முதுகுளத்தூர் மக்கள் கோரிக்கை கிராமங்களுக்கு கூடுதலாக பஸ்கள் இயக்க வேண்டும்
முதுகுளத்தூர், : முதுகுளத்தூரில் உள்ள கிராமங்களுக்கு போதிய பஸ் வசதி இல்லாததால், ஆட்டோக்களில் அதிக பயணிகள் ஆபத்துடன் செல்ல வேண்டிய நிலை நிலவுகிறது. எனவே இக்கிராமங்களுக்கு கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முதுகுளத்தூரில் இருந்து காக்கூர், ஆதனக்குறிச்சி, புளியங்குடி உள்ளிட்ட வழியில் பல்வேறு கிராமங்கள் உள்ளன. இதில் ஒரு அரசு பேருந்தும் ஒரு மினி பஸ் மட்டுமே இயக்கப்படுகின்றன. இப்பகுதி குழந்தைகள் முதுகுளத்தூர், பரமக்குடி, ராமநாதபுரம், கடலாடி, கமுதி உள்ளிட்ட நகர்களில் தான் பள்ளி, கல்லூரி படித்து வருகின்றனர். பொது மக்கள் அனைவரும் அத்தியாவசிய தேவைகளுக்கும் செல்கின்றனர்.
இங்கு போதிய பஸ் வசதி இல்லாததால் பொதுமக்களும், மாணவர்களும் ஆட்டோக்களிலும் நடைபயணமாகவும் செல்கின்றனர். இவ்வாறு செல்லும் ஆட்டோக்களில் காலை, மாலை நேரங்களில் அளவுக்கு அதிகமாக மாணவ, மாணவிகளை ஏற்றி செல்கின்றனர். இதனால் விபத்து அபாயம் நிலவுகிறது. போலீசாரும் இதை கண்டுகொள்வதில்லை
இதனை தவிர்க்கும் வகையில் கிராமப்புறங்களுக்கு பேருந்துகளை இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து பள்ளி மாணவர் முத்துகுமரன் கூறுகையில், முதுகுளத்தூர் பகுதியில் உள்ள பல்வேறு கிராமங்களுக்கு போதிய பஸ் வசதியில்லை. பள்ளிகளுக்கு மாணவ, மாணவிகள் குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல முடியவில்லை. கிராமப்புறங்களுக்கு செல்லும் ஆட்டோக்களில் ஆபத்தான முறையில் பயணம் மேற்கொள்ளும் அவல நிலை நிலவுகிறது. இதனால் பல்வேறு விபத்துக்களும் ஏற்படுகின்றது. போதிய பஸ் வசதிகள் ஏற்படுத்த அமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.