சூடேறும் பூமி
சூடேறும் பூமி
அப்பப்பா…என்ன வெய்யில், என்ன வெய்யில்…இந்த மாதிரி எந்த வருஷமும் மண்டையைப் பொளக்கற வெய்யில் இருந்ததில்லே..ஆவணி மாசம் மாதிரியா இருக்கு.. சித்திரை, வைகாசி மாதிரியில்ல இருக்கு… என்று நாம் ஒவ்வொரு வருஷமும் அங்கலாய்த்துக்கொள்கிறோம்.
உண்மைதான். பூமி உண்மையிலேயே சூடாகிக் கொண்டுதான் வருகிறது. தற்சமயம் உலகத்திற்கும் பூமியின் எதிர்காலத்திற்கும் மிகப்பெரிய ஆபத்தாக இந்த சூடேறும் பூமி (Global warming) விஞ்ஞானிகளால் பார்க்கப்படுகிறது.
செப்டம்பர் 11-ஐ விட அதிக இழப்பு
2001 செப்டம்பர் 11 அன்று அமெரிக்கக் கட்டடங்கள் தகர்க்கப்பட்டபோது இறந்ததைப்போல் நூறு மடங்கு அதிகமான இறப்பு பூமிசூடேறுவதால் நிகழ்ந்திருக்கிறது. ஆனால் இறந்தவர்களெல்லாம் பாவப்பட்ட `தெற்கு நாடுகள்’ என்று சொல்லப்படும் ஏழை நாடுகளைச்சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களது மரணத்திற்கு எந்த விளம்பரமும் கிடைக்கவில்லை. பூமி சூடேறுவதில் வளர்ந்த நாடுகளுக்குபெரும் பங்கு இருப்பினும் மற்ற நாடுகளில் உள்ள மக்களுக்கும் கணிசமான பங்கு இருப்பதை மறுப்பதற்கில்லை. நாம் பயன்படுத்தும்பெட்ரோல், டீசல், எரிவாயு, நிலக்கரி–அவற்றைப் பயன்படுத்தி நாம் உற்பத்தி செய்யும் கார்கள், எஃகு, மின்சாரம் ஆ கியவையும் அவற்றை உற்பத்தி செய்யும் ஆலைகளுமே பூமியின் வெப்பநிலை ஏறி வருவதற்குக் காரணம்.
வெப்பம் அதிகமானால் என்ன, குளிர்பதன சாதனங்களைப் பயன்படுத்திக் கொண்டால் போகிறது என்று இந்தப் பிரச்சனையைஅலட்சியமாக ஒதுக்கித் தள்ளிவிட முடியாது. அந்த குளிர்பதன சாதனங்களினால் மேலும் அதிகமாக பூமி சூடேறுவதே நாம் கண்ட பலனாக இருக்கும்! பூமியின் தட்பவெப்பநிலை மாறுவதால் புயல், வெள்ளம், வறட்சி போன்ற இயற்கைச் சீற்றங்கள் அதிகமாகின்றன.அவற்றின் காரணமாக ஏற்கனவே பல்லாயிரக்கணக்கானோர் பலியாகிவிட்டனர். எதிர்காலத்தில் இயற்கைச் சீற்றங்கள் மேலும்அதிகமாகும் ஆபத்து நம் தலைக்கு மேல் தொங்கும் கத்தியாக உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது.
மின் உற்பத்தியைக் குறைத்தால் எங்களது வளர்ச்சி என்ன ஆவது? அடுத்த 20 வருடங்களுக்கு ஒவ்வொரு வருடமும் ஒரு பெரிய மின்உற்பத்தி நிலையம் அமைப்போம் என்கிறது அமெரிக்கா. நம் கிராமங்களில் உள்ள ஏழை எளிய மக்கள் மின்சாரம் அதிகமாகஉபயோகிப்பதில்லை ; கார் உபயோகிப்பதில்லை ; சமையலுக்கு எரிவாயு உபயோகிப்பதில்லை. அவர்களுக்கு பூமியைச்சூடாக்குவதில் பெரிய பங்கும் இல்லை. ஆனால் மற்றவர்கள்–குறிப்பாக வளர்ந்த நாடுகளில் உள்ள மக்கள்–பூமியின் வெப்பநிலையை அதிகரிக்கும் செயல்களில் ஈடுபடுவதால் கிராமப்புற மக்களும் சேர்ந்தேதான் பாதிக்கப்படுகிறார்கள். இப்படி மற்றவர்களின் செயல்காரணமாகத் தாங்கள் பாதிக்கப்படுவது கூட அந்த அப்பாவி மக்களுக்குத் தெரியாது.
பசுங்குடில் விளைவு (Greenhouse effect)
பூமி சூடாவதற்கு பசுங்குடில் விளைவுதான் காரணம். அப்படியென்றால்..? சூரியனிலிருந்து பூமிக்கு வரும் வெப்பக்கதிர்கள் குறுகியஅலைநீளம் உள்ளவை. வெப்பத்தை பூமி காற்று மண்டலத்திற்குத் திருப்பியனுப்புகிறது. அந்தக் கதிர்கள் நீண்ட அலைநீளம்உடையவை. நம்மைச் சுற்றியுள்ள காற்று மண்டலத்தில் நைட்ரஜன் 78 சதமும் ஆக்சிஜன் 21 சதமும் உள்ளன. இவை சூரியனிலிருந்துவரும் கதிரியக்கத்தையும் பூமியிலிருந்து வெளியேறும் கதிரியக்கத்தையும் தங்கள் ஊடே செல்ல அனுமதிக்கக் கூடியவை. மீதி உள்ளஒரு சதம் காற்று மண்டலம் கார்பன் டை ஆக்சைட், மீத்தேன், நைட்ரஸ் ஆக்சைட், ஈரப்பதம் ஆகியவற்றால் ஆனவை. இவை குறுகியஅலைகளை அனுமதிக்கின்றன ; ஆனால் நீண்ட அலைகளை அனுமதிப்பதில்லை. இவை பூமியிலிருந்து வரும் வெப்பத்தை உள்வாங்கிஅதில் ஒரு பகுதியை பூமிக்கே திருப்பியனுப்புகின்றன. இந்த வாயுக்கள் பசுங்குடில் வாயுக்கள் (greenhouse gases) என்றும் இவை ஏற்படுத்தும்விளைவு பசுங்குடில் விளைவு (greenhouse effect) என்றும் அழைக்கப்படுகின்றன. இப்படி நடக்காவிடில் பூமியின் வெப்பநிலை மைனஸ் 19டிகிரி சென்டிகிரேட் ஆக இருந்திருக்கும். பூமியில் உயிரினமே தோன்றியிருக்காது. பூமி சூடேறுவது பற்றி கவலைப்பட நாமேஇருந்திருக்க மாட்டோம். இந்த பசுங்குடில் விளைவு உயிரினத்திற்கு அவ்வளவு ஆதாரமானது. ஆனாலும் அளவுக்கு மிஞ்சினால்அமுதமும் விஷம் அல்லவா? பூமியின் வெப்பம் பூமிக்கே அளவுக்கதிகமாகத் திருப்பியனுப்பப்படும்போது பூமி சூடாகி விடுகிறது.
பரிணாம வளர்ச்சி
பூமி தோன்றி உருவாகிக்கொண்டிருந்த தருணத்தில் (அதாவது 450 கோடி வருடங்களுக்கு முன்) பூமியைச் சுற்றி ஆக்சிஜன்இருக்கவில்லை. கார்பன் டை ஆக்சைடும் மீத்தேனும்தான் இருந்தன. பின்னர் தாவரங்கள் உருவான பிறகு, தாவரங்களும் மரங்களும்கார்பன் டை ஆக்சைடை உள்ளிழுத்து ஆக்சிஜனை வெளியிட்டதால் காற்று மண்டலத்தில் ஆக்சிஜனின் அளவு கூடியது . இதுவேஉயிரினங்கள் தோன்ற வழி செய்தது. கார்பன் டை ஆக்சைடை உள்ளிழுத்து கார்பனைச் சேமித்த தாவரங்களும் மரங்களும்பூமிக்கடியில் புதைந்து நிலக்கரி, பெட்ரோலிய இருப்புகளாக மாறின. பல லட்சம் ஆண்டுகளுக்கு முன் புதைந்து போனதால் இவைதொல் எரிபொருட்கள் (fossil fuels) என அழைக்கப்படுகின்றன. தொழிற்புரட்சி காலத்திற்குப் பிறகு மனிதன் மிக அதிகமான அளவுக்கு பெட்ரோல், டீசல், நிலக்கரியைப் பயன்படுத்தி வருவதால் காற்று மண்டலத்தில் கார்பன் டை ஆக்சைடும் மீத்தேனும் அதிகமாகச் சேரஆரம்பித்தன. கூடவே காடுகளும் படிப்படியாக அழிக்கப்பட்டு வருவதால், கார்பன் டை ஆக்சைடு உள்வாங்கப்படுவதும் குறைந்துவருகிறது. இவ்விரண்டும் சேர்ந்து பூமி சூடாவதில் போய் முடிந்திருக்கிறது. மிகச் சிரமப்பட்டு இயற்கைச் சமநிலையைச் சீரழித்துதனக்குத்தானே மனிதன் குழி தோண்டிக் கொள்கிறான். அதனால் மனிதர்களிடமிருந்தே பூமியைக் காப்பாற்ற வேண்டிய வினோதமானசூழ்நிலை தோன்றிவிட்டது.
பேராசிரியர் கே. ராஜு , ஆசிரியர், புதிய ஆசிரியன்
2006-ம் ஆண்டு எழுதப்பட்ட கட்டுரை.. மீண்டும் உங்கள் முன்