மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் ..
மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் .. ,இசையால் நம் இதயங்களை மீட்டும் இன்ப வீணை!!
கவிதைக்கு கை கொடுத்த கம்பீரமான கரம்! தமிழ்த்திரையிசையில் பொறிக்கப்பட்ட பொன்னெழுத்துக்களில் பெயர்!! பாலக்காட்டில் பிறந்து கோவையிலே புகுந்து தமிழ்நாட்டையே தன் மீட்டும்விரல்களுக்குள் வைத்திருந்த அற்புத மனிதர்! இசையாய் வாழ்ந்த இவரை மெல்லிசை மன்னர் என்கிற பட்டம் தந்து நாம் மகிழ்ந்தோம்! பாட்டுவரிகளால் அன்றும் இன்றும் நம் நெஞ்சங்களில் பவனி வருகின்ற கவியரசு கண்ணதாசன் அவர்கள்தாம் சென்னை பார்த்தசாரதி மனமகிழ்மன்றத்தில் நடைபெற்ற விழாவில் மெல்லிசை மன்னர் பட்டம் வழங்கினார் என்பது காலம் தரும் செய்தி!!
கவி்யரசு கண்ணதாசன் அவர்களோடு எத்தனையோ இசையமைப்பாளர்கள் இணைந்து பணியாற்றியிருந்தபோதும்.. ஏதோ ஒரு பூர்வஜென்ம பந்தம்போல் அன்பும் நட்பும் கனிவும் பாசமும் இருவருக்குள் காலமெல்லாம் நிழலாடியது உண்மைதானே? இந்த இரட்டையர்களின் பிறந்தநாளும் ஒரே நாளில் அமைந்ததும் அந்த வகையில்தானே? அவர் அடிக்கடி சொல்வது போல்.. எனக்கு மொத்தம் மூன்று கண்கள்.. ஒன்று கண்ணதாசன்.. மற்றொன்று வாலி.. மூன்றாவது கண் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்! மெல்லிசை மன்னரைப் பொறுத்தவரை.. அவர் அமைத்த இசையமைப்பின் மற்றொரு பிரதிபிம்பம் என்று அவர் பாடல்களிலேயே இன்னொன்று காண்பது அரிது!
ஒவ்வொருபாடலிலும் தன் உழைப்பினை ஈந்தவர்.. அவர்.. அதனால்தான் அப்பாடல்கள் அன்றும் இன்றும் என்றும்..ஜீவிதமாய் உலாவருகின்றன! காற்றில் கலந்திருக்கும் பாடல்களில் தமிழ்மொழியை உச்சம் தொட வைத்தவர் எம்.எஸ்.விஸ்வநாதன்! பல்வேறு பாடகபாடகியரை தமிழ்த்திரைக்கு அறிமுகம் தந்திருக்கும் எம்.எஸ்.விஸ்வநாதன் தன் குரலிலும் பாடித் தந்திருக்கும் பாடல்கள் அருமையானவை! இந்த உலகில் இசையைத் தவிர வேறு எதிலும் நாட்டம் காட்டாமல்.. இசையே தன் வாழ்க்கை முழுமைக்கும் என்று இசைக்காகவே வாழ்ந்த திருமகன்!
கவியரசு கண்ணதாசன் அவர்களுக்கு திருவுருவச் சிலை அமைக்க வேண்டும் என்கிற தனது கனவை ஆனந்த விகடன் போன்ற பத்திரிக்கையில் தெரிவித்தும் அதுகுறித்து யாரும் முன் வராத நிலையில்.. பம்மலில் தொடங்கப்பட்டிருந்த கவியரசு கண்ணதாசன் தமிழ்ச்சங்கத்தின் இரண்டாம் ஆண்டுவிழாவில் தனக்கு வழங்கப்பட்ட “கவியரசு கண்ணதாசன் விருதினை” பெற்று ஏற்புரை நிகழ்த்தியபோது அதே கனவை மீண்டும் குறிப்பிட்டபோது.. தங்கள் அமைப்பின் இலட்சியங்களில் அதுவும் ஒன்று என்கிற வகையில் .. மெல்லிசை மன்னரை பின்தொடர்ந்தார் காவிரிமைந்தன். எட்டே மாதங்களுக்குள் கவியரசரின் கம்பீரச்சிலை அவர் வாழ்ந்த தியாகராய நகரில்.. தமிழக முதல் அமைச்சர் மாண்புமிகு புரட்சித்தலைவி ஜெ.ஜெயலலிதா அவர்களால் திறந்துவைக்கப்பட்டதோடு தமிழக அரசே ஏற்ற வரலாறும் உண்டு. உலக அளவில் ஒரு கவிஞனுக்கு ஒரு இசையமைப்பாளன் சிலை எடுத்தது இங்கேதான் என்கிற பெருமையும் மெல்லிசை மன்னருக்கே அமைந்தது!