முதுகுளத்தூர் பகுதியில் பருவமழை பொய்த்ததால் கரிமூட்ட தொழிலுக்கு மாறிய விவசாயிகள்
முதுகுளத்தூர், : முதுகுளத்தூர் பகுதியில் பருவமழை பொய்த்ததால் விவசாயிகள் கரிமூட்ட தொழிலுக்கு மாறியுள்ளனர்.
முதுகுளத்தூர், கடலாடி தாலுகா பகுதியில் உள்ள பூக்குளம், இளஞ்செம்பூர், ஆப்பனூர், ஏனாதி, ஒருவானேந்தல், நெடுங்குளம், கிடாத்திருக்கை, சித்திரங்குடி, காக்கூர், பொதிகுளம், புளியங்குடி, கீழத்தூவல், புனவாசல், ஓரிவயல், கோட்டையேந்தல் உள்ளிட்ட பல கிராமங்களில் விவசாயமே பிரதான தொழிலாளக உள்ளது. தற்பொழுது விவசாயிகள் விவசாய பணிகள் துவங்கும் காலம் வந்தும் முறையாக விவசாய பணிகள் மேற்கொள்ள முடியாமல் தவித்து வருகின்றனர். தற்பொழுது பருவமழை இதுவரை பெய்யாமல் விவசாயிகள் கடும் திண்டாட்டத்தில் உள்ளனர். மேலும் ஒரு சில நாட்கள் லேசான மழை பெய்தது. இதில் விவசாயிகள் தங்கள் நிலங்களை உழவடை செய்து நெல் விதைப்பு பணிகள் மேற்கொண்டனர். போதிய மழை பெய்யாமல் விதைத்த நெல் இன்னும் சரிவர முளைக்காமல் உள்ளது. இதனால் விரக்தியடைந்த விசாயிகள் கருவேல மரங்களை வெட்டி கரிமூட்ட தொழிலில் ஈடுபட ஆரம்பித்துள்ளனர்.
இதுகுறித்து ஒருவானேந்தலைச் சேர்ந்த விவசாயி ஆனந்தன் கூறுகையில், ‘முதுகுளத்தூர் பகுதியில் இந்தாண்டு போதிய மழை பெய்ய வில்லை. சிறு மழையை நம்பி உழவடை செய்து நெல் விதைப்பு பணி மேற்கொண்டோம். பருவமழை பொய்த்து போனதால் முளைத்த பயிர்கள் கருக ஆரம்பித்து விட்டது. இதனால் விவசாயிகள் தங்கள் பணிகளை மேற்கொள்ளாமல் தவித்து வருகின்றனர். ஆண்டு தோறும் தங்கள் விளை நிலங்களால் கடனாளியாக மாறி வருகிறோம். அரசு விவசாயிகளுக்கான எந்தவிதமான பாதுகாப்பு நடவடிக்கையும் எடுத்த பாடில்லை. விவசாயத்தால் பாதிப்படையும் விவசாயிகள் கடன் தொல்லையால் தற்கொலை செய்யும் அளவிற்கு தள்ளப்படுகின்றனர். விவசாயிகள் இதற்காக அரசு வங்கிகளில் பயிர் காப்பீடு திட்டத்தில் இன்ஸ்சூரன்ஸ் செய்து வைக்கிறோம். அதையும் அரசு முறையாக வழங்குவதில்லை. விவசாயிகள் நலன் கருதி 2014-15ம் ஆண்டு வழங்கப்படாமல் உள்ள பயிர் காப்பீட்டு தொகையை வழங்க வேண்டும். இந்தாண்டு பருவமழை பொய்த்ததால் வாழ்வாதாரத்திற்காக கரிமூட்ட தொழிலுக்கு மாறியுள்ளளோம்’ என்றார்