முதுகுளத்தூர் அருகேயுள்ள கிராம இளைஞர் ஐ.ஆர்.எஸ்., பணிக்கு தேர்வு
முதுகுளத்தூர் அருகேயுள்ள கிராமத்தை சேர்ந்தவர் 721வது ரேங்க் பெற்று ஐ.ஆர்.எஸ்., என்ற இந்திய வருவாய் பணிக்கு தேர்வாகி உள்ளார்.
பரமக்குடி அருகே வெண்ணீர் வாய்க்கால் கிராமத்தைச் சேர்ந்தவர் தர்மராஜ், 25. இவர் ஐ.ஏ.எஸ்., தேர்வில் 721 வது ரேங்க் எடுத்து, ஐ.ஆர்.எஸ்.,(இந்திய வருவாய் பணி) பணிக்கு தேர்வாகி உள்ளார். தற்போது பரமக்குடி முகமது அலி தெருவில் வசித்து வரும் இவரது தந்தை குருநாதன், மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையில் கண்காணிப்பாளராகவும், தாயார் சரோஜா, ராமநாதபுரம் நகராட்சியில் நகரமைப்பு ஊழியராக உள்ளனர்.
தர்மராஜ் கூறியதாவது: சிறு வயதில் இருந்தே, கலெக்டராக வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. தற்போது சென்னை ஸ்டேட் வங்கி அம்பத்தூர் கிளையில் புரபஷனரி ஆபீசராக, பணியாற்றி வருகிறேன். டில்லியில் உள்ள பயிற்சி மையம் ஒன்றில், 3 ஆண்டுகள் ஐ.ஏ.எஸ்., தேர்வுக்காக பயிற்சி பெற்றேன். இதற்கான தேர்வில் 721வது ரேங்க் பெற்று, ஐ.ஆர்.எஸ்., பணிக்கு தேர்வாகியுள்ளேன். இருப்பினும் கலெக்டராவதே லட்சியம், என்றார்.