வேர்கள்
– க.து.மு. இக்பால், சிங்கப்பூர் –
அடங்கி இருப்பதால்
இன்னும்
வெட்டப் படாமல் இருக்கிறோம்
நீங்கள்
யார் யாரையோ சொல்வீர்கள்
‘மண்வாச மலர்கள்’ என்று
எங்களை மறந்து விட்டு
நாங்கள்
உறவுகளை மதிப்பவர்கள்;
அதனால்தான்
கிளைகளுக்கு அடிக்கடி
பூஅடை போர்த்துகிறோம்
நாங்கள் வெறும்
வேர்கள் அல்ல;
மண்ணையே வரையும்
தூரிகைகள்
மலரும் இலையும்
எங்கள் வண்ணங்கள் அல்ல;
எண்ணங்கள் !
நாங்கள் வரைவது
மரங்களை மட்டுமல்ல
அதன் நிழல்களையும்
உதிரும் ஒவ்வொரு சருகும்
பூவும்
எங்கள் கைகளுக்குத் திரும்பி வரும் –
மீண்டும்
கிளைகளில் சிறகுகள் விரிக்க !
பூமிக்குள் மூழ்கி
நாங்கள் மூச்சடக்குவது
நீங்கள்
சுவாசிப்பதற்காகவே !