முதுகுளத்தூர் பகுதியில் ஆபத்தான மின்கம்பங்கள் அச்சத்தில் பொதுமக்கள்
முதுகுளத்தூர் பகுதியில் ஆபத்தான மின்கம்பங்கள் அச்சத்தில் பொதுமக்கள்
சாயல்குடி, மே 3: முதுகுளத்தூர் பகுதியில் மின்கம்பங்கள், மின்வயர்கள் சேதமடைந்துள்ளதால், விபத்து ஏற்படும் முன் மாற்றி தரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். முதுகுளத்தூர் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. சுமார் 6 ஆயிரத்திற்கு மேற்பட்ட குடும்பங்களும், நூற்றுக்கணக்கான கடைகள், 10க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள், தாலுகா, யூனியன், சிறைச்சாலை உள்ளிட்ட அனைத்து துறை அரசு அலுவலகங்களும் உள்ளன. இங்கு சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு நடப்பட்ட மின்கம்பங்கள் சேதமடைந்து கிடக்கிறது.
செல்லியம்மன்கோயில் தெரு, ஆஸ்பத்திரி தெரு, அய்யனார்கோயில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் மின் கம்பங்களின் சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து விழுந்து, கம்பிகளின் துணையோடு எலும்பு கூடாக நிற்கிறது. காற்றிற்கு மின் கம்பிகளும் அடிக்கடி அறுந்து விழுவதாக கூறப்படுகிறது. இதனால் மின் கம்பத்திலிருந்து வீடுகளுக்கு வழங்கப்பட்டுள்ள மின் இணைப்பு ஒயர்களும் அறுந்து விழுகிறது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
இந்த அவலநிலை குறித்து முதுகுளத்தூர் மின்சார வாரியத்திற்கு பலமுறை புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. எனவே மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதுகுளத்தூர் பகுதிமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.