உடுமலை வரலாறு
உடுமலை வரலாறு நூல் அறிமுக இணைய வழிக் கருத்தரங்கு
இது ஒரு ஊரின் வரலாறு அன்று, உலக நாகரீகத்தையும், உலக மக்களுக்கான அரிதிற்கிடைக்காத அணிகலன்களையும் அள்ளிக்கொடுத்த பகுதி கொங்கு நாடு, ஏராளமான கல்வெட்டுகளையும், தொன்மை சார்ந்த பகுதிகளையும் அந்த மண்ணில் பதித்தும், பதிந்தும் வைத்துக்கொண்டுள்ள பகுதி கொங்கு நாடு. அதனின் ஒரு பகுதியே தென் கொங்கு நாடு. இந்தத் தென் கொங்கு நாட்டின் மையப்பகுதியே உடுமலைப்பேட்டை.
இந்த உடுமலையின் வரலாறு என்பது பெருங்கற்காலம் முதல் தற்போதைய நாகரிகக் காலம் வரை தொகுத்துள்ளனர். பெருங்கற்காலத்தின் எச்சங்களாக மெட்ராத்தி, குரும்பபாளையம், கொங்கல் நகரம், கோட்டமங்கலம், கெடிமேடு போன்ற பகுதிகளில் இருக்கும் புதிர்நிலைக்கற்களையும், கற்திட்டைகளையும், கல்வட்டங்களையும் வரிசையாகப் பதிவு செய்து பெருங்கற்காலத்தின் ஆழங்கால் பதித்து உடுமலையின் சுற்றுவட்டாரச் சுவடுகளை அழகாகப் பதிவு செய்துள்ளனர்.
மேலும், சமணர் காலத்திற்குச்சான்றாக அயிரை மலை எனும் ஐவர்மலையும், அதற்கு அருகில் நரிப்பாறை எனும் பகுதியில் இருக்கும் சமணர் படுக்கைளையும், பதிவு செய்துள்ளனர். திருமூர்த்தி மலை என்பது சமணர் சின்னமாக இருந்தாலும் தற்போது இது பிரம்மா, விஷ்ணு, திருமால் என திரிமூர்த்தி என பிரித்து வழிபட்டு வருகின்றனர்.
தளிஞ்சி, அமராவதி, மறையூர், குதிரை ஆறு எனும் மேற்குத் தொடர்ச்சி மலையினுள் இருக்கும் நதிகளையும் ஆவணப்படுத்தி உள்ளனர்.
மேலும் சங்க இலக்கியத்தில் கடையெழு வள்ளல்களை அடுத்து எட்டாவது வள்ளலாக தமிழுக்குத் தலைகொடுக்கத் துணிந்த குமணவள்ளல் குறித்தும் இந்த நூலில் பதிவு செய்துள்ளனர்.
மேலும், கி பி. 1 ஆம் நூற்றாண்டு ஆறாம் நூற்றாண்டு வரையிலும், ஏட்டாம் நூற்றாண்டு முதல் சிற்றரசர்களின் ஆட்சியைப் பற்றியும், 11 ஆம் நூற்றாண்டு வீரசோழ, வீரகேரளர், வீரராசேந்திரன், குலோத்துங்கன், என 13 ஆம் நூற்றாண்டு வரை சிற்றரசர்களின் ஆட்சியையும் பதிவு செய்துள்ளனர்.
13 ஆம் நூற்றாண்டு முதல் 15 ஆம் நூற்றாண்டு பாளையக்காரர்களின் ஆட்சியையும், அதற்குப் பிறகு ஆங்கிலேயர் ஆட்சியினையும், உடுமலை வரலாற்றின் பக்கங்களில் வரலாறாகப் பதிவு செய்துள்ளனர்.
இதில், வரலாறு எனில் பொதுவாக ஊர் வரலாறு , ஊர் மக்களின் வரலாறு எனப் பதிவு செய்திருப்பார்கள். ஆனால் இந்த உடுமலை வரலாற்றில் மட்டுமே விளையாட்டிற்கும் முக்கியத்துவம் கொடுத்து, விளையாட்டு வரலாறு என ஒவ்வொரு விளையாட்டிற்கும் தனித்தனிப் பக்கங்கள் ஒதுக்கி எழுதியுள்ளனர். இது பொதுவான ஊர் வரலாற்றில் இல்லாத செய்தியாக இதனைப் பதிவு செய்யலாம். மேலும் இதில்,
1. உடுமலை இலக்கிய வரலாறு
2. நமது மண்ணின் நகரமன்றத்தலைவர்கள் வரலாறு
3. நமது மண்ணில் நிகழ்ந்த இந்தியதேசிய விடுதலைப்போராட்ட வரலாற
4. நமதூரில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டம்
5. நமது மக்களின் மொழிப்போராட்டம்
6. கல்விக்கான வரலாறு
7. தென்னிந்தியாவின் மான்செஸ்டர் கோவை. கோவையின் மான்செஸ்டர் உடுமலை.
8. உடுமலை பஞ்சாலைகளின் வரலாறு
9. உடுமலை கல்வி வரலாறு
10. பாரம்பரியம் மிக்க உடுமலையின் நீதி மன்ற வரலாறு
11. ஏழுகுளப்பாசன வரலாறு
12. உடுமலையில் விளையாட்டுகளின் வரலாறு