அன்பை விதைப்போம்
” அன்பை விதைப்போம்.”.
………………………………………………..
மனிதனுக்கு மனிதன் அன்பு காட்டுவது குறைந்து, மனிதனை மனிதனே அழித்து வாழும் சமுதாயமாக நம் மனித இனம் மாறிக் கொண்டு இருக்கிறது.இன்று எங்கும் சுயநலம் தலைதூக்கி நிற்கிறது.
பணம், புகழ், போதை, சாதி, மதம் மீது மோகம் கொண்ட சமுதாயமாக மாறிக் கொண்டு போகிறது
நம் சமதாயம்.
நிலையில்லாதவற்றின் மீது கொண்ட மோகம், ஏன் நிலையான அன்பின் மீது வைக்க நம்மால் முடிய வில்லை.?
கொலை, கொள்ளை, கற்பழிப்பு, தீவிரவாதம், தேவையற்ற போர், வெடிகுண்டு கலாச்சாரம், மதச் சண்டை, சாதி சண்டை இவைகள் எல்லாம் இன்று பெருகி வருகிறது..
அண்ணல் காந்தி பிறந்த மண்ணில் அகிம்சை இன்று இல்லை. அன்னை தெரசா பிறந்த மண்ணில் இன்று இரக்கம் அழிந்து வருகிறது. புத்தன் பிறந்த மண்ணில் இன்று அன்பு குறைந்து வருகிறது.
அடிபட்டு கிடக்கும் ஒருவனை வேடிக்கை பார்க்கிறோமே தவிர அவனைக் காப்பாற்ற யாரும் முயற்சி எடுப்பது இல்லை.
நம்மிடம் தோன்றும் பாசமும், அன்பும், இரக்க குணமும் இன்று தேய்ந்து கரைந்து கொண்டு இருக்கிறது என்பதுதான் நிதர்சனமான உண்மை.
சுனாமி வந்த போது நம்மிடம் இரக்கம் வந்தது. குஜராத் நில நடுக்கத்தில் நம்மிடம் நேசம் வந்தது. பள்ளிக் குழந்தைகள் எரிந்து கருகிய போது நம்மிடம் பாசம் வந்தது.
டெல்லியில் இளம் பெண்ணை பேருந்தில் சிலர் சீரழித்த போது நமக்கு கோபம் வந்தது.
அதற்காக ஒவ்வொரு நாளும் பல உயிர்கள் கண் முன்னால் இறந்தால்தான் நம்மிடம் நேசம் தோன்ற வேண்டுமா?
நாட்டின் முன்னேற்றத்திற்கு உதவுவதை விடுத்து மண்ணுக்காகவும், பொருளுக்காகவும் சண்டை இடுகிறோம். அரசியல் நடத்த மதத்தைக் காரணம் கூறியும், சாதியை காரணம் கூறியும் சண்டை இட்டுக் கொள்கிறோம்.
பணத்திற்காகவா, மதத்திற்காகவா, இனத்திற்காகவா எதற்காக வாழ்கிறோம் என்றே தெரியாத வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.
இதையெல்லாம் விட அன்பிற்காக வாழ மறந்து விட்டோம்.
கவிதையை நேசிப்பது, இசையை நேசிப்பது, தேசம் காக்க நேசிப்பது, விளையாட்டை நேசிப்பது, எதிர் பார்ப்பில்லாமல் ஏழைக்கு உதவுவது போன்ற சில செயல்கள் எங்கோ ஒரு மூலையில் மட்டும் நடப்பது மட்டும் நமக்கு மகிழ்ச்சி அல்ல.
மனிதனை மனிதன் நேசிக்கும் தன்மை குறைந்து துன்புறுத்தும் நிலை அதிகமாகி விட்டது.
குழந்தைகளிடம் கூட அன்பிற்கான அர்த்தம் மறைந்து போகும் நிலையை நாம் உருவாக்கி விட்டோம்.
அது நீடித்தால் அன்பு என்ற வார்த்தை மறந்து போய் எதிர் காலத்தில் அதனை ஏட்டில் படிக்கும் நிலைமை உருவாகக்கூடும்.
ஆம்.,நண்பர்களே..,
எல்லாரிடமும் அன்பு காட்டும் போது வாழ்வு அழகானதாக உருமாறும்.
அன்பு தான் இவ்வுலகத்தினை இயக்கிக்கொண்டு இருக்கின்றது என்பதனை உணர்ந்தவர்களாய் நாமும் வாழ முற்படுவோம்.
அன்புதான் அனைத்து ஜீவராசிகளுக்கும் மகிழ்ச்சியை தரக்கூடியது.
மனிதநேயம் காப்போம்,அன்பை விதைப்போம்
வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்வோம்.(ஆக்கம்.உடுமலை சு.தண்டபாணி….