துணிந்து செய்
துணிந்து செய்
— பூங்கோதை கனகராஜன்
பணிந்து போகுதல் அன்புக்கே
அடிபணிந்து போகுதல் யாருக்கும் அடிமைக்கெனில்
தூக்கியெறிந்து துச்சமாக்கிட
சொல்லிக் கொடுத்தானே
அச்சமில்லை அச்சமில்லை
அச்சமென்பதில்லையே!
பாரினில் எம் பாட்டன் பாரதியெனும் பெருங்கவி சொல்லி வைத்தான்
ஓடி விளையாடும் பாப்பா விடம் வீரம் போதித்தவனாய்
பாதகம் செய்பவரைக் கண்டால் நீ பயங்கொள்ளலாகாது
பாப்பாவென!
மோதி மிதிக்கவும் சொன்னான்
அவர் முகத்தில் உமிழவும் துணிந்து செய் யென் சொன்னானே!
பொய் சொல்லவும் புறஞ்சொல்லுபவர்களையும் எள்ளி நகையாடிய எம் அப்பன்
அருங்கவியின் துணையெமக்கு பெருந்துணையே வெந்து தணியும் காட்டில் குஞ்சொன்றும் மூப்பென்றும் இல்லாதிருக்க
வந்தெமை என்ன
தீண்டி விடும்,.,?
எட்டையபுரத்து கவிஞன்
எட்டாத உயரத்தில் நின்று
முண்டாசு கட்டினாலும் மனைவி செல்லம்மா வை கண்ணம்மாவாக்கி காற்று வெளியிடை காதலாக்கி கொஞ்சி விஞ்சு புகழடைந்தான்!
வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வள்ளலாராய் காணும் உயிரையெல்லாம் சொந்தமாக்கி காக்கை குருவி எங்கள் சாதி நீள் கடலையும் மலையையும் அவனுடமையாக்கி உலகமே அவன் உன்மத்தமாக்கினான்!
சிந்துமிசை நிலவினிலே சேர நன்னாட்டிளம் பெண்களுடனே
பாடிக்களித்து சிங்களத்தீவுக்கும் பாலமமைத்தவன் சொல்லிக் கொடுத்தான் அன்போடு துணிவையும்!
குழந்தை கண்ணனை கொஞ்சி மகிழ்ந்தவன் கம்சனாய் கொள்ளையடிக்கும் கூட்டத்தையும் வாளெடுத்து வீசக் கற்றுத் தந்தானே!
பாஞ்சாலி சபதத்தில் வீறு கொண்டெழச்செய்து நம்மை
ஏறு நடையாக்கி பீடுடைத்தான்!
தனியொருவனுக்கு உணவில்லாது போனால் ஜகம் அழிக்கச் சொல்லி
ருத்ர தாண்டவம் போதித்தவனே!
தேடிச் சோறு நிதம் தின்னும் வீணர்களை நெஞ்சு பொறுக்காது நிலைகெட்ட மனிதரை சாடிய வீரனே!
தமிழனென்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடாவென துணிவோடு எம் தலை நிமிரச் செய்த எம் பாட்டுடைத்தலைவன் பாரதியே!!!
நான் வீழ்வேனென நினைத்தாயோ!!
சூளுரைத்த பாரதியே!
பாருக்குள்ளே நல்ல நம்
பாரத நாடு பரிதவித்து கிடக்கிறது! மாண்டு விடவில்லை நீ மீண்டு(ம்) மீசை முறுக்கி எழுந்து வா!!!