பிளாஸ்டிக் கழிவுகளை வைத்து தார் சாலை

Vinkmag ad
அறிவியல் கதிர்
பிளாஸ்டிக் கழிவுகளை வைத்து தார் சாலை
பேராசிரியர் கே. ராஜு
மதுரை திருப்பரங்குன்றத்தில் உள்ள தியாகராஜர் பொறியியல் கல்லூரி வளாகத்திற்குச் சென்றால் மிகவும் வித்தியாசமானதொரு காட்சி கிடைக்கும். பல பிளாஸ்டிக்-தார் சாலைகளை அங்கு பார்க்க முடியும். அக்கல்லூரியிலிருந்து ஓய்வு பெற்ற வேதியியல் பேராசியர் ஆர்.வாசுதேவனின் கண்டுபிடிப்பு அது. பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்து மீண்டும் பயன்படுத்தும் ஆராய்ச்சியில் கடந்த இருபது ஆண்டுகளாக தன் உழைப்பைச் செலுத்தி வருகிறார் வாசுதேவன். 2006-ம் ஆண்டில் தியாகராஜர் கல்லூரி இந்தத் தொழில்நுட்பத்திற்கு காப்புரிமை பெற்றது.
18 ஆண்டுகளுக்கு முன் தாருடன் (bitumen) பிளாஸ்டிக்கினால் பூசப்பட்ட துகள்களைக் கலந்து சாலைகள் போட அவர் தொடங்கினார். 2000-ம் ஆண்டில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் உள்ள ஜம்புலிங்கம் தெருவில் அவரது முதல் பிளாஸ்டிக் தார் சாலை போடப்பட்டது. அடுத்து கோவில்பட்டி லெனின் தெருவில் அந்தப் பரிசோதனை நடந்தது. அந்த இரு சாலைகளும் 18 ஆண்டுகள் கழித்தும் வலுவாகவே உள்ளன என்கிறார் வாசுதேவன்.
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை தமிழக மாவட்டங்களில் 17,000 கி.மீ. சாலைகளைப் போட்டிருக்கிறது. புதுச்சேரி, ஆந்திரா, மேற்கு வங்கம், கோவா, இமாச்சலப் பிரதேசம், கேரளா ஆகிய மாநிலங்கள் பிளாஸ்டிக் சாலை தொழில் நுட்பத்தை ஏற்றுக் கொண்டிருக்கின்றன. 2015-ம் ஆண்டில் மத்திய அரசு கொணர்ந்த ஒரு சட்டமும் இதற்கு ஊக்கமளிக்கிறது. இந்தியாவின் பல மாநிலங்களிலும் இதுவரை 1,00,000 கி.மீ. பிளாஸ்டிக்-தார் சாலைகள் போடப்பட்டுள்ளன. பிளாஸ்டிக் சாலைகள் போட விரும்பும் எவருக்கும் அந்தத் தொழில்நுட்பத்தையும் வழிகாட்டுதலையும் இலவசமாகத் தர நாங்கள் தயாராக இருக்கிறோம் என்கிறார் இந்தியாவின் பிளாஸ்டிக் மனிதர் என அழைக்கப்படும் பத்மஸ்ரீ வாசுதேவன். பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை கொணர்வது சுற்றுச்சூழல் நோக்கில் பொதுவாக வரவேற்கப்படுகிறது. ஆனால் வாசுதேவன் இக்கருத்திலிருந்து மாறுபடுகிறார். “சுற்றுச்சூழல் பராமரிப்புக்கு பிளாஸ்டிக்கைத் தடை செய்வது தீர்வு அல்ல. மாறாக, பிளாஸ்டிக் கழிவுகளைச் சரியான முறையில் சேகரித்து திறம்படப் பயன்படுத்துவதுதான் தீர்வு. காரணம், பிளாஸ்டிக் ஒரு முக்கியமான கண்டுபிடிப்பு. பல்வேறு விதங்களில் அது நமக்குப் பயன்பட்டு வருகிறது. நம்முடைய வாழ்க்கையிலிருந்து அதை அகற்றுவது நடைமுறை சாத்தியமற்றது” என்கிறார் அவர். பிளாஸ்டிக் கழிவுகளை குப்பைக் கூடைகளில் வீசி எறிவதற்குப் பதிலாக, பழைய பேப்பர்களை எடைக்குப் போடுவதைப் போல மறுசுழற்சி செய்வதற்காக அவற்றைக் கடைகளில் கொண்டுபோய் விற்கும் நடைமுறை அமுலுக்கு வரவேண்டும் என அவர் பரிந்துரைக்கிறார். குப்பைகளிலிருந்து பிளாஸ்டிக் பொருட்களைப் பிரித்தெடுப்பது அனைத்து தனியார் மற்றும் பொது இடங்களிலும் நடைபெற வேண்டும். அவற்றை சாலை போடும் நிறுவனங்களில் கொண்டுபோய் விற்பதற்கு சுயஉதவிக் குழுக்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது அவரது ஆலோசனை. பேரா. வாசுதேவனுடனும் பிற நிபுணர்களுடனும் அரசு கலந்தோசித்து பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்து பயன்படுத்தும் நடைமுறைக்கு முக்கியத்துவம் கொடுப்பது இப்பிரச்சனைக்கு சரியான தீர்வாக அமையும்.
“நாட்டிலுள்ள 46 லட்சம் கி.மீ. நீளம் உள்ள அனைத்து சாலைகளுக்கும் பிளாஸ்டிக்-தார் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டும் எனில் 100 லட்சம் டன்கள் பிளாஸ்டிக் கழிவுகள் தேவைப்படும். ஆங்காங்கே வீசி எறியப்படும் கழிவுகளைச் சேகரித்தாலும் 30 லட்சம் டன்கள் பிளாஸ்டிக் கழிவுகள் மட்டுமே தேறும். சரியான முறையில் பிளாஸ்டிக் கழிவுகளை நிர்வகிக்காமல் நீர்நிலைகளையும் கால்வாய்களையும் அவை அடைத்துக் கொள்ளுமாறு விடுவது அரசு, நிறுவனங்கள், மக்கள் ஆகிய நம் எல்லோருடைய தவறு. அதிக அளவில் நமக்குப் பயன்படக் கூடிய பிளாஸ்டிக் போன்ற அருமையானதொரு பொருள் மனிதத் தவறின் காரணமாக கெட்ட பெயர் வாங்கியிருக்கிறது” என்று மேலும் விளக்கம் அளிக்கிறார் வாசுதேவன்.
கல் பாளத்திற்கு பிளாஸ்டிக் பூச்சு கொடுத்து பிளாஸ்டோன் என்ற பொருளை அவர் தயாரித்திருக்கிறார். தரைத் தளம் போட, காம்பவுண்ட் சுவர் எழுப்ப, கழிப்பறைகள் கட்ட எனப் பல்வேறு விதங்களில் அதைப் பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறார் பேரா. வாசுதேவன்.
                     ( உதவிய கட்டுரை ; அக்டோபர் 23 ஆங்கில இந்து நாளிதழ் மெட்ரோபிளஸ் இணைப்பில் சோமா பாசு எழுதிய கட்டுரை)

News

Read Previous

அமீரகத்திலிருந்து உம்ரா பயணம் மேற்கொள்ள ……….

Read Next

மூளை முதல் மலக்குடல் வரை… பலப்படுத்த சில எளிய வழிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *