கொரோனா நோய் காற்றின் மூலம் பரவும்.. உலக சுகாதார நிறுவனம் ஒப்புதல் ! அப்படியானால் ஒரு தெருவிலுள்ள நோயாளியிடமிருந்து வேறு ஒரு தெருவில் இருக்கும் ஒருவருக்கு காற்றின் மூலம் நோய் பரவுமா? ஓர் அலசல். முதலில் கொரோனா நோய் எப்படியெல்லாம் பரவுகிறது என்று பார்ப்போம். இது கீழ்க்கண்ட மூன்று வகைகளில் பரவுகிறது. 1 Droplet infection -நீர்த்திவலைகள் மூலம் 2. Droplet nuclei – நுண்திவலைகள் கருக்கள் மூலம் – இதைத் தான் நாம் காற்றின் மூலம் பரவுதல் என்கிறோம் 3. Fomites – தொடுபொருட்கள் மூலம். இவற்றை விரிவாகப் பார்ப்போம். அதாவது நோயுள்ள ஒருவர் இருமும்போதோ தும்மும்போதோ, பேசும்போதோ அல்லது பாடும்போதோ வைரஸ் கிருமியானது மூச்சுக் குழல் வழியாக வெளியேறுகிறது. அவ்வாறு வெளியேறும்போது மூச்சுக் குழலிலுள்ள காற்று, நீர் மற்றும் இறந்துபோன அணுக்கள் இவைகளுடன் வைரஸ் சேர்ந்து பல வகை அளவுகளில் உள்ள நீர்த்துளிகளாக வெளியேறுகிறது. இது வேறு ஒருவரின் மூச்சுக் குழலுக்கு நேரடியாகவோ அல்லது இந்தக் காற்றை சுவாசிப்பதன் மூலமாகவோ அல்லது இந்த வைரஸ் படிந்த பொருட்களைத் தொட்டுவிட்டு அதே கைகளைக் கொண்டு வாய், மூக்கு மற்றும் கண்களைத் தொடுவதாலோ சென்று நோயை ஏற்படுத்துகிறது. இந்த வைரஸ் அடங்கிய நீர்த்துளிகள் எப்படி அடுத்தவரின் மூச்சு மண்டலத்திற்கு செல்கிறது? இங்கேதான் இந்த நீர்த்துளியின் அளவு முக்கியத்துவம் பெறுகிறது. ஒரு நீர்த்துளியின் அளவு 5 மைக்ரானிற்கு (ஒரு மைக்ரான் அல்லது ஒரு மைக்ரோமீட்டர் என்பது ஒரு மில்லிமீட்டரில் ஆயிரத்தில் ஒரு பங்கு) மேற்படும்போது அதை நீர்த்திவலை (droplet) என்கிறோம். அதுவே 5 மைக்ரானுக்குக் கீழாகும்போது அதை நுண்திவலைகள் (droplet nuclei…