திருக்குர்ஆனுடன் ஒரு நேர்காணல்

Vinkmag ad

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய

அல்லாஹ்வின் திருப்பெயரால் …

திருக்குர்ஆனுடன் ஒரு நேர்காணல்

 

கேள்வி : தங்கள் பெயர் என்ன?

பதில்   : மனித குலத்திற்கு வழிகாட்டவந்த குர்ஆன் (85:21)

கேள்வி : அரபு மொழியில் நீங்கள் அனுப்பப்பட்டதற்கு என்ன காரணம்?

பதில்   : நீங்கள் நன்றாகப் படித்து புரிந்து கொள்ள வேண்டும்

என்பதற்காகவே எளிய மொழியான அரபியில் நான்

அருளப்பட்டேன். (12:2)

கேள்வி : நீங்கள் வந்ததன் நோக்கம்?

பதில்   : இவ்வுலக மக்களுக்கு நல்லுபதேசம் செய்வதற்காக (68:52)

கேள்வி : தாங்கள் தாம் வேதநூல் என்று சிலர் நம்ப மறுக்கிறார்களே?

பதில்   : நிச்சயமாக நான் வேத நூல் தான். இதில் சந்தேகமே

வேண்டாம். பயபக்தியுள்ளவர்களுக்கு நான் நேரான வழியைக்

காட்டுவேன். (2:2)

கேள்வி : இதற்கு மேலும் யாராவது சந்தேகப்பட்டால்..?

பதில்   : உங்களுக்கு இதில் சந்தேகம் ஏற்பட்டால், இம்மாதிரி ஓர்

அத்தியாயத்தையேனும் அமைத்துக்கொண்டு வாருங்கள்.

நிச்சயமாக அது உங்களால் முடியவே முடியாது. (2:23,24)

கேள்வி : தாங்கள் ஒரு நாட்டிற்கோ, ஒரு சமுதாயத்திற்கோ தான்

சொந்தமா?

பதில்   : அகிலங்கள் அனைத்திற்கும் அருட்கொடையாகவே நான்

வந்துள்ளேன்.

கேள்வி : நீங்கள் போதிக்கும் வாழ்க்கை நெறியின் பெயர் என்ன?

பதில்   : நிச்சயமாக அல்லாஹ்விடம் அங்கீகரிக்கப்பட்ட நெறி

இஸ்லாம் தான் (3:19)

கேள்வி : இஸ்லாத்தை கட்டாயம் ஏற்றுக் கொண்டுதான் ஆக

வேண்டுமா?

பதில்   : இஸ்லாத்தில் எந்த கட்டாயமும் இல்லை. வழிகேட்டிலிருந்து

நேர்வழி தெளிவாகிவிட்டது; யார் அல்லாஹ்வை

விசுவாசிக்கின்றாரோ, அவர் நிச்சயமாக அறுபடாத

பலமானதொரு கயிற்றை பிடித்துக் கொண்டவர் போலாவார்.

(2:256)

கேள்வி : தற்போது இவ்வுலகினை வாட்டும் பிரச்சனைகள் பற்றி

தங்களிடம் கேள்விகள் கேட்க விரும்புகிறேன். இந்த

இருபதாம் நூற்றாண்டிலும் கூட சிலர் உயர்ந்தவர்,

தாழ்ந்தவர் என்றும், கடவுளுக்கு பக்கத்தில் இருப்பவர்கள்

என்றும் சொல்லிக் கொண்டிருக்கிறார்களே – அவர்களுக்கு

தாங்கள் கூறும் பதில் என்ன?

பதில்   : மக்களே ! நாம் உங்களை ஓர் ஆண் பெண்ணிலிருந்து

படைத்தோம்; ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும்

பொருட்டு உங்களைப் பல சமுதாயங்களாகவும், பல

கோத்திரங்களாகவும் ஆக்கினோம். உங்களில் எவர் பயபக்தி

உடையவராக இருக்கின்றாரோ, அவர்தான் அல்லாஹ்

விடத்தில் மிக்க கண்ணியம் உள்ளவராவார். நிச்சயமாக

அல்லாஹ் எல்லாவற்றையும் நன்கு அறிந்தவனும். தெளிந்த

ஞானமுடையவனும் ஆவான். (49:13)

கேள்வி : இன்றைய அரசியல் தலைவர்கள் எப்படிச் செயல்பட

வேண்டுமென எதிர்பார்க்கிறீர்கள்?

பதில்   : நாம் அவர்களுக்கு பூமியில் ஆதிக்கம் கொடுத்தால்,

அவர்கள் தொழுகையை நிலைநாட்டுவார்கள். ஜகாத்தும்

கொடுப்பார்கள். நன்மையான காரியங்களை ஏவி, தீமையான

காரியங்களை தடை செய்வார்கள். (22:4)

கேள்வி : தற்கொலைகளை தடுத்து நிறுத்த தாங்கள் கூறும்

ஆலோசனை?

பதில்   : அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் அவனுடைய

நினைவினால் அவர்கள் மனம் அமைதி அடையும். (13:28)

கேள்வி : இன்று சமுதாயத்தை சீரழிக்கும் மது, வட்டி, சூதாட்டம்,

விபச்சாரம் ஆகியவை பற்றி…?

பதில்   : மக்கள் மது மற்றும் சூதாட்டம் பற்றி கேட்கிறார்கள். நீங்கள்

சொல்லுங்கள்.. இவ்விரண்டிலும் பெரும் பாவமிருக்கின்றன.

(2:129)

விசுவாசிகளே ! நிங்கள் உண்மையாகவே இறைநம்பிக்கை

கொண்டவராய் இருந்தால் அல்லாஹ்வுக்கு அஞ்சி, வட்டியை

விட்டுவிடுங்கள். அப்படி விடவில்லையானால்

அல்லாஹ்வுடனும், அவனுடைய தூதருடனும் போர் புரிய

தயாராகிவிடுங்கள்.(2:278,279)

விபச்சாரத்தில் ஈடுபடும் ஆண், பெண் ஒவ்வொருவருக்கும்

நூறுகசையடி கொடுங்கள். நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி

நாளையும், விசுவாசிப்பவர்களாய் இருந்தால் இந்த

தண்டனையை நிறைவேற்றத் தயங்காதீர்கள். அவர்களின்

மேல் இரக்கமும் கொள்ள வேண்டாம். (24:2)

கேள்வி : வியாபாரிகளுக்கு சில அறிவுரைகளைச் சொல்லுங்கள்?

பதில்   : நீங்கள் அளந்தால் பூரணமாக அளந்து கொடுங்கள். சரியான

எடையைக் கொண்டு நிறுவுங்கள். இதுவே மிக்க நன்று.

உங்களுக்கு அழகான பலனையும் தரும்.

கேள்வி : பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை தடுத்து

நிறுத்த வழி?

பதில்   : பெண்களை பலவந்தமாக அடைவது உங்களுக்கு

ஆகுமானதல்ல; பெண்களிடம் கண்ணியமான முறையில்

நடந்து கொள்ளுங்கள். (4:19)

பெண்கள் உங்களுக்கு ஆடை போன்றவர்கள்; நீங்கள்

அவர்களுக்கு ஆடை ஆவீர்கள். (2:187)

விசுவாசமான பெண்களுக்கு சொல்லுங்கள்; அவர்கள் தங்கள்

பார்வையை கீழ்நோக்கியே வைத்து, தங்கள் கற்பையும்,

பாதுகாத்து கொள்ளவும். தங்கள் முந்தானைகளால்

மார்பையும் மறைத்துக் கொள்ளவும். (24:31)

கேள்வி : இவ்வுலகில் பிறந்ததே சுகங்களை அனுபவிப்பதற்கு தான்

என்று சிலர் கூறுகிறார்கள், அவர்களைப் பற்றி என்ன

நினைக்கிறீர்கள்?

பதில்   : எவரேனும் இவ்வுலக வாழ்க்கையையும், அதன்

அலங்காரத்தையும் மட்டுமே விரும்பினால் அவர்கள்

செயலுக்குரிய பலனை இங்கேயே நாம் முழுமையாக

அவர்களுக்குக் கொடுத்திடுவோம். அதில் அவர்கள் குறைவு

செய்யப்பட மாட்டார்கள். மறுமையிலோ இத்தகையோருக்கு

நரக நெருப்பைத் தவிர வேறொன்றுமில்லை. (11:15,16)

கேள்வி : இம்மையிலும் மறுமையிலும் வெற்றிபெற என்ன செய்ய

வேண்டும்?

பதில்   : முழுமையாக இஸ்லாத்தில் நுழைந்து விடுங்கள். (2:208)

அல்லாஹ்வுடைய பாதையில் உங்கள் பொருள்களையும்,

உயிர்களையும் அர்ப்பணித்து போராடுங்கள். நீங்கள்

அறிவுடையோர்களாய் இருந்தால் இதுவே உங்களுக்கு

நன்று. (9:41)

நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் (வேதமாகிய) கயிற்றை

பலமாக பிடித்துக் கொள்ளுங்கள். பிரிந்து போகாதீர்கள்.

(3:103)

கேள்வி : இறைவனுக்கு இணை வைப்பது பற்றி உங்கள் கருத்து

என்ன?

பதில்   : நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணை வைப்பதை

மன்னிக்கவே மாட்டான்; இது அல்லாத (பாவத்)தைத் தான்

நாடியவருக்கு மன்னிப்பான்; எவன் ஒருவன்

அல்லாஹ்வுக்கு இணை வைக்கின்றானோ, அவன்

நிச்சயமாக வழிகேட்டில் வெகுதூரம் சென்றுவிட்டான்.

(4:116)

கேள்வி : நம்பிக்கை கொண்டவர்களின் செயல்பாடுகள் எவ்வாறு

இருக்க வேண்டும்?

பதில்   : நம்பிக்கை கொண்டவர்களே ! அல்லாஹ்வுக்கு வழி

விடுங்கள்; இன்னும், (அல்லாஹ்வின்) தூதருக்கும்,

உங்களில் (நேரிய) அதிகாரம் உடையவர்களுக்கும்

கட்டுப்படுங்கள்; ஏதாவது ஒரு விஷயத்தில் நீங்கள்

பிணங்கிகொண்டால் (மெய்யாகவே) அல்லாஹ்வையும், இறுதி

நாளையும் நீங்கள் நம்புபவர்களாக இருப்பின் அதை

அல்லாஹ்விடமும் (அவன்) தூதரிடமும் திரும்பி விடுங்கள் –

இது தான் (உங்களுக்கு) மிகச்சிறந்ததாகவும் அழகான

முடிவாகவும் இருக்கும். (4:59)

கேள்வி : கணவர் மனைவி உறவை வலுப்படுத்த என்ன செய்ய

வேண்டும்?

பதில்   : (கணவன் – மனைவி ஆகிய) அவ்விருவரிடையே

(பிணக்குண்டாகி) பிரிவினை ஏற்பட்டுவிடும், என்று

அஞ்சினால், அவனது குடும்பத்தாரிலிருந்து ஒரு

நடுவரையும், அவளது குடும்பத்தாரிலிருந்து ஒரு

நடுவரையும் நீங்கள் அனுப்புங்கள்; அவ்விருவரும்

சமாதானத்தை விரும்பினால் அல்லாஹ் நிச்சயமாக

அல்லாஹ் நன்கறிபவனகாவும், நன்கு உணர்கிற

வனாகவும் இருக்கின்றான். (4:34)

கேள்வி : இன்றைய நவீன கால பிரச்சனைகளுக்கு எவ்வாறு தீர்வு

காண்பீர்கள்?

பதில்   : என்னுடைய வசனங்களுக்குப் பகரமாக சொற்பக் கிரயத்தை

வாங்காதீர்கள்; அல்லாஹ் இறக்கி வைத்த (வேதத்) தைக்

கொண்டு எவர் தீர்ப்பளிக்கவில்லையோ அத்தகையோர்

அவர்கள் தாம் நிராகரிப்பாளர்கள்.

வெளியீடு :

இஸ்லாமிய பிரச்சாரப்பணியில் என்றும் உங்களுடன் …

ஹிம்மத்துல் இஸ்லாம் வாலிபர் சங்கம்

முதுகுளத்தூர் – 623 – 704. இராம்நாட் (DT)

 

News

Read Previous

பார்வையற்ற முதல் தமிழ் திரைப்பட இசையமைப்பாளர்!

Read Next

மகனே ! கல்வி மாண்பறிவாய் !

Leave a Reply

Your email address will not be published.