அவர் எதைப் பற்றிப் பேசினாலும் ஏதேனும் ஒரு வகையில் சலித்துக் கொள்வார். அவருடன் நானும், எனது நண்பர் ராஜுவும் ஒருநாள் சினிமாவிற்குச் சென்றோம். எங்களுக்குப் படம் பிடித்திருந்தது. ஆனால், பாண்டியோ படம் ஆரம்பித்ததிலிருந்து ஓயாமல் சலித்துக் கொண்டேயிருந்தார். என்ன படம் எடுத்திருக்கிறாய்ங்க; என்ன பாட்டு போட்டிருக்கிறாய்ங்க.. என்றெல்லாம்!
ராஜு ஒரு கட்டத்தில் வெறுத்துப் போனார். அப்பா பாண்டி.. நீ சலிப்பதென்றால் அப்படி பால்கனி பக்கமாய்ப் போய், சலித்துக் கொட்டிக் கொள். எங்களை நிம்மதியாகப் படம் பார்க்க விடேன்” என்று செல்லமாக நண்பரைக் கடிந்து கொண்டார்.
இந்த நிகழ்வை, காரை ஓட்டியவரிடம் சொல்லிவிட்டு, “நான், காரின் கண்ணாடியை சற்று இறக்கி விடுகிறேன். நீ வேண்டுமானால் வெளியே சலித்துக் கொட்டிக் கொள்”, என்றேன். சக ஊழியர் நாணிப் போனார். வாழ்க்கையில் சலித்துக் கொள்ளாமல், உற்சாகத்துடன் வாழ வேண்டும் என்பதை, தனக்கே உரித்தான நகைச்சுவை உணர்வோடு எனக்குக் கற்பித்தவர் ராஜு என்றால், அது சற்றும் மிகையில்லை!
(கட்டுரையாளர்: துணைத்தலைவர், கார்கோமர் பிரைவேட் லிமிட்டெட், சென்னை)