நகரமயமாக்கலும் கொரோனாவும்
நகரமயமாக்கலும் கொரோனாவும்
கொரோனா விஸ்வரூபத்தைக் கண்டு சர்வதேச சமூகம் கதிகலங்கி நிற்கிறது. இந்தியாவும் இதற்கு விதிவிலக்கல்ல. தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு விதமான வழிமுறைகளை அந்தந்த நாட்டு அரசுகள் மேற்கொண்டன. ஒரே நாட்டில் உள்ள பல்வேறு மாநில அரசுகளும் ஒவ்வொரு விதமாகக் கையாண்டன.
தமிழகத்தில் இத்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையில் சரிபாதிக்கு மேல் சென்னையில்தான் என்பதிலிருந்தே நகரங்களை நோக்கிய கொரோனா பாய்ச்சலைப் புரிந்துகொள்ளமுடியும்.
நகரங்களை நோக்கிய கொரோனாவின் கோபத்திற்குக் காரணம் என்ன?
நெரிசல் மிக்க வசிப்பிடங்களில் மக்கள் குவியலாக வாழ்வதுதான் நோய் பரவக் காரணம் என்று ஆட்சியாளர்கள் கூறுகின்றனர். சர்வதேசத் தொடர்பு மையமாக நகரங்கள் இருப்பதையும் மற்றொரு காரணமாகக் கூறுகின்றனர். அவற்றைக் கட்டுப்படுத்துவதில் ஆட்சியாளர்களுக்கு ஏற்பட்டுள்ள இயலாமையை- தோல்வியை மூடி மறைப்பதற்கான முயற்சியை அரசு சொல்லும் காரணங்களாகும்.
வீட்டு வசதி, உணவுப் பாதுகாப்பு, சுகாதாரம், தரமான பொதுக்கல்வி, உத்தரவாதமான வேலைவாய்ப்பு, பொதுப் போக்குவரத்து வசதி, சாக்கடை நீர் கலக்காத சுத்தமான குடிநீர், கழிவு நீர் மேலாண்மையின் ஒரு பகுதியான பாதாள சாக்கடைத் திட்டம், குப்பையற்ற நகரத்திற்கு அடிப்படையான திடக்கழிவு மேலாண்மை, ஆறுகள் மற்றும் நீர்நிலைகள் உள்ளிட்ட இயற்கை வளங்களைப் பாதுகாத்தல், மாசற்ற காற்று, மக்கள் நலன் சார்ந்த நிலையான கட்டமைப்பு கொண்ட நகர வளர்ச்சி ஆகியவற்றை அரசுதானே உருவாக்க முடியும்?
ஏற்றத்தாழ்வை அடிப்படையாகக் கொண்ட முதலாளித்துவ சமூக அமைப்பில் நகரத்தை நோக்கி மக்கள் திரள்வது தவிர்க்க முடியாததாகிவிட்டது. தற்போதைய நவீன உலகமயப் போட்டியில் கார்ப்பரேட் மயமாக்கப்பட்ட சந்தைக்கும், நகரக் கட்டமைப்புத் திட்டங்களை உருவாக்கி அமல்படுத்த வேண்டிய அரசிற்கும் ஒரு நெருக்கமான பிணைப்பு உள்ளது. எனவேதான் நகரமயமாக்கல் மக்களின் நல்வாழ்விற்காக நடை பெறுவதை விட சர்வதேச நிதி மூலதனத்தின் தேவைகளை நிறைவேற்றுவதற்காகவே நடைபெறுகிறது. ஸ்மார்ட் சிட்டி துவக்க விழாவில் “நகரமயமாக்கல் சாபமல்ல, அது வரம்” என்று பிரதமர் மோடி திருவாய் மலர்ந்ததும் சந்தையின் தேவைக்காகவே.
வேலை, கல்வி, குடியிருப்பு, சுகாதாரம் உள்ளிட்ட மக்களின் அடிப்படைத் தேவைகளை அவசியம் என்று கருதக்கூடிய நிலையான நகரக் கட்டமைப்புக்கான சிறப்புத் திட்டங்கள் உருவாக்கப்படவேண்டும். குடிசைப் பகுதி மக்களின் நலன்களை முதன்மை இலக்காகக் கொண்டு மாபெரும் மக்கள் இயக்கம் நடைபெறும்போதுதான் நகரமயமாக்கலைத் தறி கெட்டுப் போகாமல் தடுக்க முடியும்
(மே மாத மார்க்சிஸ்ட் இதழில் திரு.டி கே சண்முகம் எழுதியதிலிருந்து)