இடத்தகராறில் பெண் காயம்: 6 பேர் மீது வழக்கு
முதுகுளத்தூரில் இடத்தகராறு காரணமாக இரு குடும்பத்தினருக்கிடையே ஏற்பட்ட மோதலில் பெண் பலத்த காயமடைந்தார். இதுதொடர்பாக போலீஸார் ஞாயிற்றுக்கிழமை 6 பேர்மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
முதுகுளத்தூர் காமராஜர் நகரைச்சேர்ந்த திருநாகலிங்கம் மனைவி ஆவுடையம்மாள் (36). அதே தெருவில் வசித்து வரும் காளி மகன் சுப்பிரமணி. இவருடைய மகள் ராமலெட்சுமி, பிச்சை மகன் முருகானந்தம், முருகானந்தம் மனைவி கோவிந்தம்மாள், கோவிந்தன் மனைவி தமிழ்ச்செல்வி, மனோகரன் மனைவி தாயம்மாள் ஆகிய 6 பேரும் சேர்ந்து வேப்பங்கன்றுகளை நட்டுள்ளனர்.
அப்போது, ஆவுடையம்மாள் தன்னுடைய இடத்தில் ஏன் மரக்கன்றுகளை நடுகிறீர்கள் எனக் கேட்டுள்ளார். இதனால் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் ஆவுடையம்மாள் பலத்த காயமடைந்து முதுகுளத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இது குறித்து ஆவுடையம்மாள் கொடுத்த புகாரின் பேரில் முதுகுளத்தூர் காவல் நிலையத்தில் 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.