யாதும் ஊரே …
யாதும் ஊரே …
==============================
(கணியன் பூங்குன்றனுக்கு நன்றி)
யாதும் ஊரே யாவரும் “கேளீர்”
தீதும் நன்றும் பிறர் தர வாரா
நோதலும் தணிதலும் அவற்றோன்ன
………………………………..
கணியன் பூங்குன்றன் என்றொரு சான்றோன்
அன்று பாடினான்..செவி மடுத்தீரோ ?
“கோரோனோ குன்றன்” பாடிடுகின்றேன்
பசியில் பட்டினியில் உலகம் தோறும்
மனிதன் ஒன்றே மனிதன் ஒன்றே
உணர்ந்திடும் உள்ளம் உங்களுக்கில்லை.
வண்ண வண்ண கொடிகள் ஏற்றி
இனங்கள் நிறங்கள் மதங்கள் என்று
கற்கள் நட்டீர் வேலிகள் இட்டீர்
கடவுள் கூட்டத்துக்கு கணக்கே இல்லை.
மனிதனை மறந்தீர்.மானுடம் தொலைத்தீர்.
அறிவின் நுட்பம் கொண்டு என்னை
படைக்கவும் முயன்றீர்.வெற்றியும் கொண்டீர்.
ஆயினும் பயனென் கோல்? வாலறிவா அஃது?
வாள் அறிவு அஃ து.மனிதனை மனிதன்
கூறு போட்டுத் தின்னத்தயங்காதவன் நீ.
வணிகம் மூழ்கி லாபத்தூண்டில்
எறிபவன் உனக்கு கிடைப்பதுவும்
மனிதன் மனிதன் மனிதன் தான்.
அவன் ரத்தமும் சதையும் குவித்தது இங்கே
சில்லறை இரைச்சலின் “கரன்சி”க் காடுகள்.
அக்காடுகளுக்கா இக்காடுகள் அழித்தாய்?
மலைகள் கடல்கள் காற்று வளங்கள்
அத்தனையும் உனக்கு உருமாற்றம்
காசுகள் காசுகள் காசுகள் தான்.
ஊரடங்கு உனக்கு நான் தந்தது.
அதை நூலகம் ஆக்கு.சிந்தனை ஏடுகள்
புரட்டிப் புரட்டிப் பார்த்து தெளிந்திடு.
புரட்சிகள் நீயும் எத்தனை செய்தாய்?
குருதி குதித்த மல்லல் பேர் யாறுகள்
எத்தனை?எத்தனை? அவையெலாம் வீணோ?
வரலாறுகள் எனும் நெருப்பின் ஆறுகள்
நீந்திக்கடந்தும் நீதிகள் அழிப்பதோ?
தனி மனிதனும் பொது மனிதனும்
கைகுலுக்கி வாழ்ந்தால் அவலங்கள் எது?
இன்று
கைகுலுக்கப்பயந்து ஓடி ஒளியும்
அவலங்களும் ஏது? உயிர்வளியில் பல
கூடுகள் செய்து உறங்கிக்கிடப்பதும்
ஏன்? ஏன் ? இது எதற்காக?
உலகப்பொது மனிதம் ஒரு நாள்
உயர்ந்த தோர் “வைரஸ்”உருவாக
உன்னை நோக்கி வந்திடலாம்.
அதனையம் அழிக்கும் நச்சாக
அணுக்கதிர் ஆற்றல் வீசாதே.
உயிருள் நுழைந்து அறிந்து பார்.
உயிர் வலி உனக்கு தெரியும் பார்.
உயரிய நோக்கம் வளர்த்து விடு.
உயரிய அறிவியல் மலர்ந்து விடும்.
மானுடப் பேரொளி புரிந்து விடும்.