தமிழின் பொற்காலம்

Vinkmag ad

 

உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் காயிதே மில்லத்

நிகழ்த்திய உரை

 

சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பே இயற்றப்பட்ட சிலப்பதிகாரத்தைப் படிக்கும்போது நமக்கு ஏற்படுகின்ற உணர்ச்சி தரம்பிரித்துக் கூற முடியாது. சிலப்பதிகாரத்தில் என்னென்ன சொற்கள் கையாளப்பட்டனவோ, அத்தனையும் இரண்டே இரண்டு வார்த்தைகள் தவிர இன்றும் நமது தமிழ் மொழியில் வழங்கப்படுகின்றன.

‘வண்ணமும் சுண்ணமும்’ என்ற இந்த இரண்டு சொற்களை என்ன அர்த்தத்தில் குறிப்பிட்டார்கள் என்பதுதான் தெரியாமல் இருக்கிறது. சிலப்பதிகாரம் பண்டைய கால பூம்புகாருக்கே நம்மைக் கொண்டு செல்கின்றது.

அக்காலத்தில் வாழ்ந்த தமிழர் இப்போது நமக்கிருக்கும் விஞ்ஞான வசதிகளைப் பெற்றவர்களாக இல்லாதிருந்துங்கூட மிகச் சிறப்பான வாழந்திருக்கிறார்கள் மண்பாண்டங்கள் மற்றுமுண்டான பண்டங்களைச் செய்து நாகரித்தின் உச்சியிலே தமிழன் இருந்தான் என்றால், இது ஒன்றே அவன் சிறப்புக்குப் போதாதா என்ன? எல்லாவற்றுக்கும் மேலாக, அவன் சிறப்புச் செய்து வாழ்ந்தானே அதைத்தான் நமது பொற்காலம் என்று கூற வேண்டும்.

மண்ணியலார் ‘பூமி முதலில் ஆவியாக தண்ணீராக இருந்து பின்னர் மண்ணாக மாறியது’ என்று கூறுகிறார்கள். மனிதன் மண்ணிலிருந்து தோன்றினான் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். அவ்வாறு தோன்றிய முதல் பகுதியே திராவிடம் தான் என்றும் முதல் மனிதரே இந்த தமிழ் மண்ணில் தான் பிறந்தார் என்றும் கூறுகிறார்கள். அப்படியானால் அந்த முதல் மனிதர் பேசிய மூத்த மொழி ‘தமிழ்’ என்று கூறுவதில் தவறேதும் இருக்க முடியாதல்லவா? ‘கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த தமிழ்’ என்று நாம் சிறப்பித்துக் கூறுவதும் இவ்வுண்மையைப் பிரதிபலிக்கக் கூடியது தானே?

இந்நிலையில் எதிர்பாராதவிதமாக தமிழர்கள் நாகரித்தின் உச்சியிலே இருந்ததால், அவன் பெருமையைக் குறைக்க ஆரியர்கள் இந்த நாட்டுக்குப் படை எடுத்து வந்து போரிட்டார்கள். ஆனால் அப்படிப் போரிட்டவர்கள் நம்முடைய பெண்மணிகளின் வீர வலிமைக்கு முன்னே கூட நிற்க முடியாதவர்களாகத் தோற்றார்கள்.

‘பிலிஸ்தானில்’ 8,500 ஆண்டுகளுக்கு முன்னதாகக் கட்டப்பட்ட ‘மொகஞ்சடோ’ என்ற நகரத்தைப் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். 8,500 ஆண்டுகளுக்கு முன்னதாக என்றால், எத்தனை ஆண்டுகளுக்கு முன்பு என்று வரையறுத்துச் சொல்ல முடியாத தொன்மையான நகரம். அங்கே தமிழ்க் கல்வெட்டு இருக்கிறது, இப்பொழுதும் அங்கு வாழ்கிற ‘பிரிசு’ என்ற இனத்தவர் பேசுகின்ற மொழியின் உச்சரிப்பைக் கூர்ந்து கவனித்தால் அதிலே தமிழ் ஒலி இருப்பதை உணர முடியும். அக்காலத்திலேயே அகலமான வீதிகள் அமைத்தும், கழிவு நீர்க்கால்வாய்கள் அமைத்தும், குளிப்பதற்கான குளங்கள் வெட்டியும், அந்நகரம் அமைக்கப்பட்டிருந்தது. இது ஒன்றே ‘தமிழினம் நாகரிக உச்சியில் இருந்தது’ என்பதற்குப் போதுமான சான்றாகும்.

தமிழன் நாகரிகத்தில் வாழ்வதைக் கேள்விப்பட்ட ஆரியர் 3,500 ஆண்டுகளுக்கு முன்னரே இங்கு வந்து அதைக் காணச் சகிக்காதவர்களாக தமிழர்களுடன் போரிட்டிருக்கிறார்கள். வட நாடு என்று ஒன்று அப்போது இருந்ததில்லை. திராவிட இனம், தமிழினம், தமிழர் நாடு என்பதாகத்தான் இருந்திருக்கிறது. ஆரியர்கள் நுழைந்தார்கள். நாட்டையும், இனத்தையும் பிரித்தார்கள். இந்தத் துணைக் கண்டம் முழுவதும் பரவியிருந்த நம்மை ஒரு பகுதியில் கொண்டுவந்து ஒதுக்கிவிட்டார்கள்.

அக்காலத்திலேயே தமிழன் நாகரித்தோடு வாழ்ந்தான் என்பதை நினைக்கும் போது ஏற்படுகின்ற இன்பத்தை விட தமிழ் மொழியின் பழைமை மிக உயர்ந்தது என்பதை நினைக்கும்போது ஏற்படுகின்ற இன்பம் மிகையானது. தமிழைப் படிக்கப் படிக்க அதன் தொன்மையை ஆராய ஆராய நமக்கு ஏற்படுகின்ற இன்பம் ருசி படைத்ததாகும். ஆகவே தான் நாம் ‘பொற்காலத்தில் இன்று மட்டும் வாழவில்லை; அன்றும் வாழ்ந்தோம்’ என்கிறோம்.

தமிழனுக்கு நாகரிகச் சிறப்பும் மொழியின் தொன்மைச் சிறப்பும் இருப்பதோடு அக்காலத்தில் வெளிநாடுகளுடன் கொண்டிருந்த வாணிபத் தொடர்பு எல்லாம் நம் பக்கமே இருந்தது என்பதும் இந்தியாவின் வேறு எந்தப் பகுதிகளுடன் இருந்ததில்லை என்பதும் நம் தனிச் சிறப்பு. பெசண்ட் அம்மையார் எழுதியுள்ள நூலில், இந்தியா அந்நிய நாடுகளுடன் கொண்டிருந்த வர்த்தகத் தொடர்பு பற்றி கூறுவதெல்லாம் தமிழகத்தையன்றி வேறில்லை. அதிலும், முத்தும், செந்நெல்லும், இன்ன பிற வாசனைத் திரவியங்களும் வாங்கிப் போனார். சாலமன் மன்னர் என்றால், அது தமிழகத்திலிருந்து தான். ரோம். கிரேக்கம், ஆப்பிரிக்கா, அமெரிக்க, ஜமெக்கா தீவு இவ்வளவு தொலைதூரம் வரைக்கும் நம்முடைய வாணிபம் வியாபித்திருந்தது என்பதைப் பொற்காலம் என்பதா?

அதுமட்டுமல்ல, அரேபியர்களும் இங்கு வந்து நம்முடன் வணிகத் தொடர்பு கொண்டிருந்தார்கள். இஸ்லாமிய தீர்க்கதரிசி நபிகள் நாயகம் (ஸல்) பிறப்பதற்கு முன்னேயே அவர்கள் தமிழகத்துக்குக் குதிரை கொணர்ந்து பொருள்கள் வாங்கிச் சென்றிருக்கிறார்கள். பின்னர் நபிகள் நாயகத்தைப் பின்பற்றியவர்கள் வந்தார்கள். எனவே தமிழகத்தில் இஸ்லாம் தழைத்தது; தமிழும் அவர்களுடன் சேர்ந்து தழைத்தது.

உமறுப்புலவர், ஜவ்வாதுப்புலவர், காசிம் புலவர் போன்ற கணக்கற்ற தமிழ் முஸ்லிம் புலவர்கள் தோன்றியதும் முஸ்லிம்களால் இயற்றப்பட்ட 800 க்கும் மேற்பட்ட தொன்மை வாய்ந்த தமிழ் நூல்கள் ஒரு மேல்நாட்டு ஆராய்ச்சியாளரிடம் சிக்கி இருப்பதும் முஸ்லிம்கள் தமிழுக்குச் செய்த தொண்டை எடுத்துக்காட்டுவதாகும்.

1947 இல், அரசியல் நிர்ணய சபையில் நான் தமிழுக்காக தாய்மொழிக்காக வாதாடினேன் என்றால், தமிழின் அழகு, இயற்கை, இன்பம், வாய்மை, தரம் இவற்றிற்காக வாதாடினேன் என்பதுதான் பொருள். இத்தனை சிறப்புகளும் தமிழுக்கேயன்றி வேறு மொழி எதற்கும் இல்லை என்பதால்தான், இந்தியாவின் ஆட்சிமொழியாகத் தமிழ் இருக்க வேண்டும் என்று அப்போது கூறினேன்.

 

நன்றி :

சமநிலைச் சமுதாயம்

ஜுன் 2010

News

Read Previous

செம்மொழிக் காவலர் காயிதெ மில்லத் —– ஜே. எம். சாலி

Read Next

கடன் — க.து.மு. இக்பால், சிங்கப்பூர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *