அர்னாப் கோஸ்வாமிவின் மனுக்களை மட்டும் உச்சநீதிமன்றம் உடனடியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்வது எப்படி?
அர்னாப் கோஸ்வாமிவின் மனுக்களை மட்டும் உச்சநீதிமன்றம் உடனடியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்வது எப்படி?
‘ரிபப்ளிக்’ டிவி முதலாளியும், இந்துத்துவா ஆதரவாளருமான அர்னாப் கோஸ்வாமி தாக்கல் செய்யும் மனுக்களை மட்டும் உச்சநீதிமன்றம் உடனடியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்வது எப்படி? அவருக்கு மட்டும் ஏன் இந்தச் சலுகை? என்று உச்ச நீதிமன்ற பார் அசோசியேஷன் (Supreme Court Bar Association – SCBA) தலைவரும் மூத்த வழக்கறிஞருமான துஷ்யந்த் தவே கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக கடிதம் ஒன்றையும், உச்சநீதிமன்றத்தின் செயலாளர் ஜெனரலுக்கு (secretary general) துஷ்யந்த் தவே அனுப்பியுள்ளார்.
அந்தக் கடிதத்தில்அவர் கூறியிருப்பதாவது: கொரோனா தொற்றுக் காலத்தில், கடந்த 8 மாதங்களாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பல மனுக்கள், வாரக்கணக்கில், மாதக்கணக்கில் பட்டியலிடப்படாமல்- விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாமல் உள்ளன. இதனால்,சிறையில் அடைக்கப்பட்ட ஆயிரக்கணக்கானோர் ஜாமீன் கோரி காத்திருக்கின்றனர்.
ஆனால், ஒவ்வொரு முறையும் அர்னாப் கோஸ்வாமி தாக்கல் செய்யும் மனுக்கள் மட்டும் உடனடியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படு கின்றனவே, இது எவ்வாறு?பொதுவாக, இதுபோன்ற அசாதாரணமான அவசர மனுக்கள், விசாரணைக்கு பட்டியலிடப்படுவது, தலைமை நீதிபதியின் குறிப்பிட்ட உத்தரவுகள் இல்லாமல் நடக்காது என்பது அனைவரும் அறிந்ததே. அந்த வகையில், இந்திய தலைமை நீதிபதியிடம் இருந்தோ, நிர்வாகத் தலைவராகிய உங்களிடமிருந்தோ அல்லது பதிவாளரிடம் இருந்தோ அர்னாப் கோஸ்வாமி மனுக்களுக்கு மட்டும் ஏதும் முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளதா என்பதை அறிய விரும்புகிறேன்.
வழக்கு பட்டியலிடப்படுவது தொடர்பான விஷயங்கள் கணினிமயம் ஆக்கப்பட்டதாகக் கூறப்படும்போதும் இதுபோன்ற முன்னுரிமை விஷயங்கள் எவ்வாறு நடைபெறுகின்றன? சாமானிய குடிமகன்கள் பலர் சட்டவிரோதமாக சிறையில் இருக்கும் நிலையில், அர்னாப் கோஸ்வாமிக்கு மட்டும் ஏன் இந்த சிறப்புச் சலுகை? மத்திய முன்னாள் அமைச்சரும், மூத்த வழக்கறிஞருமான ப. சிதம்பரத்தின் ஜாமீன் மனு கூட அவசரமாக பட்டியல் இடப்படவில்லை. அது தாமதிக்கப்பட்டது.ஆனால், அர்னாப் கோஸ்வாமியின் மனு மட்டும், தாக்கலான ஒரே நாளில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டு இருப்பது வேதனை தருகிறது. எனக்கு அர்னாப் கோஸ்வாமியுடன் தனிப்பட்ட பிரச்சனை ஏதுமில்லை. உச்சநீதிமன்றம் மற்ற குடிமகன்களைப் போல் அர்னாப் கோஸ்வாமியையும் நடத்த வேண்டும் என்பதற்காகவே இக்கடிதத்தை எழுதுகிறேன்.
அர்னாப் கோஸ்வாமி-யின் ஜாமீன் மனு மீதான விசாரணையின்போது, எனது இந்த கடிதத்தைத் தாங்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்” இவ்வாறு துஷ்யந்த் தவே கூறியுள்ளார்.மும்பையைச் சேர்ந்த கட்டட உள்வடி வமைப்பாளர் அன்வாய் நாயக்கை (53) தற்கொலைக்குத் தூண்டியதாக, அர்னாப் கோஸ்வாமி, கடந்த நவம்பர் 4-ஆம் தேதி கைது செய்யப்பட்டு, நவிமும்பை தலேஜா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பதும், அவரது மனுவை செசன்ஸ் நீதிமன்றமும், மும்பை உயர் நீதிமன்றமும் ஏற்கெனவே நிராகரித்து விட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.
(தற்போது அர்னாப் கோஸ்வாமி ஜாமீன் பெற உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது என்பது கடைசிச் செய்தி)