உரைத்தான் சிறுவன்.. உறைத்தது எனக்கு..

Vinkmag ad
காலை ஆறு மணி. மொபைலில் அலார ஓசை ஒலித்தது. போர்வைக்குள் முடங்கிக் கிடந்த மொத்த உடலில் கை மட்டும் வெளியே நீண்டு தலையணை அருகில் இருந்த மொபைலில் பட்டனை அழுத்தி அலார ஓசையை அடங்கச் செய்தது. மொபைலில் ஸ்னூஸ் (SNOOZE) வசதி மூலமாக பத்து நிமிடத்திற்கு ஒருமுறை அலாரம் அலறிக் கொண்டே இருந்தது. பத்து நிமிடத்திற்கு ஒரு முறை அலாரம் ஒலிப்பதும், ஒலிக்கும் போது மட்டும் கை போர்வையை விட்டு வெளியே நீண்டு பட்டனை அழுத்தி நிறுத்துவதும் 7.30 மணி வரை தொடர்ந்தது.

 

நித்திரையிலிருந்து படிப்படியாக மீள ஒன்றரை மணி நேரம் தேவைப்பட்டது. நித்திரையிலிருந்து மீண்டாலும் எழும்ப மனமில்லாமல் படுக்கையிலேயே சுருண்டு கிடந்தது உடல். கை விரல்கள் மொபைலில் முந்தைய இரவு வந்திருந்த மெசேஜ்களைப் பார்த்துக் கொண்டிருந்தது.  காலையில் தூக்கம் கலைந்த உடன் வழக்கமாக வரும் எண்ணமான, ‘இன்று கல்லூரிக்குப் போகலாமா அல்லது இன்றும் கட்டையைப் போட்டுவிடலாமா…?’ என்ற எண்ணம் அன்றும் மனதில் நிழலாடியது. குளித்து முடித்து கண்ணாடியின் முன் நின்று தலை வாரிக் கொண்டிருந்த நண்பனின், ‘இன்னும் இரண்டு நாள் லீவு போட்டால் நீ கான்டொனேஷன் (CONDONATION) கட்ட வேண்டியதிருக்கும்’; என்ற அக்கறை கலந்த எச்சரிக்கையால் உடல் படுக்கையை விட்டு வெடுக்கென எழுந்தது. (அட்டன்டன்ஸ் (ATTENDANCE) கம்மியாகிவிட்டால் சில நூறுகள் அபராதமாக கட்ட வேண்டுமே என்ற கவலையைவிட, அபராதத் தொகையைக் கட்ட வரிசையில் நிற்க வேண்டுமே, ஹால் டிக்கெட் (HALL TICKET) கொடுக்க அலைக்கழிப்பார்களே என்ற கவலைதான் அதிகமாக இருந்தது.)

படுக்கையில் இருந்து எழுந்த உடல் வேகமாக சென்று குளியலறை கதவைத் தட்டியது. நான்கைந்து தடவை தட்டியது. சற்று நேரத்தில் குளித்து முடித்து வெளியே வந்த நண்பனின் முகத்தில் பலமுறை கதவைத் தட்டியதன் கடுப்பு தெரிந்தது. அவசர அவசரமாக எல்லா வேலைகளையும் முடித்துக் கொண்டு கல்லூரிக்குச் செல்லும் வழியில் இருந்த டீக்கடையில் காலை உணவான டீயையும், வடையையும் கொறித்துக் கொண்டிருக்கும் போதே கண்கள் தினசரி நாளிதழில் விளையாட்டுச் செய்திகள் பிரிவில் கிரிக்கெட் பற்றிய செய்தியை தேடிப் படித்துக் கொண்டிருக்கும் போது கல்லூரியில் மணி ஒலிக்கும் ஓசை காதில் விழுந்தது.

கல்லூரியை நோக்கி மெதுவாக நடந்த பாதங்கள் வகுப்பறையை அடைய சில அடி தூரங்களே இருக்கும் போது வேகமாக நடந்தது. தான் லேட்டாக வந்ததை ஏற்றுக் கொள்ளாத மனம், ‘ஐயோ.. சார் சீக்கிரம் வந்துவிட்டாரே…? என்ற எண்ணத்தை உள்ளத்தில் சுமந்து கொண்டு வாசலருகே அப்பாவியாய் நின்றது. தினசரி வாடிக்கையான லேட்டாக வரும் செயலால் ஏற்பட்ட கோபம் ஆசிரியரின் முகத்தில் தெரிந்தாலும் ஆசிரியர்களுக்கே உரித்தான மாணவர்கள் மீதான அக்கறை, நலன் போன்ற குணத்தால் வகுப்பறைக்கு உள்ளே வந்தமர்ந்து பாடத்தைக் கவனிக்குமாறு தலையசைத்து அனுமதியளித்தார். வருகைப் பதிவேட்டிலும் ப்ரெசண்ட் (PRESENT) விழுந்தது. அன்று கல்லூரி வந்ததன் நோக்கம் நிறைவேறியதன் மகிழ்ச்சி மனதில் நிரம்பியது. இருக்கையில் அமர்ந்து உடல் அங்கே ஆஜராகியிருந்தாலும் மனம் எங்கெங்கோ சுற்றித் திரிந்தது.
பல கனவுகளையும், லட்சியங்களையும் மனதி;ல் சுமந்து கொண்டு படிப்பில் அதிக கவனம் செலுத்தி வந்த வகுப்பு நண்பர்களை கண்டபோதெல்லாம் படிப்பின் மீது அக்கறை வந்த பாடில்லை. மனதில் எந்த உறுத்தலும் இல்லை. மாணவர்களின் எதிர்காலத்தைப் பற்றி மாணவர்களுக்கு இருக்கும் கவலையை விட ஆசிரியர்களுக்கு அதிகமாக இருப்பதால் அவர்கள் அடிக்கடி கொடுக்கும் அக்கறை கலந்த பேச்சில் இருந்த கருத்துக்கள் ஒருநாளும் செவியை அடைந்ததாக ஞாபகமில்லை. படித்து முடித்து வேலையில் இருக்கும் சீனியர்கள் அடிக்கடி கல்லூரிக்கு வந்து ஜீனியர்களின் நலனுக்காக உரை நிகழ்த்தும் போது கடைசியில் ஒரு பேச்சிற்காக நாங்களும் உங்களைப் போல்தான் படிக்கும் காலத்தில் வேலைக்காக எந்த முயற்சியும் செய்யாமல் விளையாட்டுத்தனமாக இருந்து விட்டோம் என்று முடிக்கும் வரிகள் மட்டும் காதில் பலமாய் விழும். ஆங்கில மொழியின் மொத்த எழுத்துக்களின் எண்ணிக்கையை விடவும் அதிகமான எண்ணிக்கையில் எழுத்துக்களை வாங்கிய பட்டங்களாக தனது பெயருக்குப் பின்னால் போட்டிருக்கும் கல்லூரி முதல்வரைக் காணும் போதெல்லாம் வியப்பாக இருக்குமே தவிர நாமும் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற உணர்வு உள்ளுக்குள் ஊறியதில்லை.

தந்தையின் இரத்தம் வியர்வையாக மாறி பணமாக உருவெடுத்து சிகெரட் புகையாக கரைந்த போதெல்லாம் மனதில் எந்த குற்ற உணர்வும் பிறக்கவில்லை. நன்றாக படி, நீ படித்து பெரிய ஆளாக வர வேண்டும் என்ற உறவினர்களின் அன்பு கலந்த பேச்சினால் தனக்கு உள்ள பொறுப்பை உணரவில்லை.

இந்த செமஸ்டர்(SEMESTER) ஃபீஸ்(FEES)க்காக தங்கையின் கழுத்தில் தொங்கிய தங்கச் சங்கிலி அடகுக் கடைக்கு இடம் மாறியதை நண்பனிடம் சொன்னபோது, நண்பனின்ஃபீஸ்க்காக நண்பன் அக்காவின் காதில் இருந்த கம்மலும் அடகுக் கடைக்கு இடம் மாறியதாக சொன்ன பதிலில் இருந்து, ‘வீட்டிற்கு வீடு வாசற்படி’ என்று தோன்றியதே தவிர அப்படி இடம் மாறுவதன் உள் அர்த்தம் சிந்தையை எட்டவில்லை. ஆயினும் கதை அடிக்கும் திறமையினாலும், தேர்வறையில் பரீட்சைப் பேப்பரைக் காட்டி நட்பை நிரூபிக்கும் நண்பர்களாலும், துண்டுக் காகிதங்களின் உதவியாலும், தட்டுத் தடுமாறி பார்டரை நெருங்கும் போது போனால் போகுதென்று பாஸ் பண்ணிவிடும் ஆசிரியர்களின் கருணையாலும் டிகிரி கைக்கு வந்துவிடும், பட்டம் பெற்று விடலாம் என்ற நம்பிக்கை மட்டும் பலமாக இருநத்தது.
விடுமுறைக்காக ஊருக்குச் சென்று விடுமுறை முடிந்தும் வழக்கம் போல் கல்லூரிக்கு லீவு போட்டுவிட்டு மேலும் ஒருநாள் ஊரில் இருக்க நினைத்து போது பெற்றோரிடமிருந்து வந்த ‘ஒரு நாள் கல்லூரிக்கு லீவு போட்டால் அன்றைய பாடம் போய்விடுமே…?’ என்ற ஏதும் அறியா அப்பாவித்தனமான பேச்சினால் கோபத்தில் ஊரில் இருந்து கிளம்பி பேருந்தில் ஏறி ஜன்னலோர இருக்கையைப் பிடித்து வாடைக்காற்றை அனுபவித்துக் கொண்டிருந்த போது அருகில் இருந்த சிறுவன் ஒருவனின் குழந்தைத் தனமான முகத்தைப் பார்த்த போது ஏதோ ஒரு சகோதர உணர்வு. பேச்சுக் கொடுக்கத் தோன்றியது. பட்டணம் போவதன் நோக்கமென்ன என்று வினவிய போது, குடும்ப வறுமைச் சூழல் காரணமாக படிக்க வசதியின்றி, பட்டணத்திற்கு வேலைக்குச் செல்வதாக கூறியதைக் கேட்டபோது மனதில் என்றும் இல்லாத ஒரு குற்ற உணர்வு, பாரம், தலைகுனிவு… கண்களில் கண்ணீர்… அச்சமயம் மனதை பல கேள்விக் கணைகள் குத்தின…
‘ உனக்கு படிக்கக் கிடைத்த பாக்கியத்தை நீ எவ்வாறு பயன்படுத்துகிறாய்…?’
‘ உன் பொறுப்புணர்ந்து உன்னுடைய கடமையை நீ ஒழுங்காகச் செய்கிறாயா…?’
‘ பெறப்போகும் பட்டத்திற்கு நீ தகுதியானவன்தானா…?’
‘ உண்மையிலேயே அப்பட்டத்தில் இருக்க வேண்டியது உனது பெயர்தானா…?

(கல்லூரிக் காலத்தில் மாணவர்களின் கல்லூரி வாழ்க்கையை கருவாக வைத்து எழுதியது. புதிய தலைமுறை வார இதழில்  வெளிவந்தது)

– துபாயிலிருந்து ராபியா குமாரன்,
புளியங்குடி.

News

Read Previous

தமிழ்

Read Next

தமிழ்க்குடில் அறக்கட்டளை போட்டிகள்

Leave a Reply

Your email address will not be published.