”பெயர் சொல்லி அழையுங்கள்”……
”பெயர் சொல்லி அழையுங்கள்”..
……………………………………
வெகுநாள் கழித்து ஒருவர் உங்களை பெயர் சொல்லி அழைக்கின்றார் என்றால் அவர் நிச்சயம் உங்கள் பெயரை நினைவில் வைத்து கொண்டு இருக்கிறார் என்பதே நிதர்சனம்….
அவர் உங்கள் பெயருக்கு தரும் மரியாதையை, நீங்களும் அவரது பெயருக்கு தர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அவருக்கும் இருக்கும்.
எல்லோருடைய பெயரையும் ஞாபகம் வைத்துக் கொள்வது என்பது கொஞ்சம் சவாலான செயல்தான்…
அதிலும் நெருங்கி பழகியவர்கள் பெயர் மறந்து போவதற்கு அவரை பெயரை சொல்லி அழைக்காமல் பழகியிருப்பதும் காரணமாக இருந்து இருக்கலாம்..
அதனால் கூடுமானவரை வயதானவர்களை தவிர்த்து மற்றவர்களை பெயர் சொல்லி அழையுங்கள். அதனால் உங்களுக்கு மரியாதை குறைவு ஒன்றும் வந்து விடாது.
பெயர் சொல்லி அழைக்கும்போது மரியாதையை கடைப் பிடிக்க வேண்டும்.
ஒருவரை பெயர் சொல்லி அழைக்கும்போதுதான் அவர் நமக்கு மிக நெருக்கத்தில் வருவார்.
பகைவனாக இருந்தாலும் பழையதை மறந்து பாசத்தோடு பெயர் சொல்லி அழைக்கும்போது அவர் நண்பனாக கூட உங்களை ஏற்கும் வாய்ப்பு இருக்கிறது.
ஒவ்வொருவருக்கும் பெயர் மிகவும் முக்கியமானது, மரியாதைக்குரியது. அதை நாம் நினைவில் வைத்துக் கொண்டு பழகும்போதுதான் அவரிடத்திலும் தக்க மரியாதை வெளிப்படும்.
திடீரென்று பார்க்கும்போது பெயர் தெரியாமல் தர்மசங்கடத்திற்குள்ளாகும் நிலை ஏற்படாமல் இருக்க ஒவ்வொருவர் பெயரையும் மனதிற்குள் பலமுறை சொல்லிப் பார்த்துக் கொள்ளுங்கள். அது பழகிவிடும்.
ஒரே மாதிரி பல பெயர்கள் இருந்தால் அவர்கள் உருவத்தோடு இணைத்து கற்பனை செய்து பலமுறை சொல்லிப் பார்த்து நினைவில் பதிய வைத்துக் கொள்ள வேண்டும்.
எப்போதுமே ஒருவர் உருவத்தைப் பார்த்ததும் அவரது பெயர் நினைவுக்கு வந்து விட வேண்டும்.
அப்போது அவரது பெயரைக் கூறி அழைத்தால் அவர் மகிழ்ச்சியடைவார்.
என்றோ ஒருநாள் நீங்கள் பார்த்த ஒருவரை அவரின் பெயரையும் நினைவில் வைத்துக்கொண்டு,பெயர் சொல்லி அழைக்கும்போது உங்கள் நினைவாற்றல் மீதும்,உங்கள் மீதும் அவருக்கு நல்ல எண்ணம் ஏற்படும்.
‘நம்மை இன்னும் மறக்காமல் நினைவில் வைத்துக் கொண்டிருக்கிறாரே?’ என்று ஆனந்தத்தில் திக்கு முக்காடிப் போவார்.
உங்கள் மீதான மதிப்பும் உயர்ந்து விடும். அவர் மனதில் நீங்கா இடம் பிடித்து விடுவீர்கள்.
மற்றவர்களிடத்திலும் உங்களை பற்றி பெருமையாக பேசுவார். நல்ல குணம் கொண்டவராக, பண்பாளராக மதிப்பிடப்படுவீர்கள்.
ஆம்.,நண்பர்களே..,
நாம் வாழும் சமுதாயத்தில், தெருவை சுத்தம் செய்வோர், காலணி தைப்பவர், வீட்டு வேலை செய்பவர்..இவர்களை நாம் எப்படி பெயர் சொல்லி அழைக்கிறோம்?
அவர்கள் பிறந்த குலத்தின் பெயரிடப்பட்டு கேவலமாக அழைக்கப்படுகின்றனர்.
இவை இருள் சூழ்ந்த பக்கங்கள்.. நம்மைக் குருடாக்கும் பழக்கங்கள்.
வாழ்வின் எந்த நிலையில் ஒருவர் இருந்தாலும், பெயர் சொல்லி அழைக்கும்போது, உள்ளூர பல புதுமைகள் நடக்கும்.(ஆக்கம். உடுமலை சு.தண்டபாணி ………..)