தன்னம்பிக்கை
துவண்டுபோய் கிடந்தது மனம். என்ன இந்த வாழ்க்கையென்று ஒரு சலிப்புணர்வு அவ்வப்போது தலை தூக்கி மனதோடு உடலையும் சிறிது வருத்திவிட்டுச் சென்றுவிடும். தொற்று நோய்கள் ஒரு பக்கம் வாழ்க்கைக் கம்பளத்தைப் புரட்டிப் போட்டுக் கொண்டிருக்க, முன்பு நடந்த சில பாதிப்புகள் இடையிடையே வந்து நிகழ்கால நிம்மதியை குலைத்துக் கொண்டிருக்க, எதிர்காலம் என்ன ஆகுமோ என்ற நினைவு அரக்கன் வேறு வந்துவந்து பயமுறுத்திக் கொண்டிருக்க….
எங்காவது ஆறுதல் கிடைக்காதா என்ற கவலைக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தேன் என்பதுதான் உண்மையிலும் உண்மை. தன்னம்பிக்கை என்னும் ஆறுதல் கப்பலொன்று என் வாட்ஸ்அப் நோக்கிவந்தது முகைதீன் அண்ணன் என்னும் துறைமுகத்திலிருந்து.
முக்காலத்தையும் நினைத்து வதங்கிய மனதிற்கு மருந்தாகவும், துணிந்து வாழச் சொல்லும் தைரியமாகவும்,புத்துணர்ச்சியோடு கவலைகளை களைந்தெறியும் அரிவாளாகவும் இருக்கிறது அண்ணனின் தன்னம்பிக்கைதரும் இந்த எழுத்துக்கள். எல்லாத் துறையையும் தொட்டு எழுதியிருக்கும் வல்லமை மிகுந்த எழுத்துக்கள் அருமை. மனதிற்கு மிகுந்த ஆறுதலும், நல்ல தன்னம்பிக்கையும் தந்து கொண்டிருக்கிறது.
“மனிதர்களுக்கு பொருளால் உதவுங்கள், பணத்தால் உதவுங்கள், இல்லையென்னும் பட்சத்தில் நல்ல ஆறுதலான சொற்களால் உதவுங்கள்”- என்பது எம்பெருமானார் வாக்கு!
நபிகளார் சொன்னபடி மூன்றுவிதத்தாலும் உதவும் அண்ணன் இன்னும் நிறைய ஆக்கங்களை நீண்ட ஆண்டுகளுக்கு அளிக்க வேண்டும் என இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.
ஃபாத்திமா ஹமீத், ஷார்ஜா