மேலச்சீத்தை-முதுகுளத்தூர் சாலையை மேம்படுத்தித் தரக் கோரிக்கை
திருப்புல்லாணி, மேலச்சீத்தை கிராமத்திலிருந்து முதுகுளத்தூர் வரை செல்லும் சாலையை மேம்படுத்தி பேருந்துகள் செல்ல வசதி ஏற்படுத்தி தருமாறு கோவிலான் சாத்தான் கிராம பொதுமக்கள் ஆட்சியர் க.நந்தகுமாரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட திருஉத்தரகோசமங்கை அருகே உள்ளது கோவிலான் சாத்தான் கிராமம். இக்கிராமத்தில் உள்ள சிவந்திப்பூ களஞ்சியம் மற்றும் யமுனை களஞ்சியம் உள்ளிட்ட இரு மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த பெண்கள் மற்றும் அக்கிராமத்தில் வசிக்கும் பெண்கள் உள்பட சுமார் 100க்கும் மேற்பட்டோர் மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தின் போது ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
அக்கோரிக்கை மனுவில் மேலச்சீத்தை கிராமத்திலிருந்து முதுகுளத்தூர் வரை கடந்த 3 ஆண்டுகளாக ஆட்டோ கூட செல்ல முடியாத வகையில் சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. சில சமயங்களில் நோயாளிகளை கூட
கட்டிலில் வைத்துத்தான் தூக்கி வருகிறோம். சாலை மோசமாக இருப்பதால் பேருந்துகள் வருவதில்லை. பேருந்து வசதி இல்லாததால் பள்ளிகளில் பயிலும் மாணவ,மாணவிகள் அனைவரும் 3 கி.மீ.தூரம் நடந்தே வருகின்றனர். எனவே சாலையை உடனடியாக சீரமைத்து தருமாறு அம்மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
பழுதான சாலையை மேம்படுத்திட பரமக்குடி அரசுப்பள்ளி மாணவர்கள் வேண்டுகோள்:
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் கணேசன் என்ற மாணவர் தலைமையில் 5க்கும் மேற்பட்ட மாணவர்கள் முதுகுளத்தூர் தாலுகாவுக்கு உள்பட்ட வெங்கலக்குறிச்சியிலிருந்து மகிண்டி வரை செல்லும் சாலையை சீரமைத்து தரும்படி ஆட்சியரிடம் திங்கள்கிழமை நடந்த மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் கோரிக்கை மனு அளித்தனர். இச்சாலையை சீர்படுத்தினால் கருங்கலக்குறிச்சி, சூரன்குளம், மகிண்டி, மைக்கேல்பட்டிணம் உள்பட 4 கிராமங்களை சேர்ந்தவர்கள் பயன்பெறுவார்கள்.
சாலை மோசமாக இருப்பதால் பேருந்துகள் எதுவும் வருவதில்லை. எனவே உடனடியாக அச்சாலையினை சீரமைத்து தரும்படியும் கோரிக்கை மனு அளித்தனர்.