ராமநாதபுரம் தமிழ்ச்சங்க நிறுவனர் எஸ்.எம்.கமாலின் நூல்கள் அரசுடைமையாக்கப்படுமா?

Vinkmag ad

பார்வை இழந்த பிறகும் 6 வரலாற்று நூல்கள் எழுதியது உள்பட மொத்தம் 17 நூல்கள் எழுதியும்,12 விருதுகளும் பெற்ற ராமநாதபுரம் தமிழ்ச் சங்க நிறுவனர் எஸ்.எம்.கமாலின் நூல்கள் அரசுடைமையாக்கப்பட வேண்டும் என தமிழ் ஆர்வலர்கள் பலரும் விரும்புகின்றனர்.

ராமநாதபுரம் ஈசா பள்ளிவாசல் தெருவில் வசித்தவர் எஸ்.எம்.கமால்.  இவர் தன் வாழ்நாள் முழுவதையும் பல வரலாற்று நூல்கள் எழுதுவதற்காக தியாகம் செய்தவர். இவர் கடந்த 31.5.2007 அன்று காலமானார். பல இலக்கிய வரலாற்றுக் கருத்தரங்குகளையும் நடத்திய இவர், ராமநாதபுரம் தமிழ்ச் சங்கத்தின் நிறுவனர். மதுரையில் 4 ஆம் தமிழ்ச்சங்கம் உட்பட 12 இலக்கிய அமைப்புகளில் பல்வேறு பொறுப்புகளையும் வகித்தவர். பல வரலாற்று காப்பகங்களில் பல்வேறு நூல்களை வாசித்து, வாசித்து கிளைக்கோமா என்ற கண் நோயால் பாதிக்கப்பட்டு, கண் பார்வையை முற்றிலுமாகவே இழந்தவர்.

இவரது கடைசி 5 ஆண்டுகளில் இரு கண்களிலும் பார்வை இழந்த பிறகும் 6 வரலாற்று நூல்களை பிறரின் உதவியுடன் எழுதியவர். இவர் சொல்லச் சொல்ல ஒருவர் அதை எழுத, பின்னர் மற்றொருவர் சரிபார்த்தபிறகு அதை புத்தகமாகவும் ஆக்கியவர். அமெரிக்காவின் தக்சன் பல்கலைக்கழகம் இவருக்கு வரலாற்றுத் துறையில் டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்திருக்கிறது. வருவாய்த்துறையில் வட்டாட்சியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். வருவாய்த் துறையில் பணியில் இருந்த போதே வரலாற்றுத் துறையில் ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது. தமிழக அரசு உள்பட பல்வேறு அமைப்புகள் இவருக்கு வழங்கிய விருதுகள் ஏராளம். கடந்த 15.1.1991ல் முதல்வராக இருந்த கருணாநிதி, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இருந்த திருவள்ளுவர் கலைவிழாவில் இவரைப் பாராட்டி விருதும், ரொக்கப் பரிசும் வழங்கி கௌரவித்தார்.

எழுதிய நூல்கள்: ராமநாதபுரம் மாவட்ட வரலாற்றுக் குறிப்புகள் (1984)முஸ்லிம்களும் தமிழகமும் (1990), மன்னர் பாஸ்கர சேதுபதி (1992), சீர்மிகு சிவகங்கைச் சீமை (1997), சேதுபதி மன்னரும் ராஜநர்த்தகியும் (1998), திறமையின் திருஉருவம் ராஜா தினகர் (1999), செந்தமிழ் வள்ளல் சீதக்காதி (2000) மறவர் சீமை மாவீரன் நெப்போலியன் (2001), சேதுபதி மன்னர் கல்வெட்டுகள் (2002),

சேதுபதி மன்னர்களின் வரலாறு (2003), ராமர் செய்த கோவில் ராமேசுவரம் (2004), நபிகள் நாயகம் வழியில் (2005).

இவை தவிர, விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்-ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி(1989), மாவீரர் மருதுபாண்டியர்கள் (1989), சேதுபதி மன்னர் செப்பேடுகள் (1994), சேதுபதியின் காதலி (1996) ஆகியன தமிழக அரசின் பரிசும், பாராட்டும் பெற்ற நூல்களாகும். கிழவன் சேதுபதியின் வரலாறு, சேது நாட்டில் உள்ள ஊர்களும், பெயர்களும், பெரியபட்டணத்தின் வரலாறு, இஸ்லாமியர்களின் கலாசார பண்பாடுகள், திருக்குரானின் தெளிவுரை, வள்ளல் பாண்டித்துரைத் தேவர், வள்ளல் பி.எஸ். அப்துல்ரகுமானின் கதை ஆகிய நூல்கள் எழுதி முடித்து பதிப்பிக்க முடியாத நிலையில் உள்ளன.

விருதுகள்:

தமிழ்ப்பணிச் செம்மல் விருது, இமாம் சதக்கத்துல்லா விருது, சேது நாட்டு வரலாற்று செம்மல் விருது, பாஸ்கர சேதுபதி விருது,ராஜா தினகர் விருது, சேவா ரத்னா விருது, தமிழ் மாமணி விருது, சேவா ரத்னா விருது, தேசிய ஒருமைப்பாட்டு நல்லிணக்க விருது, வள்ளல் சீதக்காதி விருது, பசும்பொன் தேவர் விருது, இத்திரிஸ் மரைக்காயரின் சீறாப்புறான விருது, தமிழ்ச்செம்மல் விருது ஆகியன இவர் பெற்ற விருதுகளாகும். இவரது சீடரும்,ராமநாதபுரம் தமிழ்ச்சங்கத்தின் தலைவருமான மை.அப்துல் சலாம் இவரைப் பற்றி கேட்ட போது அவர் கூறியது: இவர் எழுதிய அனைத்து நூல்களும் விற்றுத் தீர்ந்து விட்டன. அனைத்து நூல்களும் மறுபதிப்பு செய்யப்பட வேண்டும். அனைத்து நூல்களும் முக்கியமாக அரசுடமையாக்கப்பட வேண்டிய அற்புதம் நிறைந்த வரலாற்றுப் பொக்கிஷங்கள்.

வருடம் தோறும் மே மாதம் ராமநாதபுரம் தமிழ்ச் சங்கத்தில் இவரது நினைவு தினத்தை சிறப்பாக கொண்டாடி வருகிறோம். 18 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ராமநாதபுரம் ஆயிரவைசிய மகாஜன சபை திருமண மண்டபத்தில் காலையில் எழுத்தாளர் எஸ்.எம்.கமாலின் ஏழாம் ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.

புதுச்சேரி பேராசிரியர் கிருங்கை. சேதுபதி, சிவகங்கை பேராசிரியர் மு.பழனியப்பன் ஆகியோர் கலந்து கொண்டு பேசுகின்றனர்.

 

News

Read Previous

துபையில் வீடு வாடகைக்கு

Read Next

துபை ஈடிஏ அஸ்கான் அருகே வீடு வாடகைக்கு

Leave a Reply

Your email address will not be published.