மஸ்னவி ஷரீப் ஒரு சிறு அறிமுகம்
மஸ்னவி ஷரீப் ஒரு சிறு அறிமுகம்
மௌலவி T.S.A. அபூதாஹிர் ஃபஹீமீ மஹ்ழரி
ஆசிரியர் – அல் அஸ்ரார் மெய்ஞான மாத இதழ்
+91-98415 67213
2007ம் ஆண்டு மௌலானா ரூமி அவர்களின் 800வது பிறந்த ஆண்டு அதை கொண்டாடும் வகையில் (COLTURAL AND TOURISM MINISTRY OF TURKEY ) துருக்கி நாட்டின் காலாச்சாரம் மற்றும் சுற்றுலா அமைச்சகத்தின் வேண்டுதலின் படி அந்த ஆண்டை (2007) YEAR OF RUMI ரூமி வருடம் என UNESCO பிரகடனம் செய்தது.
800 ஆண்டு காலத்திற்குப்பிறகும் உலகை தன்பால் உற்றுநோக்க வைத்தவர்கள் மௌலானா ஜலாலுத்தீன் ரூமி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள்.
ஹிஜ்ரி 6ஆம் நூற்றாண்டுகளில் பிறந்த ஞானிகளில் ஆத்ம ஞானி அல்லாமா ஜலாலுத்தீன் ரூமி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களுக்கு தனிச்சிறப்பு இருந்து வந்தது, அது போலவே, ஆன்மிக ஞான நூற்களில் அவர்களின் ‘மஸ்னவிஷரீப்’ பெரும் புகழ் பெற்றுத் திகழ்ந்தது.
கதை கேட்டே பழகிப் போனவன் மனிதன், எதையும், கதை வடிவிலும் உதாரணத்துடனும், உவமானங்களுடனும் கூறினால் தான் அவனின் மதியில் சட்டென பதியும், எனவே தான் மௌலானா அவர்களும் கதை வடிவில் பல உயரிய உபதேசங்களை உரைக்கிறார்கள்.
ஆனால் ஒரு வித்தியாசம் மனிதன் கதையில் காது பதித்து மெய்மறந்து உறங்கத் துவங்குவான், ஆனால் மௌலானா அவர்கள் கூறும் கதைகளோ
- தூக்கத்தை துரத்தும் கதைகள்.
- தூங்கிக் கொண்டிருப்பவனின் தூக்கத்தைக் களைத்து உற்சாகமாய் உட்காரச்செய்திடும் உணர்ச்சிக் கதைகள்.
- உதிரத்தை உறையச் செய்திடும் கதைகள்.
- அறியாமைகளை அகற்றிடும் அறிவொளி தீபக்கதைகள்.
- அன்றாடம் நம் வாழ்வில் நடக்கும் சின்னச்சின்ன செய்திகளில் இருந்தும் நமக்கு படிப்பினைகளைப் போதிக்கும் பயன்மிகு கதைகள்.
- ஆனாலும் அது கதை நூல் அல்ல. காவிய நூல்.
உருது பார்சி அறிந்த அறிஞர்களிடம் ஓரளவு அறிமுகம் பெற்றுள்ளது என்றாலும் பெரும் பாலும் தமிழ் மக்களிடம் இந்நூல் அதிகம் அறிமுகம் இல்லை என்பது கைசேதமேயாகும்.
ஆனால் அறிந்தே ஆக வேண்டிய ஆன்மிக நூல் இது.
மஸ்னவியைத் தான் நாம் அறிந்து வைத்திருக்கவில்லையே தவிர அதன் சாரம்சங்களை அறியாதவர்கள் யாரும் இல்லை எனலாம் எப்படி என்று கேட்கிறீர்களா?
ஒன்றாம் வகுப்பு முதல் பள்ளிப்பாட நூலில் நாம் படித்து வரும் முயல், ஆமை கதைகள், சிங்கம், நரி கதைகள் மஸ்னவியில் இருந்து எடுக்கப்பட்டவையே.
இன்று பல லட்சங்கள் தாண்டி வேகமாக விற்கப்பட்டு வருகிற சுய முன்னேற்ற நூல்கள், மஸ்னவியின் சாரங்கள் என்பதை மஸ்னவியை படிப்போர் விளங்கிக் கொள்ள முடியும்.
இன்றைய பட்டிமன்றங்கள், கருத்தரங்கங்கள் ஏன் சினிமாவிலும் கூட மஸ்னவியின் தத்துவ வரிகள் நடமாடுகின்றன. ஆனால் எழுதுபவர்களோ அல்லது பேசுபவர்களோ கூட மஸ்னவியின் பெயரையோ மௌலானா ரூமி அவர்களின் பெயரையோ கூறாமல் எடுத்தாள்கின்றனர், ஒரு வேளை அவர்களுக்குமே கூட இது மஸ்னவியின் வார்த்தைகள் என்று தெரியாமலிருக்கவும் வாய்ப்புண்டு. ஆனால் மஸ்னவியின் தாக்கம் எடுகளிலும் மேடையிலும் நிறையவே உண்டு.
அரபு மொழிக்கடுத்து அதிக ஞான நூல்களைக் கொண்ட பாரசீக மொழியில் அமைந்த இந்த நூலை ஆங்கிலத்தில் பலரும் மொழிபெயர்ப்பு செய்துள்ளனர்.
அவர்களில் அறிஞர் நிகல்சனின் மொழிபெயர்ப்பும் The Essential of Rumi என்று அவர் எழுதிய நூலும் அமெரிக்க, ஆப்ரிக்க உலகங்களில் அதிமுக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
அமெரிக்கா, ஆப்ரிக்கா கண்டங்களில் பெரும் மாற்றங்களையும் திருப்பங்களையும் ஏற்படுத்தியது கண்டு இலக்கிய ஆர்வலர்கள்,ஆன்மிக ஆர்வலர்கள் இன்றும் வியந்து திகைத்து நிற்கின்றனர். கடந்த ஆண்டுகளில் அமெரிக்காவில் அதிகம் விற்றுத்தீர்ந்த நூல் மௌலானா ரூமி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் மஸ்னவி ஷரீப் என்பது உலகம் ஒப்புக் கொள்ளும் உண்மை. அதிகம் என்றால் ஆயிரங்களில் அல்ல பல லட்சங்களில், அப்படி அதில் என்ன இருக்கிறது.
ஆம்! மனிதனை மனிதனாக வாழச்செய்யும் மனவளக்கலை, ஆன்மிகம், தத்துவம், பொதிந்த இலக்கிய நூல், ஆனால் அவற்றை கதை வடிவில் கூறும் போங்கு மௌலானாவின் மகத்தான ஆற்றலின் அடையாம்.
மனிதன் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டிய நப்ஸ் என்னும் கீழான எண்ண உணர்வுகளுக்கு அவனே பலியாகி அதன் கட்டுப்பாட்டில் அவன் சிறைபட்டு விட்ட அவலத்தையும் அதிலிருந்து விடுதலை பெறும் வழிகளையும் மௌலானா அவர்கள் படு நேர்த்தியாக குறிப்பிடுவார்கள்.
அல்லாஹ்வையும், அவனது ரஸூலையும் அகமியக்கண் கொண்டு காணும் கண்ணாடியை நம் கைகளில் தந்து காணச் செய்யும் அரிய முயற்சியும் மஸ்னவியின் பலம் ஆகும்.
இத்தனை சிறப்பு மிகும் இந்நூல் இதுவரை தமிழில் இல்லாதது பெரும் குறையே ஆகும். அந்த குறையை நிவர்த்தி செய்யும் வகையில் தான் சென்னை கூடுவாஞ்சேரியில் அமைந்துள்ள கான்காஹே ஃ பஹீமிய்யா ட்ரஸ்ட் சார்பில், ஜனாப் நரியம்பட்டு ஸலாம் அவர்களைக் கொண்டு மொழிபெயர்க்கப்பட்டு இறைவனருளால் அந்த அற்புத கிரந்தம் இன்று நம் கைகளில் கிடைத்துள்ளது. நாம் பெற்ற பெரும் பாக்கியமேயாகும். இன்னும் இதில் ஃபார்ஸியில் மூலமும், உருதுவிலும் தமிழிலும் பொருள், தேவையான இடங்களில் தமிழில் தெளிவுரை என இடம்பெற்றிருப்பது இதன் தனிச்சிறப்பாகும்.
ஆன்மிக ஞானங்களும் இலக்கிய ஞானங்களும் குறைந்து வரும் இக்காலத்தில் ஒரு மாபெரும் ஞான இலக்கிய நூல் ஆன்மிக, இலக்கியத் தோட்டத்தில் புதிதாக பூத்திருக்கின்றது என்றால் ஆன்மிகத் தேட்டம் உடையவர்களுக்கு அது மனம் நெகிழும் மணம் தரும் மஸ்னவி மலரே ஆகும்.
உதாரணத்திற்காக சில வரிகள்.
“சுமைகளை இழுப்பது எண்ணவோ மாடுகள்
சக்கரங்கள் சப்தமிடுகின்றன.”
“தாகம் உடையவன் தண்ணீரைத் தேடுகிறான்
தண்ணீரும் தாகம் உடையவனைத் தேடுகிறது.”
“தண்ணீரைத் தேடாதே தாகத்தைத் தேடு
தாகம் இருக்கும் இடத்திற்கு தண்ணீர் தானாக வரும்”
“இனிப்பை ஈக்களின் முன்னிலா வைப்பது” (8749)
புகைக்குப்பயந்து நெருப்பில் வீழ்ந்தவன் போலாவான். (9037)
“அத்திப்பழம் சிறந்த உணவுதான் – ஆனால்
அதை அற்ப பறவைகளுக்கு கொடுக்க முடியாது.”
தராசுக்கு பேராசை வரலாமா.
சூரியன் உதித்தப் பின் சேவலின் தேவை என்ன (18328)