வாரச்சந்தை நாளன்று முதுகுளத்தூரில் கள்ள நோட்டு புழக்கம் அதிகரிப்பு
முதுகுளத்தூர் :
முதுகுளத்தூரில் வாரந்தோறும் வியாழக்கிழமை வாரசந்தை கூடும். காய்கறிகள், பழங்கள், மளிகை பொருட்கள் உள்பட அனைத்து அத்தியாவசிய பொருட்களின், வியாபாரிகள் உற்பத்திக்கேற்ப விலையில் நிர்ணயம் செய்யப்படுகிது. இதனால் நகர், கிராமப்புற மக்கள், தேவையான அனைத்து பொருட்களையும், சந்தைகளில் மொத்தமாக வாங்குகின்றனர்.
கூட்ட நெரிசலை பயன்படுத்தி, கள்ள நோட்டுக்களை புழக்கத்தில் விடும் கும்பல், சமீபகாலமாக முதுகுளத்தூரில் அதிகரித்துள்ளது. பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகளிடம், சில ரூபாய்களில் மட்டும் பொருட்களை வாங்கி 500, 100, 50, 20, 10 ரூபாய் கள்ள நோட்டுக்களை கொடுத்துவிட்டு இக்கும்பல் மாயமாகிறது.
வியாபாரிகளிடமிருந்து சில்லறைகளை பெறும் பொதுமக்கள் சிலர் கள்ள நோட்டுக்களை கண்டறிந்து முறையீடு செய்தால், போலீசில் மாட்டிவிடுவோமோ என பயந்து கள்ள நோட்டுகளை திரும்ப பெற்று கொண்டு உண்மையான ரூபாய்களை வழங்குகின்றனர்.
முதுகுளத்தூர் வாரச்சந்தையில் உள்ள நோட்டுக்களை புழக்கத்தில் விடும் கும்பலை விரைந்து கண்டறிந்து பொதுமக்கள், வியாபாரிகள் இழப்பிலிருந்து காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசாரை பொதுமக்கள் கேட்டு கொண்டுள்ளனர்.