முதுகுளத்தூர் பேரூராட்சிக் கூட்டம்
முதுகுளத்தூர் பேரூராட்சி உறுப்பினர்கள் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
இக் கூட்டத்துக்கு, பேரூராட்சி செயல் அலுவலர் ஆர். இளவரசி தலைமை வகித்தார். பேரூராட்சித் தலைவர் சசிவர்ணம், துணைத் தலைவர் பாசில் அமீன், பொறியாளர் முனியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவுநீரை கால்வாய் மூலம் வெளியில் கொண்டு செல்லவும், முக்கியமான தெருக்களில் புதிய குப்பைத் தொட்டிகளை வைக்கவும், அனைத்து வார்டுகளுக்கும் காவிரி கூட்டுக் குடிநீர் தங்கு தடையின்றி கிடைக்கவும், கட்டணக் கழிப்பறை, தினசரி சாலையோரக் கடைகள், வாரச்சந்தை ஆகியவற்றை ஏலம் எடுத்தவர்கள் அதற்கான தொகையை இம்மாதம் 30 ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என்றும், இல்லையெனில் மறுஏலம் விடப்படும் எனவும் விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில், மக்களவை உறுப்பினர் அன்வர்ராஜா தொகுதி நிதியிலிருந்து ரூ. 7 லட்சம் மதிப்பில், முதுகுளத்தூர் பேருந்து நிலையத்தில் உயர்கோபுர மின்விளக்கு அமைப்பதற்கான நிதியை வழங்கியமைக்கு நன்றி தெரிவித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பின்னர், ரூ. 2.80 லட்சம் மதிப்பில் புதிதாக வாங்கப்பட்டுள்ள 22 குப்பைத் தொட்டிகளும், குப்பைகளை அள்ளுவதற்கு ஒவ்வொரு வார்டுக்கும் என 30 தள்ளுவண்டிகளும் மற்றும் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரூ. 12 லட்சம் மதிப்பில் குப்பைகளைக் கொண்டு செல்வதற்காக வாங்கப்பட்டுள்ள புதிய டிப்பர் லாரியையும், பேரூராட்சித் தலைவர் சசிவர்ணம் கொடியசைத்துத் தொடக்கிவைத்தார்.